Tuesday, June 03, 2008

தாயக- தமிழகக் கலைஞர்களின் உருவாக்கத்தில் "எங்களின் கடல்"

தாயகக் கலைஞர்களும் தமிழகக் கலைஞர்களும் இணைந்து உருவாக்கிய "எங்களின் கடல்" பாடல் குறுவட்டு நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது.

புதுக்குடியிருப்பில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வுக்கு திரைப்பட வெளியீட்டுப்பரிவு பொறுப்பாளர் செழியன் தலைமை தாங்கினார்.

லெப். கேணல் நிசாந்தனின் துணைவியார் அமுதா பொதுச்சுடரினை ஏற்ற, முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தலைவர் செ.செல்வச்சந்திரன் ஈகச்சுடரிடனை ஏற்ற, முல்லை வலய - 01 காவல்துறை கண்காணிப்பாளர் கிருஸ்ணகுமார் மலர்மாலையை சூட்டினார்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் மகளிர் பொறுப்பாளர் பிரமிளா வெளியீட்டுரையினை நிகழ்த்த மதிப்பீட்டுரையினை விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார்.

குறுவட்டை கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான நரேன் வெளியிட, இரண்டு மாவீரரின் உடன்பிறப்பு நியூசன் பெற்றுக்கொண்டார்.

குறுவட்டின் கலைஞர்களுக்கு கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் மதிப்பளித்தார்.

தமிழகக் கலைஞர்களுக்கான தங்க விருதுகளை லெப். கேணல் நவம் அறிவுக்கூடப் பொறுப்பாளர் தேவன் வழங்க, கடற்புலிகளின் வடமராட்சி கிழக்கு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மலரவன், கடற்புலிகளின் மன்னார் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அண்ணாத்துரை, கடற்புலிகளின் முல்லைத்தீவு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்பழகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பருதி சிறப்புரை நிகழ்த்தினார்

இக்குறுவட்டுக்கான பாடல்களை

உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன்

கவிஞர் புதுவை இரத்தினதுரை

கு.வீரா

வேலணையூர் சுரேஸ்

செந்தோழன்

புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்தப் பாடல்களை தேவேந்திரன் இசையமைக்க, தென்னிந்தியப் பாடகர்களான

பாலசுப்பிரமணியம்

உன்னிகிருஸ்ணன்

கார்த்திக்

சுஜாதா

தி.லோ.மகாராஜன்

மாணிக்கவிநாயகம்

கல்பனா

மனோ

திப்பு

சத்தியன்

எஸ்.எம்.சுரேந்தன்

ஹரிஸ் ராகவேந்திரா ஆகியோர் பாடியுள்ளனர்.