Wednesday, November 29, 2006

நன்றி இந்தியா..

ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்கள்இ பொருளாதாரத் தடை மற்றும் பட்டினி அவலங்களைக் கண்டித்து ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தக் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐப்பான் நியூசிலாந்து சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை முன்வைத்தனர்.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் உரிமைகளுடன் வாழ்வதற்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர்கள் இரும்புச் சிறைக்குள் தமிழ் மக்களை சிறிலங்கா வைத்திருக்கின்றது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

விவாதத்தின் போது சிறிலங்கா அரசுக்கு சார்பாகப் பேசிய பிரித்தானிய நாட்டுப் பிரிதிநிதி விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தை முன்வைத்தார். அவரின் கருத்தை மறுத்துப் பேசிய சுவிற்சர்லாந்தின் ஐ.நா. பிரதிநிதி தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தார். பின்னர் பிரித்தானியப் பிரதிநிதியின் கருத்து நிராகரிக்கப்பட்டு சுவிற்சர்லாந்துப் பிரதிநிதியின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அடுத்து பேசிய நியூசிலாந்து நாட்டுப் பிரதிநிதி தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்ட இனமாக இருக்கின்ற போதும் அவர்கள் உறுதி குலையாதவர்களாக இருப்பதாகவும் அவர்களுக்கு மனித உரிமைகள் என்ற அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு சர்வதேச சமூகம் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதனையடுத்து ஜப்பானியப் பிரதிநிதி தமிழ் மக்களின் நியாயமான குரல்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் இதற்கான முழு உத்தரவாதத்தை சிறிலங்கா அரசு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்கா விட்டால் சிறிலங்கா அரசு மீது பாரிய பொருளாதாரத்தடையை ஜப்பான் கொண்டு வர நேரிடும் என்ற எச்சரிக்கையையும் ஜப்பானியப் பிரதிநிதி விடுத்தார்.

இனிதான் நாம் இந்தியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆம் இந்தக் கண்டனத்தீர்மானத்தில் இந்தியா சிறிலங்கா அரசு சார்பான நிலையை எடுத்து சிறிலங்காவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறது. அதாவது சிறிலங்கா அரசு மனித உரிமைகளை மதிக்கிறது என பக்கத்து நாடு பரிந்து பேசியிருக்கிறது.

நன்றி இந்தியா..
கோடி நன்றி

மாவீரர்நாள் உரையில் ஏமாற்றிய பிரபாகரன்

உலகத் தமிழரையும் ரஜனி ரசிகர்களையும் ஏமாற்றிய தலைவர்.

'உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும்' என்ற அடைமொழியுடன் கொஞ்சநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மாவீரர்நாள் உரை முடிந்துவிட்டது.
பலதரப்பட்டவர்களிடமிருந்து பலதரப்பட்ட கருத்துக்கள். பலருக்கு நிறைவையளித்து அவர்களின் எதிர்பார்ப்புக்களை ஓரளவாவது தீர்த்து வைத்துள்ளது அவ்வுரை. சிலருக்கு எரிச்சலையும் விசனத்தையும் கொடுத்துள்ளது.
பலதரப்பட்டவர்களுக்கு பலதரப்பட்ட உணர்வுகள் இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு விடயத்தில் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது பிரபாகரனின் இவ்வருட உரை.

அது என்ன விடயம்?

எதிர்பார்க்கப்பட்டபடி இலங்கையின் இப்போதைய நிலைவரம், அரசியற்சூழல், போர் நிலைமை என்பவற்றைச் சொல்லி, தமிழரின் பாடுகள், வேதனைகள் என்பவற்றைச் சொல்லி, இன்னும் பன்னாட்டு அரசியலையும் அவர்களின் கண்ணாமூச்சி விளையாட்டையும் குறிப்பிட்டு இறுதியில் புலிகளின் நிலைப்பாட்டையும் சொல்லியவிதத்தில், அவரின் உரை சரியானதே. ஆனால் எல்லோரும் எதிர்பார்த்த முக்கிய விடயமொன்றைப் பற்றி வாயே திறக்காமல் விட்டுவிட்டார்.

அது என்ன விடயம்?

உலகத் தமிழர்கள் அனைவரும் பிரபாகரனிடமிருந்து எதிர்பார்த்த கருத்து ஒன்றுண்டு.
கடந்த மாவீரர் நாள் உரையிலேயே தெளிவுபடுத்தவேண்டியிருந்தும் தவறவிட்ட 'சந்திரமுகி' படம் பற்றிய பிரபாகரனின் கொள்கை விளக்கவுரையை இவ்வருட மாவீரர் உரையிலாவது தருவார் என்ற 'உலகத் தமிழர்களின்' எதிர்பார்ப்பில் அவர் மண்ணைப்போட்டுவிட்டார்.
மேலும் வெளிவரவிருக்கும் 'சிவாஜி' படம்பற்றியும் எந்தவொரு சொல்தானும் சொல்லவில்லை என்றளவில் தமிழர்களை இன்னும் கடுப்பில் ஆழ்த்திவிட்டார்.

அந்தவகையில் 'சந்திர முகி' பற்றியும் இனி வெளிவரவிருக்கும் 'சிவாஜி' பற்றியும் எந்தவொரு குறிப்பையையும் சொல்லாமல் விட்டதன்மூலம் உலகத்தமிழர்களை ஏமாற்றியுள்ளார் பிரபாகரன்.

இதன்பின்னாலுள்ள அரசியல் சூட்சுமங்களை இனிவரும் காலத்தில்தான் நாம் அறிந்துகொள்ள முடியும்.


கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்
விளங்கப் புத்தியுள்ளவன் விளங்கட்டும்

Monday, November 27, 2006

விரைவில் எதிர்பாருங்கள்

விரைவில் எதிர்பாருங்கள்.

இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் உலக நாடுகள் புலிகளின் தலைவரின் உரையை கண்டிக்க இருக்கின்றன. அது தவிர புதிய ஜனநாயகப் புரட்சியை வேண்டுவோர் மற்றும் மாற்று (இயக்கக் காரர்) கருத்தாளர்களும் பிரபாகரனின் உரையை வரிக்கு வரி ஆராய்ந்து முட்டையில் மயிர் பிடுங்க இருக்கிறார்கள்.

ஆகவே நண்பர்களே அனைத்தையும் படித்து இன்புற இப்போதே தயாராகுங்கள்.

தனியரசை நிறுவுவோம் - வே.பிரபாகரன்

இலங்கை அரசின் கபடத்தனத்திற்கு நாம் பலியாகப் போவதில்லை

மகிந்தவிற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டது.

சுதந்திர தனியரசை நிறுவுவதென தீர்க்கமாக இன்றைய நாளில் உறுதியெடுக்கிறோம்

உலக நாடுகள் தமிழீழ தனியரசை அங்கீகரிக்க வேண்டும்.

தமிழக மக்களுக்கும் மற்றும் தலைவர்களுக்கும் நன்றி

உரையினை முழுமையாகக் கேட்க

என்ர அப்பா எதுவும் கொண்டு வாறேல்லை

கடைகளில எதுவுமில்லையெண்டு அப்பா சொன்னார். ஏன் எதுக்காக எண்டு காரணங்கள் சொல்லுகினம். ஆனா எனக்கெதுவும் விளங்கேல்லை. இனிப்புக்கள், பிஸ்கற்கள், பட்டர், பால்மா.. ஏன் முட்டை, மீன் இவையெல்லாம் எங்கை போயிட்டுதுகள்..

என்னை விரும்பிற ஆக்கள் எனக்கென்ன வேணும் எண்டு போனில கேட்கினம். என்னட்டை ஒரு பெரிய லிஸ்ற் இருக்கு. ஆனா அதை அனுப்பத்தான் ஒரு வழியும் இல்லை.

மூண்டு நாளைக்கு முன்னாலை என்ர நண்பன் தன்ரை அன்ரி தனக்கு பார்சல் அனுப்பியிருக்கிறதா வகுப்பறையில வைச்சு சொன்னான். அதுக்குள்ளை பால் மா, சீனி, பிஸ்கற், சவர்க்கார பவுடர் எல்லாம் இருந்ததாம்.அதை திறந்து பாக்க சீனியும் சவர்க்கார பவுடரும் ஒண்டா கலந்து கிடந்ததாம். எண்டாலும் பிஸ்கற்றும் பால்மாவும் தாங்கள் எடுத்தவையாம்.

என்ர அன்ரியும் நாங்கள் எப்பிடி இருக்கிறமெண்டு அறிய போன் பண்ணினவ. நான் அவவிட்டை பிஸ்கற்றும் பால்மாவும் அனுப்ப சொன்னனான். ஆனா சவக்கார பவுடர் அனுப்ப வேண்டாம் எண்டும் சொல்லியிருக்கிறன். இப்ப ஒவ்வொரு நாளும் தபால்க்காரனை பாத்துக்கொண்டிருக்கிறன்.

நேற்று என்ர அப்பா பாண் வாங்கிற கியுவில நிக்கிறதுக்கு போக பிந்திட்டார். அவருக்கு பாண் கிடைக்கவில்லை. நான் காலை எதுவும் சாப்பிடாமல்த்தான் பள்ளிக்குடம் போனன். இடைவேளைக்கும் எதுவும் சாப்பிட இல்லை.

இண்டைக்கும் வழமை போல காலமை 5 மணிக்குத்தான் ஊரடங்குச் சட்டம் எடுத்தவை. சனம் எல்லாக் கியுவிலையும் நிக்கினம். கப்பல்ல கொழும்பு போறதுக்கு ஒரு கியு, சாமான் வாங்க ஒரு கியு, மண்ணெண்ணை வாங்க ஒரு கியு. என்ரை அப்பாவும் விடிய பாண் வாங்கிறதுக்கு கியுவில நிக்கப் போனார். அவர் ஒரு பாண்துண்டோடை வந்தார்.

நான் அதில ரண்டு துண்டைச் சாப்பிட்டு விட்டு ஒரு துண்டைப் பள்ளிக்குடம் கொண்டு போனன்.

இன்ரெர்வெல் நேரம் நான் என்ர பாண் துண்டு வைச்சிருக்கிற பெட்டியை திறந்தன். அதை பக்கத்தில இருக்கிற என்ர நண்பி எட்டிப் பாத்தா.. பாவம் அவ.. அவ இன்ரெர்வெலுக்குச் சாப்பிட ஒண்டும் கொண்டு வரேல்லை. அதோடை அவ காலையும் ஒண்டும் சாப்பிடேல்லையாம்.

அவவின்ர அப்பாவை ஆமிக்காரன் சுட்டுப் போட்டான். அதாலை காலைமை எழும்பிப்போய் கியுவில நிண்டு பாண் வாங்க அவவுக்கு ஆருமில்லை.

நான் என்ர பாண் துண்டை ரண்டா பிய்த்தேன். பிறகு என்ன நினைச்சனோ தெரியாது. முழுவதையும் அவவுக்கே குடுத்திட்டன். பாவம் இன்று முழுதும் சாப்பிட வில்லைத்தானே..

எனக்கு இப்ப பசிக்குது. எனக்கு பசித்தாலும் பரவாயில்லை. அவவின்ர அப்பாவை சுட்ட மாதிரி என்ர அப்பாவையும் ஆமி சுட்டுவிடக் கூடாது கடவுளே..

Tuesday, November 21, 2006

குழப்பியின் கதை - கதையின் கதை

இதோ.. மாபெரும் மானுட சாசனம் என்றவாறொன்றும் அல்லாத உண்மைக்கதையை உங்களுக்கு சொல்ல விளைகிறேன்.

இந்தக் கதை ஒரு கறுப்புச் சரித்திரம்..

வரலாறு இப்போதே குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டிய (இப்போதில்லாவிட்டாலும் இன்னொரு நாளைக்கு) கதையிது.

வாருங்கள்..

சோதனைகளும் வேதனைகளும் நட்புக்களும் துரோகங்களும் நிறைந்த கொழுவி குழப்பி என்ற இருவரினது வாழ்க்கையையும் படியுங்கள்.

கதைக்கு முன்பாக கொஞ்சம் கதைக்கலாமா?

சமீபத்தில்..( நிஜமாகவே சமீபத்தில்) இலங்கையில் சண்டைநிறுத்தம் நிலவிய காலமது.

யுத்தத்தில் சனம் நித்தம் செத்துப்போக வில்லை..

எந்தச் செய்தி கேட்டும் மனசு வறண்டு விடுவதில்லை.. எப்போது யார் செத்தார் என்ற செய்தி வருமோ எண்ட கவலையில்லை..

அது கொஞ்சம் சந்தோசமாய் இருந்து விட்டுப் போங்கள் என கடவுள் கஞ்சத்தனத்துடன் கிள்ளி வீசிய காலம்..

சாவு பற்றிய எந்த சிந்தனையும் இன்றி இறங்கி நடந்த நேரம்..

இன்புற்றிருத்தல் என்ற ஒரு நோக்கில் மட்டுமே குழப்பி (அப்போது இந்த வலையின் பெயர் குழப்பி) உதயமாகிறான்.

மற்றவரைக் கலாய்ப்பது மட்டுமே முழுநேரத் தொழிலாயிருந்தது.

குழப்பி ஆரம்பித்த காலங்களில்த்தான் வலைப்பதிவுகளில் மிக மோசமான பின்னூட்டங்கள் வரத் தொடங்கியிருந்தன. அது பற்றிய ஒரு தொகுத்தலே குழப்பியின் முதற்பாகம் முடிவுற காரணமாயிருந்தது என்பதை கதையில் பார்க்கலாம். ஏனெனில் இது கதைக்கு முந்திய கதையல்லவா.

அப்போதைய காலத்தில் திரு டோண்டு அவர்கள் என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள் என்ற ஒரு பதிவு இட்டிருந்தார். இற்றை வரையும் தமிழ் வலையுலகில் ஓடிக்கொண்டிருக்கிற சுப்பர் டுப்பர் காவியம் அது. அவரது பெயரில் வேறும் சிலர் பின்னூட்டங்களை இட அது தொடர்பான எச்சரிக்கைப் பதிவு அது.

நாமும் ஒரு எச்சரிக்கை பதிவு இட்டோம். அது இது தான்..

Thursday, May 26, 2005
என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி

அன்பு வலைப்பதிவு நண்பர்களே,

இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன.

அந்த பின்னூட்டங்களை நான்தான் இட்டேன் என்பதையும் எனது பெயரை பாவித்து எவரும் அவற்றை இடவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


(டோண்டு அவர்களே குழப்பியை ஆரம்பிக்க ஒரு தூண்டுகோலாக இருந்தார். அது எவ்வாறென்பதை பின்னர் கதையில் பார்ப்போம். )

கதையின் கதை நீளும்..

Sunday, November 19, 2006

சின்னப்பெடியனா நான்?

பெடியங்கள் எண்ட யாரும் வாசிக்காத ஒரு பதிவில் கொழுவியை சின்னப்பெடியன்கள் எண்டு விளித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் கள்ள ஓட்டுப் போட்ட புலிகள் என்ற அவர்களது செய்தியை நாம் கிண்டலடித்தது குறித்து அவர்கள் அப்படி சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் தீவிரவாதிகள் எண்டும், வலைப்பதிவுகளை முடக்குவோம் எண்டும் புறப்பட்ட, பொடியங்கள் இப்ப பாசிசம் பற்றியும் புதிய ஜனநாயகப் புரட்சி பற்றியும் பேசுவது நல்ல வேடிக்கை. பாக்கப்போனால் இன்றைய நாளில் சனநாயகம், மக்கள் புரட்சி, பாசிச எதிர்ப்பு பற்றியெல்லாம் பேசுபவர்கள் முன்னாளில் தீவிரவாதத்தில் ஏதோ ஒரு வகையில் அங்கம் வகித்தவர்களே என்பதனால் பெடியங்களும் அதற்கு விதிவிலக்கல்லத்தானே.

கருத்து வெளியிடும் சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானதென்பத்திற்கூடாக, அவர்கள் பாசிச எதிர்ப்பு, புதிய ஜனநாயகப் புரட்சி, கூகிளில் கைவைத்த புலிகள், அமெரிக்காவில் கை வைத்த புலிகள், பிரபாகரனுக்கு உணவு அனுப்பும் இலங்கையரசு என பலதும் எழுதுவார்கள். ஆயினும் இவர்களின் எழுத்தினூடு மறைந்திருக்கும் நச்சினையும் வாசிப்பவனை முட்டாளாக்கும் நடவடிக்கையையும் அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர் என்பது பொடியங்களுக்கு வந்த பின்னூட்டங்களிலிருந்து தெளிவாகிறது.

மக்களே யதார்த்தத்தினையும் நடைமுறை வாழ்வியலையும் புரிந்து கொள்ளுங்கள் .
பட்டினியாலும் பசியாலும் துடிப்பவனிடத்தும் அடுத்த வினாடி செத்துவிடலாம் என்ற நிலைக்குள் வாழ்பவனிடத்தும் சித்தாந்தங்களும் தத்துவங்களும் செல்லாது.

பெடியங்களே.. நாம் சின்னப்பெடியள் தான்.

Thursday, November 16, 2006

என்னைச் செருப்பால் அடிக்கவும்

என்னை எல்லோரும் செருப்பால் அடிக்கவும் ஏனெனில் நான் இன்று வல்லவன் படம் பார்த்தேன்.

Thursday, November 09, 2006

அமெரிக்காவில் புலிகள் கள்ள ஓட்டு

மாற்றுக்கருத்து இணையமொன்றில் வெளிவந்த இச்செய்தியினை இங்கே இணைத்திருக்கிறேன். இதுதாம் இவர்களுடைய மாற்றுக்கருத்து வெளியிடுவதற்கான உரிமையாம்.

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வன்னிபுலி ஆதரவாளரான டேனிஸ் டேவில் 87 வீத கள்ளவாக்குகளை பெற்றுள்ளார். திருட்டுவாக்குகள் போடுவதில் கில்லாடிகளான வ.புலிகள், அமெரிக்காவிலும் அதனை நிலைநாட்ட தயங்கவில்லை. இலங்கையின் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தமது அடிவருடிகளான தமிழ்கூட்டமைப்பினரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வடகிழக்கின் ஜனநாய நடைமுறையை வ.புலிகள் மறுத்ததுடன், தமது பினாமிகளை கள்ளவாக்குகள் மூலம் பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பெருமைக்குரியவர்கள். அமெரிக்காவிலும் தமது ஆதரவாளரான டேனி டேவிஸ் என்பவரை வெற்றியீட்ட வைப்பதற்காக அங்குள்ள தமது பினாமிகள் மூலம் கள்ளவாக்கு வாங்கியை அமெரிக்காவிலும் வ.புலிகள் திறந்து வைத்துள்ளதாக தெரிவிக்கின்றன. இவரை எதிர்த்து போட்டியிட்டவர். டேனி டேவிஸின் புலி ஆதரவு நிலைப்பாட்டினை முன்நிலைப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதால். வன்னிபுலிகள் தமது ஆதரவாளரை வெற்றியீட்ட வைக்கவேண்டும் என்பதற்காகவே இவ் கள்ளவாக்கு வங்கியை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியதாகவும், இவ் வாக்கு வங்கியானது இலங்கையை கடந்து கனடாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது அங்கே தமது ஆதரவாளர்களிற்காக வ.புலிகள் அறிமுகப்படுத்தியிருந்தனர், அடுத்தவாரம் கனடாவின் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடவுள்ள தமது ஆதரவாளர்களான, இலகுப்பிள்ளை, சாண் தயாபரன், நீதன், தர்சிகா, லோகன் கணபதி, நடராஜ்குமார் போன்ற தமது பினாமிகளை வெற்றியீட்ட வைப்பதற்காக இவ் கள்ளவாக்குகளை இவ் முறையும் அதிகளவில் கனடாவில் புலிகள் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளமையால் கனடா அதிகாரிகள் இது விடயமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதே ஜனநாயகமாக தேர்தல் நடைபெறுவதற்கு சிறந்ததாகும் என எமது அமெரிக்கச் செய்தியாளர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியின்ர திறத்தில அமெரிக்காவில இருந்து செய்தியாளர் வேறை! ம்.. செய்திப்படி பார்த்தால் 87 வீத வாக்குகள் பெற்று வெல்கின்ற அளவுக்கு கள்ள ஓட்டு போடும் திறமை அமெரிக்காவிலும் புலிகளுக்கு உள்ளது என்பது தான்.
செய்தி நன்றி - நெருப்பு

கண்காணிப்பாளரை காப்பாத்த வேணும்

மட்டக்களப்பில் வாகரைப் பகுதிகளில் இலங்கை அரசு (அரசுதான்) நடத்திய எறிகணைத்தாக்குதலில் சிறுவர்கள் முதியவர்கள் உட்பட 45 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 100 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இலங்கையில் இப்போதெல்லாம் இது வழமையான செய்திகளாகி விட்டது. நோர்வேயோ அல்லது சமாதானவழி மூலம் தீர்வு காணச் சொல்கின்ற வேறு உலக நாடுகளோ இது பற்றி அரசிடம் விளக்கம் கேட்பதுமில்லை. கண்டனம் தெரிவிப்பதும் இல்லை.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இது துரதிஷ்ட வசமானது என்கிறார். துரதிஷ்ட சம்பவம் என அவரே ஒப்புக்கொண்ட பின்னர் அங்கு யுத்தத்தை கண்காணித்துக் கொண்டிருக்கிற (யுத்த நிறுத்தத்தை அல்ல) போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவோ இந்தத் தாக்குதல்களுக்கு காரணம் யாரென இது வரை சரியாக தெரியவில்லை. அநேகமாக இது அரசாங்கத்தின் வேலையாக இருக்கலாம். இருந்தாலும் அரசாங்கத்திடமிருந்து விளக்கம் ஏதும் வரவில்லை என மென்று விழுங்குகிறது.

வலிந்த இராணுவ நடவடிக்கை காரணமாக மூதூர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வாகரைப்பகுதியில் பாடசாலை ஒன்றில் தங்கியிருந்த 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களே இந்த அவலத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரும் விமானப்படையினரும் இணைந்து மேற்கொண்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்டோரின் 40 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் 125-க்கும் மேற்படடோர் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர் என்றும் அவசரகால மீட்பு அணியினரும் மருத்துவமனை பணியாளர்களும் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களில் ஆறு மாதத்திற்கு உட்பட்ட ஆறு குழந்தைகளும் அடங்குவர் என மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என விரும்புகின்ற இணைத்தலைமை நாடுகள் துணைத்தலைமை நாடுகள் பெரிய நாடுகள் இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்ற போதெல்லாம் அமைதியை கடைப்பிடிக்கின்றமை இப்போதெல்லாம் ஆச்சரியம் தருவதில்லை.



உண்மையில் யுத்த நிறுத்தத்தினை கண்காணிக்க சென்றவர்களே தங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அரசிடம் கோரிக்கை வைக்கின்ற இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் என்ன செய்து விட முடியும்? புநகரிப் பகுதிகளுக்கு சென்றிருந்த போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் மீது இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். பாவம்.. தனக்கான பாதுகாப்பையே அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை. மக்களுக்கான பாதுகாப்பை அவரிடம் எப்படி கேட்க முடியும்..