இப்போது இறுதியாக (இவ்விடுகை எழுதப்பட்டு முடிப்பதற்குள் சில கவிதைகளோ கட்டுரைகளோ அங்கு வெளிவந்திருக்கக் கூடும்) வந்த கவிதையைக் கீழே பாருங்கள்.
உனக்கு
பிடிக்காதது
எனக்கு
பிடித்திருந்தது
எனக்கு
பிடித்தது
உனக்கு
பிடிக்காதிருந்தது
ஆனாலும்
உனக்கு
என்னை
பிடித்திருந்தது
எனக்கு
உன்னை
பிடித்திருந்தது.
இன்றோ
உனக்கும்
எனக்கும்
நம்மை
பிடித்திருக்கிறதா?
இது 'ஒற்றையடி மட்டையடி விருத்தப்பா' எனும் வகையில் வரும் ஒரு வடிவம். தமிழச்சியின் முக்கால்வாசிக் கவிதைகள் இவ்வகையின. அதாவது ஒருவரியில் ஒருசொல் மட்டும் வருவன.
மிக அருந்தலாக 'மூவடி முட்டையடி சலிப்பா' வகையில் ஒரு கவிதை எழுதியுள்ளார். அதாவது ஒருவரியில் மூன்று சொற்கள் வரும்வண்ணம் எழுதப்பட்டது அக்கவிதை. அதிலும் கடைசிக்கு முதல்வரியில் இரண்டு சொற்களையும் கடைவரியில் நான்கு சொற்களையும் போட்டு ஓரிடத்தில் மட்டும் 'தளை' தட்டும்படி தவறு வந்துவிட்டது. அது கவிதை சுடும் அடைப்பலகையின் குறையோ தெரியவில்லை.
இவ்விடுகை அவரின் கவிதைகளைப் பற்றி விமர்சனமோ ஆய்வோ அன்று.
சரி, நான் இவ்விடுகை எழுதவேண்டி வந்த நோக்கத்தை விட்டுவிட்டு ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். (ஒருவரோடு தொடர்புபட்டு எழுதப்புறப்பட்டாலே அவரைப்போலவே எழுதத் தலைப்படுகிறோம். என்ன கொடுமையிது???)
நான் நீண்டகாலமாக ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அது என்னவென்றால், கவிதை எழுதுவதற்கான சொவ்வறை(அல்லது மென்பொருள் or Software; இதைச்சொல்லாவிட்டால் சொவ்வறைச் சொல்லுக்காகவே ஒரு மாமாங்கம் விளங்கப்படுத்திச் சாகவேண்டிவரலாம்.) ஒன்றைத் தயாரிப்பது.
பலவிதமான கவிதைகளைத் தரக்கூடிய சொவ்வறையாக அது இருக்க வேண்டும். பயனாளி தான் நினைப்பதை எழுதிக்கொடுத்துவிட்டால் அச்சொவ்வறை அவற்றை உடைத்து, சீரமைத்து 'கவிதை' போன்று தோன்றும்படி சொற்களை ஒழுங்கமைத்துத் தரவேண்டும்.
இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, குறள் வெண்பா, கலிப்பா, அருட்பா, மருட்பா என்று யாப்பிலக்கணம் பார்த்துக் கவிதை செய்வதற்கு முன்பு மிக எளிய வடிவத்தை முதலில் முயற்சிப்பதென்று தீர்மானித்தேன். அதன்படி குறிப்பிட்ட எண்ணிக்கையான சொற்கள் ஒருவரியில் வரும்படி சொற்களை அடுக்குவது முதற்படியாக இருந்தது. தனக்கு வேண்டியதை எழுதிக்கொடுத்துவிட்டு ஒருவரியில் எத்தனை சொற்கள் வேண்டுமென பயனாளி குறித்துவிட்டால் அம்மென்பொருள் சொற்களுக்கிடையிலிருக்கும் இடைவெளியைக் கருத்திற்கொண்டு அதன்படியே சொற்களை அடுக்கித் தந்துவிட வேண்டும். அதாவது space bar விசையின் பெறுமானம் வருமிடங்களைக் கவனித்து இதைச் செய்ய வேண்டும்.
அந்தோ பரிதாபம், முதற்கட்டத்திலேயே எனது திட்டம் தோல்வியைத் தழுவியது.
'சீச்சீ இந்தப்பழம் புளிக்கு'மென்ற நிலையில் இதைக் கைவிட்டுவிட்டேன். ஆனால் தமிழச்சியின் கவிதைகளைப் பார்த்தபோது அவரும் இதுபோல் ஒரு மென்பொருள் பயன்படுத்துகிறார் என்பதை உணர்ந்தேன். தொடர்ச்சியாக அவரின் கவிதைகள் 'ஒற்றையடி மட்டையடி விருத்தப்பா'வாகவே இருந்தது இதை உறுதி செய்தது.
எனவே இப்போது அவரிடம் பகிரங்கமாகவே வேண்டுகோள் வைப்பதென்று முடிவெடுத்துவிட்டேன்.
தமிழச்சி!!!
தமிழிலக்கியத்தின் நன்மை கருதி, எதிர்கால தமிழ்க்கவிஞர்களின் நன்மை கருதி நீங்கள் பயன்படுத்தும் அந்தச் சொவ்வறையை (மென்பொருளை) வெளியிடுவீர்களா? நீங்கள் மட்டுமே தனியாக எவ்வளவு காலம்தான் எழுதிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? நாங்களும் 'கவிதை' எழுத வேண்டாமா?
இப்படியான மென்பொருள் பாவித்து வரிக்கொரு சொல்லாக எழுதியிருந்தால், சரிநிகரில் வெளிவந்த கோணேஸ்வரியின் கொலையைப் பாடிய கலாவின் கவிதை "இது கவிதையாம்" என்று உங்களிடமிருந்து ஏளனத்தையும் திட்டையும் பெற்றிருக்குமா?
ஏனைய கவிதைகளும் (கவனிக்க: இவ்வரியிலும் இதற்கு முந்தியவரியிலும் கவிதையென்பது மேற்கோளிடப்படவில்லை.) உங்களிடமிருந்து இவ்வாறான திட்டுக்கள் வாங்குவதைத் தவிர்க்கவாவது அந்தச் சொவ்வறையை வெளியிடுங்களேன்.
Please!!!