Friday, December 29, 2006

இந்தியா அமெரிக்காவின் மாநிலமாக

ஜடாயுவின் ஒரு பதிவினை இன்னு தான் பார்க்க நேர்ந்தது. அதில் இடம் பெற்றிருந்த ஒரு பின்னூட்டம் இலங்கையில் கொழுந்து விட்டெரியும் தமிழர் பிரச்சனைக்கு இது வரை சொன்ன சாத்வீக ஆத்வீக சமாதானத் தீர்வுகள் அனைத்திலும் ரொம்ப (நகை)ச் சுவையானது.

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே மொழி, உரிமைகள் போன்ற சுதந்திரம் வேண்டுமெனில், அவர்கள் தாங்கள் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைய விரும்புகிறோம் என்று சொல்லலாமே?

இலங்கை இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைவதுதான் இலங்கை வாழ் மக்களுக்கு நல்லது. தனிக்காட்டு ராஜாவாக இருக்க விரும்பு ராஜப§க்ஷ, ஈழத்தலைவர்களுக்கு அது உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம்.


ஆனால், இலங்கையில் இருக்கும் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் அதுதான் நல்லது.

இன்றில்லையேல் இன்னும் சில வருடங்களில் அதுதான் நடக்கும். அதனை யாராலும் தவிர்க்க முடியாது.

எட.. இப்பிடியொரு தீர்வு இவ்வளவு நாளும் எங்கடை தலைவர்மாருக்கும் எங்களுக்கும் தெரியாமல்ப் போட்டுதே. இதில மிகப் பெரும் பகிடி என்னெண்டால் அப்படி நாங்கள் மாநிலமா இணைஞ்ச பிறகு அதைப் பாத்து நேபாளம் பூட்டான் நாடுகளும் இந்தியாவோடு வந்து இணைவினமாம். பச்சையாச் சொன்னா உது அந்தக் காலச் சோழ சேர பாண்டியரின் நாடு பிடிக்கும் எண்ணத்தின்ர மிச்ச சொச்ச எண்ணம் தான்.

இதைப் படித்த உடனை எனக்கும் சில தீர்வுகள் தோன்றியது.
இந்தியாவில் வறுமை ஒரு முக்கிய பிரச்சனை. இதிலிருந்து விடுபட இந்திய மக்கள் தங்களை அமெரிக்காவுடன் இணைக்கச் சொல்லி கேட்கலாமே..Green Card ம் இலகுவாக கிடைக்கும். அவ்வளவும் ஏன் அடிமையாயிருந்தால் என்ன குறைஞ்சா போயிடுவம்.. இங்கிலாந்துக்கு கீழையே தொடர்ந்தும் இருந்திருந்தால் எல்லா வசதிகளும் கொண்ட (உண்மையாகவே) ஊழல் அற்ற ஆட்சியொன்று கிடைத்திருக்குமே..

இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. இந்தியா இலங்கை சிங்கப்பூர் அவுஸ்திரேலியா முதலான எல்லா நாடுகளும் அமெரிக்காவோடு இணைந்தால் நாடுகளுக்கு இடையில் ஒரு பிரச்சனையும் வராது. உலகத்துக்கு ஒரு நாடு உண்மையில நல்ல விசயம் தான். முதலில இந்தியா போய் இணைந்தால் வறுமைப் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காணலாம். அதனைப் பார்த்து நேபாளம் பாகிஸ்தான் முதலிய நாடுகளும் அமெரிக்காவோடு இணைய முன்வரும்.

ஆகக் குறைந்தது காஸ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காவது இந்தியா பாகிஸ்தானின் 15 மாநிலங்களானால் அது நல்ல ஒரு தீர்வைத் தரும்.

இறுதியாக

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே மொழி, உரிமைகள் போன்ற சுதந்திரம் வேண்டுமெனில், அவர்கள் தாங்கள் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைய விரும்புகிறோம் என்று சொல்லலாமே?

இந்தக் கேள்வியின் படி கட்டாயமான ஒரு சூழ்நிலை வருமென்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோமே.. கண்டிப்பாக இந்தியாவுடன் தான் இணைந்து கொள்ள வேண்டுமா..?
அவுஸ்திரேலியாவுடன் இணையலாமே..

Thursday, December 28, 2006

ஈழம் வீடியோ பாடல்

பச்சை வயலே என்ற இந்தப் பாடலுக்காக பிரத்தியேகமாக எந்தக் காட்சியையும் ஒளிப்பதியாமல் தினம் தினம் ஈழத்தின் காட்சிகளை மட்டும் கொண்டு பாடலுக்கு காட்சியமைத்திருக்கிறார்கள்.
காட்சியில் இடம் பெற்றிருக்கும் குண்டு வீச்சு காட்சிகளும் மக்களின் அவலச் சாவும் நிதம் நிதம் ஈழத்தில் நடக்கும் காட்சிகள்.
தேனிசை செல்லப்பாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலின் வீடியோ பதிவு இது


Friday, December 22, 2006

அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும்

டேய் ரங்கா வாடா வா!என்னமாதிரிப் போகுது பாடு?

மணியண்ணை! என்னத்தைச் சொல்லிறது? வயிறெரியுது.

ஏன்ராப்பா, மனுசி ஏதும் உறைப்பாத் தந்திட்டாளோ?

சும்மா விசர்க்கதை கதைக்காதையுங்கோண்ணை. நாட்டில உலகத்தில நடக்கிறதுகளைப் பாத்து எரியுது எண்டுறன்.

எட, அதையோ சொல்லிறாய். அப்பிடி எரியிறதுக்கு புதுசா என்ன தான் நடந்தது?

என்னண்ணோய் இப்பிடிச் சொல்லுறியள்?
அண்ணர்களின்,தம்பிமார்களின்-தோழர்களின்,நண்பர்களின் கூட்டமெண்டு பெரிய கூட்டமெல்லோ? உலகப்புகழ்பெற்ற டயானாவுக்கே இப்பிடியில்லையெண்டு வெள்ளையளே சொல்லுதுகளாம்.


நீ எதைச்சொல்லிறாய், எதுக்கு வயிறெரியிறாய் எண்டு எனக்குச் சரியாத் தெரியேல. சரி அதைவிடு... வாற ஞாயிறு வீட்டில கூழ் காய்ச்சிறன். வாவென் ஒருபிடி பிடிப்பம்.

அண்ணை, நீங்கள் கதைய மாத்தாதையுங்கோ. விளங்கியும் விளங்காத மாதிரி நடியாதையுங்கோ.

உன்னைப் போல அனுபவஸ்தானாலதான் பட்டும் படாமலும்,பல்லில நாக்குப்படாமல் கதைக்க முடியுது.எங்கேயடா தம்பி இப்படிப் படிச்சாய்?

ஓ, அண்ணோய் என்ர படிப்புப் பற்றிக் கேட்டுப்போட்டீங்க.உங்களுக்குச் சொல்லாட்டி...பிறகு பெயருக்கு முன்னாலயாவது தமிழுக்குள்ளாவது போடாமல் போனால் என்ர ஆத்துமா அந்தரிக்குமெல்லோ!அண்ணோய் மந்திகையில எம்.ஏ.பிறகு அங்கொடயில கலாநிதிப் பட்டம்.எனக்கும் கலாநிதியைச் சேர்ப்பீங்களோ?

அதுதான் நீயாய்ச் சேர்த்து ஏற்கனவே நாறிப்போயிட்டியே. நக்கலுக்கு மட்டும் குறைவில்லை. அவங்களெண்டாலும் கலாநிதிக்குப் படிச்சு கடசிவருசத்தை முடிக்காமல் விட்டாங்கள்.. அதுவும் ஏலாமல் விடேல, இடையில போராட்டப் பாதையைத் தெரிவுசெய்து படிப்பை முடிக்காமல் வந்திட்டாங்கள். எண்டாலும் அவங்களுக்கு கலாநதிக்கும் மேல அறிவும் திறமையும் இருந்தது.
நீ என்னத்தைக் கிழிச்சுப்போட்டு இங்கிலீசில இருவத்தாறு எழுத்தையும் அங்க இஞ்சையெண்டு மாத்திப்போட்டு டாக்குத்தர் எண்டு பட்டம் போட்டுக்கொண்டு அலம்பித் திரிஞ்சனி?

பத்ததாததுக்கு பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிறனெண்டும் சிலருக்கு டோஸ் விட்டுக்கொண்டிருந்தாய். டாக்குதர் வேலைக்குரிய மாதிரி ஒரு துரும்பாவது படிச்சனியோ? நீர் ஊருக்க உப்பிடி புழுகித் திரியேக்க அதையும் நம்பிக்கொண்டு, உன்னை ஆரோ வெருட்டினவங்கள் எண்டு நீ கதைவிடேக்க, உனக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு பெரிய கூட்டமே வந்ததுதான்.
உந்தளவுக்கு 'ஓட்டு மாட்டு' வேலைகள் செய்த உனக்கு மற்றவங்கள் பட்டம் குடுக்கிறதைப்பற்றி, அதுவும் தகுதிக்குரிய பட்டம் குடுக்கிறதைப்பற்றி நக்கலடிக்க என்ன அருகதை மோனே கிடக்கு?


சரிசரி, எதுக்கண்ணை இப்ப உதுகளைக் கிழறுறியள். நான் என்ன கதைச்சாலும் உதைச்சொல்லி குத்திக்காட்டிக்கொண்டிருக்கிறியள். நான்தான் பழசுகளையெல்லாம் மறைச்சுப்போட்டேனே?

அடடா! பழசுகளை மறைச்சுப் போட்டால் மட்டும் நீ அப்பாவியோ?
இந்த ஊருக்குப் புதுசா வந்த மனுசருக்கு வேணுமெண்டால் அதுகள் தெரியாமல் இருக்கும். ஆனா பழய மனுசருக்குத் தெரியாமலிருக்குமோ? மறந்துதான் போயிருப்பினமோ?


சரியண்ணை, அதை விடுங்கோ. அதுவொரு துன்பியல் சம்பவம். உவங்கள் ரெண்டொருபேர் உதைப்பற்றிக் கதைக்காமல் விட்டால் பிரச்சினைவராது.

அதுதான்ராப்பா பிரச்சினை. நீயும் உப்பிடி பட்டம் குடுக்கிறதைப்பற்றி வயித்தெரிச்சலில விழல்தனமா உளறாமல் இருக்கும்வரைதான் உன்ரபேர் சந்திசிரிக்காது.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

என்னடாப்பா சத்தத்தைக் காணோம்.
சரி, வாற ஞாயிறு மறக்காமல் கூழுக்கு வந்திடுது.
அங்க மிச்சத்தைத் தொடருவம்.


இல்லையண்ணை, நீங்களும் நாசுக்கா, பம்பல் பம்பலாக் குத்துறதில விண்ணன்.

ஏன்ராப்பா, உனக்கு மட்டும்தான் உப்பிடிக் குத்தத் தெரியுமெண்டோ இவ்வளவுநாளும் நினைச்சுக்கொண்டிருந்தனி?

*****************************
இங்கு நாசுக்காகக் குத்துவது மட்டுமே அனுமதிக்கப்படும்.
சிலவசனங்கள் அப்படியே திருடப்பட்டவை.

Friday, December 15, 2006

பாலாண்ணை நினைவுப் பாடல்

பாடல் இசை வர்ண இராமேஸ்வரன்
நன்றி தமிழ்நாதம் இணையம்


பாலாண்ணைக்கு தமிழகத்தின் இரங்கல் 2

தேசத்தின் குரல் பாலாண்ணையின் மறைவையொட்டி தமிழகத்தின் அரசியல் பிரமுகர்களின் இரங்கல் செய்திகளின் இரண்டாவது பதிவு
நன்றி பதிவு இணையம்
தியாகு



ராமகிருஸ்ணன்



இல கணேசன்



வைகோ


பரிசோதனை

பாலாண்ணைக்கு தமிழகத்தின் இரங்கல் என்ற பதிவை தமிழ்மணத்தில் இணைத்தால் புதிய இடுகைகள் எதுவுமில்லை என செய்தி வருகிறது. அதனால் இந்தப் பரிசோதனை.

பாலாண்ணைக்கு தமிழகத்தின் இரங்கல் 1

தேசத்தின் குரல் பாலாண்ணையின் மறைவையொட்டி தமிழக அரசியல் சமூக பிரமுகர்களின் கண்ணீர் அஞ்சலிகளை கீழே தொகுத்திருக்கிறேன்.
நன்றி பதிவு இணையம்

பழ நெடுமாறன்



சுப வீரபாண்டியன்



திருமாவளவன்



குளத்தூர் மணி


Thursday, December 14, 2006

மதியுரைஞர் பாலா அண்ணை நினைவாக

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இன்று லண்டனில் காலமாகினார். தமிழீழ தேசிய விடுதலைப் போரில் கடந்த 30 வருடங்களாக பக்கத் துணையாக இருந்து வந்த அவரது இழப்பு நிரப்பிக் கொள்ள முடியாத இழப்பாகும்.

பாலா அண்ணையின் நினைவாக அவர் கடந்த 2005 மாவீரர் தின நிகழ்வில் லண்டனில் ஆற்றிய உரையின் வீடியோ வடிவம் இது.


Thursday, December 07, 2006

மீள்பதிவு இடுவது எப்படி?

இதோ இப்படித்தான்

தரகு முதலாளித்துவமும் மனைவியும்.

அப்பப்பா என்ன வெயில்?
இதோ, இதிலிருக்கும் பொருட்களை எடுத்து வைப்பீராக.

என்னப்பா? சந்தைக்கெண்டு போய் எங்க சுத்திப்போட்டு வாறியள்?

நாம் எவ்விடமும் சுத்தவில்லை. நேரே சந்தைக்கு மட்டுமே போய் வருகிறோம். மனிதர்கள் நாங்கள் படும் வேதனை உங்களுக்கெங்கே தெரியப் போகிறது? சந்தைக்குச் செல்வதிலுள்ள இடர்பாடுகளும், குட்டி முதலாளிகளுடன் பேரம்பேசிப் பொருட்கள் வாங்க நாங்கள் படும்பாடுகளும் சொல்லுந்தரமன்றென்று நாம் அடிக்கடி இயம்புவது உங்கள் செவிட்டுக்காதுகளுக்கு ஒருபோதும் விளங்காதென்பது எமக்குத்தெரியாததல்லவென்பது நன்றாகத் தெரிந்தும் வேண்டுமென்றே சீண்டவும் கோபமேற்றவும் இயம்பப்படும் வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் பொருளென்னவென்பது தெரியாமல் வினவுவதாகச் சொல்லிக்கொள்ளும் உங்கள் வஞ்சகப்புத்திகளிற்றாம் நாம் தெளிவுறுகிறோமென்பதைச் சொல்….

போதுமப்பா. நான் என்ன கேக்க நீங்கள் என்ன சொல்லிறியள்?

நீங்கள் கேட்பதன் பொருளை முற்றிலுமாகப்புரிந்துதாம் நாம் பதிலிறுக்கிறோம்.

நிப்பாட்டுமப்பா.. என்ன நாம் தாம் தூம் எண்டு குதிக்கிறியள். அதுசரி நீங்கள் தனியத்தானே சந்தைக்குப் போனனியள்? இல்லாட்டி வேற ஆரோடயும்…?

ஆம். நாம் தனியேதாம் போய் வந்தோம். ஒரு மனிதனின் துன்பத்தைப் புரியாமல் அவன்மீது சந்தேகப்பட்டு துரோகிப்பட்டம் கட்டப்பார்க்கும் உம்போன்றவர்களினாற்றாம் நாம் பேச்சுச் சுதந்திரத்தையே இழந்துள்ளோமென்பதோடல்லாமல் தரகுமுதலாளிகளையும் குட்டி பூர்சுவா வர்க்கத்தையும் எதிர்க்கத்திராணியற்று…

போதும். போதும்…
அதுசரி, என்ன காய்கறியெல்லாம் இப்பிடி வாடிக்கிடக்கு?

இதுதாம் தொழிலாள வர்க்கத்தின் சாபக்கேடு. உழைக்கும் தொழிலாளிகளின்மேற்சவாரி செய்யும் தரகுமுதலாளிகளின் இயந்திரமான அடக்குமுறைகளினாற் கட்டுண்டுபோன வாழ்க்கையை வாழும் இருப்பிழந்த-உளமிழந்த-நிம்மதியிழந்த நிலையாகிப்போன வாழ்க்கையின் கொடிய பக்கங்களில் வாழ்ந்துவரும் தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை முடக்கும் தரகுமுதலாளிகளின் பினாமிகளான குட்டிப்பூர்சுவாக்களனினையெதிர்த்துச் செய்ய வேண்டிய போராட்டத்தின் ஓர் அங்கமாக புதிய ஜனநாயகப் புரட்சியைக் கைக்கொள்ளப்போகும் இவ்வர்க்கம் தொடர்ந்தும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் அவலநிலையின் வெளிப்பாடே இந்தச் சோகங்கள்.

எனக்கொண்டும் விளங்கேலயப்பா. சந்தையில ஏதும் பிரச்சினையே?

பிரச்சினைகள் எங்குதானில்லை? மனித இனம் தோன்றினதிலிருந்தே தொடங்கிவிட்ட உற்பத்திகளின்மீதான சொந்தம் கொண்டாடும் சண்டைகளின் தொடர்ச்சியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் உற்பத்திகளின் மீதான வன்முறையின் தொடர்ச்சியே தாம் இத்தகைய பிரச்சினைகள் என்று நாம் சொல்லும்போது, இப்பிரச்சனையின் வேர்களையும் அறிந்தாற்றான் நிவர்த்திகளும் செய்யமுடியுமென்பதைத் தெளிவாகப்புரிந்துகொண்டு புதிய ஜனநாயகப்புரட்சிக்குப் புத்தொளிபாய்ச்சி அப்போராட்டத்தை தரகுமுதலாளிகளை நோக்கிப் பாய்ச்ச வேண்டிய தேவையையும் எம் தோழர்களுக்கு நாம்தாம் தெளிவாகச் சொல்ல வேண்டும். பொருள்முதல்வாதக்கொள்கைளைச் சரியாகப்புரியாமற்றான் இன்று தரகுமுதலாளிகளுக்கெதிரான போராட்டத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட முடியாமற்றுன்பப்படுகிறோம். மூலதனமுடக்கலென்பதுத் திட்டமிட்டு பாட்டாளிகள்மேற் செலுத்தப்படும் வன்முறையென்பது தெரிந்தும் எம் தோழர்கள் காக்கும் மௌனம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதென்றாலும் இது பாசிசத்தின் விளைவானவொன்றென்பது தெரிந்தாலும் மானுடத்துக்கெதிரானவொருவுத்தியென்பதுப் புரிந்தாலும் தொழிற்றுறைக்கும் மானுடத்துக்குமெதிரான நிலையென்பதறிந்தாலும் பொருளாதாரப்பொறிமுறையின் மீதான அடக்குமுறைக்கெதிரானதென்பதுணர்ந்தாலும் கனிவளச்சுரண்டலையும் இத்தோடிணைத்துப்பார்க்க வேண்டிய தேவையிருப்பதாலும் ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டிய தேவையுண்டு.

நீங்கள் கதைச்சு முடியிறதுக்குள்ள நான் கறி வைச்சு முடிச்சிடுவன்.
நாம், தாம் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிறியள். ஆரப்பா உங்களோட சேந்த மற்றாக்கள்?

நாமென்பது நயமுள்ள வார்த்தை. அது இப்போது என்னையே குறிக்கும்.
நானென்பதை எப்போதொழிக்கிறோமோ அப்போதே மானுட விடுதலை பிறக்குமென…

ஆராவது சொல்லியிருப்பினம்.
எனக்கெதுக்கு அதெல்லாம்.
நீங்கள் ஏதாவது தமிழ்ப்பேச்சாளராய் இருந்திருக்கலாம்.
சொல்லிப்போட்டன், இனி என்னோட இப்பிடி நாம் தாம் தூம் எண்டு குதிச்சுக்கொண்டு நிண்டியளெண்டா இனி சாப்பாடு கிடைக்காது.

ஆம். இதுதாம் தரகுமுதலாளிகளினதும் பூர்சுவாக்களினதும் பொறிமுறை. உழைக்கும் மக்களுக்கு உணவை மறுத்து அவர்களை அடிப்பணிய வைத்து அவர்களின் சிந்தனையை முடக்கும் பொறிமுறை, மனித விழுமியங்களைப் பொசுக்கும் பாசிசம், அடக்குமுறை, ஏகாதிபத்தியம். இதைத் தீர்த்துக்கட்டத்தான் அறிவுஜீவிகள் எல்லாரும் சேர்ந்து உளமொப்பிய புதிய ஜனநாயகப்புரட்சி தொடங்கு.. க்கே…க்கே…க்கே...

என்னப்பா விக்குதோ? இந்தாங்கோ. சோடாவக்குடியுங்கோ.

இல்லை. இது ஏகாதிபத்தியங்களின் திட்டமிட்ட க்கே.... திட்டமிட்ட சந்தைப்படுத்தற்பொறி க்கே.. பொறிமுறைப்பண்டம். ஏழைகளின் க்கே.. மேலேவப்படும் அராஜகம்.. க்கே.. பச்சைத்தண்ணியிருந்தாத் க்கே.. தாரும்.

Sunday, December 03, 2006

யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது?

யாழ்ப்பாணத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என அகரனும் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என சூரமணியும் பதிவிட்டிருந்தனர். என் பங்குக்கு நானும் ஒரு பதிவிட விரும்புகிறேன். யாழ்ப்பாணத்தில் இப்போது ஆடு மாடு நாய் கோழி என்பன நடக்கின்றன. அது தவிர நடப்பன வகையைச் சேர்ந்த அனைத்து விலங்குகளும் நடக்கின்றன. இப்ப வாகனங்களுக்கு பெற்றோல் மண்ணெண்ணையில்லாததால் சனமும் நடக்கினம்.