Friday, September 16, 2005

ஊரோடின் ஒத்தோடு!

எல்லாரும் அமோகமாப் படம் காட்டிக்கொண்டிருக்கிறாங்கள்.
உந்த நேரத்தில நான் பேசாமக்கிடந்தா வலைப்பதிவுகளிலயிருந்து அடிச்சுக் கலைச்சுப் போடுவாங்களோ எண்டு பயந்து போனன்.
உடன என்ர கமராவ எடுத்துக்கொண்டு ஓடினன், ஓடினன், ஓடினன்.
வாத்துக்களைக் காணுமட்டும் ஓடினன்.
கடசியல இதுகள் தான் அகப்பட்டிச்சு.













அப்பாடி ஒருமாதிரிப் பொருத்தமான படங்கள் போட்டாச்சு.
சின்னவனின்ர போட்டியில பங்குபற்றிற தகுதி இந்தப் படங்களுக்கிருந்தா இதுகளைச் சேத்துக் கொள்ளலாம்.
ஒருபடத்தில மட்டும் வேற ஆக்கள் நிக்கினம்.
அவயளக் கணக்கில எடுக்காதையுங்கோ.

அவசரத்தில எடுத்த படங்கள்.
கொஞ்சம் அப்பிடியிப்பிடித்தான் இருக்கும்.
சலிச்சுக் கொள்ளாதையுங்கோ.

Wednesday, September 14, 2005

அறிந்தும் அறியாமலும்- ஓர் அதிகாலை விடியல்



அறியாதார் செய்த நெகிழத்தில் விடிகிறது காலை.
அறியாதாரின் தாளினால் துடைத்தலுடன்
அறியாதார் கழுவிப் -பின்
அறியாதார் சுத்திகரித்த நீரின் கழுவலுடன்
விடிகிறது காலை.

அறியாதானின் கட்டுரை வாசிக்கலாம் கழியும்வரை.
அறியாதார் செய்தவைதான் எல்லாமென்றாலும்
அறியாதான் ஒருவன் போகான் எனக்காய்க் கழிவறை.
அறிந்தோ அறியாமலோ விடிகிறது காலை இப்படியே.
------------------------------------------------------------

நெகிழம்: பிளாஸ்ரிக்

Sunday, September 11, 2005

இரயாகரனுக்கு பதில்

வணக்கம். இரயாகரன்! தங்கள் பதிவில் இது பற்றி உங்கள் கருத்தென்ன எனக் கேட்டவிட்டு அங்கு பதிலிட உங்கள் team members இவர்களை மட்டும் அனுமதித்திருக்கிறீர்கள். நான் உங்கள் team member இல்லாத படியால் என்னால் அங்கு பின்னூட்டம் இட முடியவில்லை.

Comments on this blog are restricted to team members.
You're currently logged in as
கொழுவி who is not a team member of this blog.

ஆகவே இங்கு எனதில் பதிகிறேன்.

ராயகரன்! நான் அறிந்த வரை நிதர்சனத்தின் செய்தி கப்சா! முன்பே செய்தி வெளிவந்த மாதிரி நடந்த சம்பவம் தான் உண்மை. அதனை புலிகளின் ஊடகங்களை சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

நிதர்சனம் ஒரு லூசுத்தனமான இணையம். அதனை இணையம் என்று ஏற்றுக்கொள்வதே முடியாத காரியம். அதிலும் அதனை நீங்கள் புலிகளின் மைய ஊடகம் என்கிறீர்கள்.

புலிகளின் நிதர்சனம் பிரிவைச் சேர்ந்த சேரலாதன், அந்த இணையம் தவறான செய்திகளை பரப்புவதாகவும் தங்களுக்கும் அந்த இணையத்திற்கும் தொடர்பேதும் இல்லை எனவும் சில காலங்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

என்னைப் பொறுத்தவரை நிதர்சனம் ஒரு சின்னப்புள்ளை விளையாட்டுத்தளம்.

பாருங்கள், பேராசியருக்கு சப்போட் பண்ணுகிறோம் என புறப்பட்டு அந்தச் சிறுமி இதற்கு முன்பே 3 நபர்களுடன் தொடர்புற்றிருந்தாள் என எவ்வளவு வக்கிரமாக எழுதியிருக்கின்றனர்.

திரும்பவும் சொல்கின்றேன்.. நிதர்சனம் புலிகளுக்கு ஆதரவாக எழுதுகிறது என்பதற்காக அது புலிகளின் மைய ஊடகமாகி விடாது. அது ஒரு லூசுத்தளம்.

தவிரவும் உலகளாவிய ஊடகங்கள் நிதர்சனத்தில் இருந்து தான் செய்தியினை பெறுகிறன என்று எழுதியிருக்கிறிர்கள். நான் அறிந்த வரை என்னவோ நிலைமை தலைகீழாகத்தான் இருக்கிறது.

நிதர்சனத்தின் தற்போதைய செய்தி வெறும் கப்சா என்கிறார் வன்னியிலுள்ள புலிகளின் மைய ஊடகத்தை சேர்ந்த ஒருவர்.

Thursday, September 08, 2005

இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும் -3

கடந்த இரண்டு பதிவுகளுக்கும் வந்த எதிரிவினைகள் பார்த்தேன். புலிகளின் ஐனநாயக விரோத செயல்கள் படுகொலைகள் குறித்து எழுதினால், வரும் ஆபாச அருவருக்கத்தக்க பின்னூட்டங்கள் போலல்லாது(அவற்றையும் அவற்றை விட்டுவைப்பதையுமே புலி எதிர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள் என்பது வேறு விடயம். ) இந்த பதிவு குறித்து எழுதினவர்கள் பண்பாக பொறுமையுடன் எழுதியிருந்தார்கள்.

ஆயினும் கொழுவிக்கு ஒரு ஆதங்கம் இருக்கிறது. இதுவரை நாளில் புலிகள் கடந்த காலங்களில் செய்த படுகொலைகள் ஐனநாயக விரோத செயல்கள் குறித்து எத்தனை பதிவுகள் வந்திருக்கின்றன. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.

புலிகள் முஸ்லீம்களை கொலை செய்தார்கள், புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள், புலிகள் மாற்று இயக்கங்களை தடை செய்தார்கள்.. என இப்படி எத்தனை பதிவுகள்...

அப்போதெல்லாம் யாருமே எதற்காக நடந்த முடிந்தவற்றை மீண்டும் கிளறுகிறீர்கள்? இதனால் என்ன நேர்ந்து விடப் போகிறது? என கேட்கவில்லை.

இந்திய ராணுவத்தினரின் படுகொலைகள் குறித்த இந்த பதிவினை நிறுத்தச் சொன்னவர்களின் நேர்மை எங்கே வெளிப்பட்டிருக்குமென்றால், புலிகளின் நடந்து முடிந்த விரோத செயல்கள் குறித்த பதிவுகளையும் நிறுத்த சொல்லுமாறு கேட்டிருக்கும் போது மட்டுமே!

தவிரவும் பின்னூட்டம் ஒன்றில் இந்தியா எல்லாவற்றையும் மறந்து முன்னேற்றப் பாதையில் செல்கிறது என ஒருவர் சொல்லியிருந்தார். இன்றைக்கும் இந்திய றோ வாய்ப்புக் கிடைத்தால் பிரபாகரனை போட்டுத்தள்ள தயாராக இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அதிகார பலம் அதிகரித்தவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

இந்தப் பதிவினை இங்கே மீளவும் இட்டதன் நோக்கம் இன்னும் பல இந்திய சகோதரர்களுக்கு 'அமைதி காக்க' சென்ற எங்கள் படையினரை ஏன் ஈழத்தமிழர்கள் வெறுக்கிறார்கள்? ஏன் புலிகள் யுத்தத்திற்கு இழுத்தார்கள் என்ற கேள்வி இருக்கிறது.

ஆகக் குறைந்தது அவர்களுக்கு ஒரு Out Line ஆவது கிடைக்கும் என்ற நோக்கில் இதை வெளியிட்டேன். தவிரவும் இது ஒன்றும் இணையத்திற்கு புதிய பதிவல்ல.

எனக்கும் எங்களுக்கும் எல்லாவற்றையும் மறந்து போக விருப்பம். ஆனால் நீங்கள் மட்டும் நாங்கள் செய்த கொடூரங்களை மறந்து போங்கள். ஆனால் நாங்கள் உங்களின் கொடூரச் செயல்களை நினைவு வைத்திருப்போம் என்பது என்ன நியாயம்!

எவ்வாறெனினும் எங்கள் தலைவனை நீங்கள் கொன்றீர்கள், எங்கள் தலைவனை நீங்கள் கொன்றீர்கள் எங்கள் தலைவனை நீங்கள் கொன்றீர்கள் என விடாது தொடர்பவர்களுக்கும் எனக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும் என்பதால் இதனை இந்தப் பதிவினை நிறுத்தி விடுகிறேன்.

இனி வராது.

நண்பர்களுக்கு மீண்டும் ஒரு விடயம். இப்பதிவின் நோக்கம் இந்தியாவை மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கேட்பதல்ல!

இப்படியாக எங்களுக்கு நடந்தது. இத்தனை கொடுமைகளை நாம் அனுபவித்தோம் எங்களுக்கு உண்டாகியிருக்கக் கூடிய கோபத்தை ஆதங்கத்தை கொஞ்சமாவது புரிந்து கொள்ளுங்களேன் என்பதை வெளிக்காட்டவே!

மறக்கலாம். முதல் மனிதனாக கை நீட்டுகிறேன். பதிலுக்கு நீங்களும் பற்றிக் குலுக்குவீர்களா?


Wednesday, September 07, 2005

இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும்-2

எங்காவது இணையத்தளங்களிலிருந்து வெட்டி ஒட்டுவதும், ஒரு கட்டத்தில் ஒரு விவாதத் தளத்தினை உருவாக்கவே அவ்வாறு செய்தேன் என அறிக்கை விடுவதும், இப்பொதைய Style என்ற காரணத்தினால் கொழுவியும் வெட்டுகிறான் பின்னர் ஒட்டுகிறான். இதுவும் ஓர் திறந்த விவாத தளத்தினை உண்டாக்கவே என கூறிக் கொள்கிறான். யாராவது இதனை தக்க ஆதாரங்களுடன் மறுத்தால்( ஏதோ ஒரு பதிவை ஈழநாதன் வெட்டு ஒன்றாய் துண்டு இரண்டாய் மறுத்திருந்தாரே) அதனையும் வெளியிடுவோம். இதனை எழுதியவர் பழ.நெடுமாறன்.

இப்போதைக்கு இது தொடராக இங்கே வரும்.

இந்த நிகழ்ச்சி நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய இராணுவ பிரிகேடியர் சங்கர் பிரசாத் என்பவர் மக்கள் குழு உறுப்பினர்களைக் கூட்டிப் பின்வருமாறு கொக்கரித்தாராம்.

'இந்திய இராணுவம் மீது புலிகள் தாக்குதல் மேற்கொண்டால் உங்கள் ஊரை அடியோடு எரிப்பேன். நு}ற்றுக்கணக்கில் மக்களைச் சுட்டுத் தள்ளுவேன். இராமாயணத்தில் இலங்கை எரிக்கப்பட்டதைப் போல மீண்டும் இலங்கை எரியும். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் உலகின் 4 ஆவது பெரிய இராணுவம்"

அவர் மிரட்டியதைப் போலவே விரைவில் நடந்தது. அழகிய வல்லை நிகரம் சுடுகாடானது. அந்த சோக வரலாற்றினைக் கீழே தந்துள்ளேன்.

மினி வீடியோ சினிமா கொட்டகை ஒன்றில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த சுமார் 30 பேரை வெளியே கொண்டுவந்து நடுத்தெருவில் உச்சி வெயிலில் உட்கார வைத்தார்கள். அங்கு நின்ற ஒரு சீக்கிய சிப்பாய் திடீர் என இயந்திரத் துப்பாக்கி மூலம் படபடவென்று சுட்டான். அண்மையில் திருமணம் செய்துகொண்ட இராஜரத்தினம் என்பவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து மாண்டார்.

அவர் அருகில் இருந்த கருணாநந்தராஜா என்பவர் படுகாயத்துடன் கீழே விழுந்தார். அவர் மார்பில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அந்தப் பயங்கரங்களைக் கண்டு மற்றவர்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

மற்றொரு இந்திய இராணுவ சிப்பாய் அங்கிருந்த கடைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றித் தீயை வைத்தான். இதற்கிடையில் சடையாண்டி கோயிலுக்குள் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேரை வேறு சில சிப்பாய்கள் அடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

அவர்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது ஒரு ஜீப் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து கீழே குதித்த சிப்பாய்கள் திடீர் என்று நாலாபுறமும் தானியங்கித் துப்பாக்கிகளினால் சடசடவெனச் சுட்டார்கள். 40 வயதான சிவபாக்கியம், 60 வயதான தங்கராஜா ஆகியோர் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார்கள்.

முப்பதுக்கும் அதிகமானவர்கள் பலத்த காயத்துடன் கீழே சரிந்து விழுந்தார்கள். காயம் அடைந்தவர்கள் தண்ணீர், தண்ணீர் என்று கதறிக்கொண்டு இருந்தார்கள்.

இரத்த வெறி பிடித்த இந்தியச் சிப்பாய்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் மேலும் மேலும் தங்கள் நரவேட்டையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சிவபுர வீதி என்னும் தெருவை நான் பார்வையிட்டேன். அங்கு 10 வீடுகள் முழுவதுமாக எரிந்து நாசம் ஆகிக் கிடப்பதைக் கண்டேன். கோட்சேயின் மறுபிறவி இந்திய இராணுவ சிப்பாய்கள் வெறிக்கு இந்தியத் தலைவர்களின் படங்கள் கூடத் தப்பவில்லை.

நெடியகாடு என்னும் பகுதியில் கணபதி படிப்பகம் ஒன்று உள்ளது. அதில் ஐந்து அடி உயரமான மகாத்மா காந்தியின் உருவப்படம் தொங்க விடப்பட்டு இருந்தது. இந்திய சிப்பாய்கள் அந்தப் படிப்பகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்கள் தேசத் தந்தையின் படத்தையும் உடைத்து எரித்துவிட்டுச் சென்றார்கள். காந்தி அடிகளின் எரிந்து கிடந்த அலங்கோலமான படத்தை நானும் பார்த்தேன். காந்தியைச் சுட்ட கோட்சே மறுபிறவி எடுத்து வந்து காந்தியின் படத்தைக்கூட விட்டுவைக்கவில்லை.

அதைப் போல வர்ணகுலசிங்கம் அரசரத்தினம் என்னும் ஒரு வணிகன் பெரிய வீடு ஒன்றும் நாசப்படுத்தப்பட்டு இருந்தததை நான் பார்த்தேன். அவர் ஓர் இந்திய பக்தர். இந்தியத் து}துவராக இருந்த தீட்சித்தின் நெருங்கிய நண்பர்.

தமிழீழ மக்களின் பிரச்சினைகளை இந்தியாவினால்தான் தீர்க்க முடியும் என்று உறுதியாக நம்பியவர். 1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்தம் மனைவி பத்மலோசினி, தம் 5 பெண் குழந்தைகளுடன் தனியாக இருந்து குடும்பத்தை எப்படியோ சிரமப்பட்டு நடத்திக் கொண்டிருந்தார்.

அந்தப் பெரிய வீட்டில் வரவேற்பறையில் இந்திரா காந்தியின் ஆளுயர மூவர்ணப்படம் தொங்கவிடப்பட்டு இருந்தது. அந்த வீட்டிற்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் அதைப் பார்த்துக்கூடத் தங்கள் கொடுஞ்செயலை நிறுத்தவில்லை. வீட்டையே கொளுத்திவிட்டுச் சென்றார்கள். வித்தனை ஒழுங்கை என்னும் தெருவில் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கண்டபடி சுட்டு 8 பேரைப் படுகொலை செய்து, ஏராளமானவர்களைப் படுகாயப்படுத்தி விட்டுச் சென்றார்கள். இறந்தவர்களின் சடலங்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நடுவே மற்றவர்கள் அன்று நாள்கள்வரை அப்படியே பதுங்கி இருக்க வேண்டியிருந்தது.

வல்வெட்டித்துறை கிராமிய வங்கி முற்றிலுமாக எரிந்து சாம்பல் மேடாகிக் கிடந்தது. எந்தத் தெருவுக்கு நான் சென்றபோதிலும் அந்தந்த தெருக்களில் இந்திய இராணுவம் இழைத்த அட்டூழியங்களைப் பற்றியும், படுகொலைகளைப் பற்றியும் கண்ணீர்க் கதைகளை மக்கள் கூறினார்கள். வல்வெட்டித்துறையில் மட்டுமில்லாமல் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரணி, பொலிகண்டி ஆகிய இடங்களிலும் இந்திய இராணுவத்தினர் வன்முறை வெறியாட்டம் நடத்தினார்கள்.

ஊரணி அரசு மருத்துவமனையில் நு}ற்றுக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். இந்திய இராணுவம் அந்த மருத்துவமனையைச் சுற்றி வளைத்துக்கொண்டு யாரையும் வெளியே செல்லவிடவில்லை. அதே நேரத்தில் வீடுகளில் இருந்தும் கோயில்களில் இருந்தும் பலர் இராணுவத்தினரால் இழுத்து வரப்பட்டு மருத்துவமனைக்கு முன்னால் உள்ள தார்ச் சாலையில் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். மருத்துவமனைக்கு உள்ளே இருந்தவர்கள் வெளியில் உட்கார வைக்கப்பட்டவர்களின் கதி என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இருந்தார்கள்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைவரும் முகாமுக்குக் கொண்டு போகப்பட்டனர். வல்வெட்டித்துறை சந்தையில் இருந்து 100 மீட்டர் தெற்கே தெணிய அம்பை என்ற இடத்தில் பல வீடுகள் எரிக்கப்பட்டு அந்தத் தீ மேலும் பரவிக்கொண்டே இருந்தது.

(இன்னும் வரும்)

Tuesday, September 06, 2005

இந்தியா எப்பொழுது மன்னிப்பு கேட்கும்?-1

எங்காவது இணையத்தளங்களிலிருந்து வெட்டி ஒட்டுவதும், ஒரு கட்டத்தில் ஒரு விவாதத் தளத்தினை உருவாக்கவே அவ்வாறு செய்தேன் என அறிக்கை விடுவதும், இப்பொதைய Style என்ற காரணத்தினால் கொழுவியும் வெட்டுகிறான் பின்னர் ஒட்டுகிறான். இதுவும் ஓர் திறந்த விவாத தளத்தினை உண்டாக்கவே என கூறிக் கொள்கிறான். யாராவது இதனை தக்க ஆதாரங்களுடன் மறுத்தால்( ஏதோ ஒரு பதிவை ஈழநாதன் வெட்டு ஒன்றாய் துண்டு இரண்டாய் மறுத்திருந்தாரே) அதனையும் வெளியிடுவோம்.

இதனை எழுதியவர் பழ.நெடுமாறன். இப்போதைக்கு இது தொடராக இங்கே வரும்.

1975 ஆம் ஆண்டு நிடத்தப்பட்ட அவசரகாலக் கொடுமைகளுக்கு 1980ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா மன்னிப்புக் கேட்டார்.

1984 ஆம் ஆண்டு நிடைபெற்ற சீக்கியர்கள் படுகொலை நிகழ்ச்சிக்கு 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் மன்னிப்புக் கேட்டார்.

1989ஆம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்கு யார் எப்போது மன்னிப்பு கேட்பது?

1989 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 2-4 வரையுள்ள ன்று நாள்களிலும் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகள் வரலாறு காணாத துயர நகழ்ச்சி ஆகும்.

தம்பி பிரபாகரன் அவர்களையும் மற்றும் பல புலிகளையும் பெற்றெடுத்த ஊர் என்பதனாலும், இவ்வுூர் மக்கள் அனைவருமே புலிகளுக்கு முழுமையாக ஆதரவு தந்தவர்கள் என்பதனாலும் வல்வெட்டித்துறை மீது இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு மிகுந்த கோபம் இருந்தது.

அந்தக் கோபத்தை அவர்கள் தீர்த்துக் கொண்ட விதம் மிகக் கொடூரமானது. 1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 ஆம் நாள் இந்தியாவில் அமிர்தசரஸ் நகரத்தில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. மைதானத்தில் கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்களைப் பிரித்தானிய இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்தது. அந்தப் படுகொலையைத் தலைமை தாங்கி நடத்திய பிரித்தானிய ஜெனரல் டையர் 'சுட்டேன், சுட்டேன், குண்டுகள் தீரும்வரை சுட்டேன்" என்று கொக்கரித்தான்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய மக்களை அன்று கொதித்தெழ வைத்தது. ஆனால், இன்று அதே இந்திய நாட்டைச் சேர்ந்த இராணுவம் வல்வெட்டித்துறையில் மற்றொரு ஜாலியன் வாலாபாக்கை நடத்திக் காட்டியது.

ஜனதாதள தலைவர்களுள் ஒருவரும் என்னுடைய நண்பருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தப் படுகொலையை வியட்நாமில் நிடைபெற்ற 'மயிலாய்" படுகொலைக்கு ஒப்பிட்டார்.

வியட்நாமில் மயிலாய் என்ற இடத்தில் அமெரிக்க இராணுவம் நடத்திய காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் பற்றி அறிய நேர்ந்த போது உலகெங்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அமெரிக்காவிலேயே பத்திரிகையாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு இந்தக் கொடூரமான கொலைகளைப் பகிரங்கமாகக் கண்டித்தனர்.

ஆனால், வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகளை இந்திய அரசு திட்டமிட்டு மறைத்தது. இந்தியப் பத்திரிகைகளுள் பெரும்பகுதி இச்செய்தியை மறைப்பதில் ஒத்துழைப்புக் கொடுத்தன.

ஆனால், வல்வெட்டித்துறையில் இச்சம்பவம் நடந்த 13 நாட்களுக்குப் பிறகு அங்கு சென்ற இலண்டன் 'பைனான்ஸியல் டைம்ஸ்" பத்திரிகையின் டெல்லி நிருபர் டேவிட் ஹவுஸ்கோ இச்சம்பவத்தைப் பற்றிய விவரங்களை முதன் முதலாக ஆகஸ்ட் 17 ஆம் நாளன்று அவரது பத்திரிகையின் வாயிலாக அம்பலப்படுத்தினார்.

அதையடுத்து இலண்டன், 'டெலிகிராப்" பத்திரிகையின் டெல்லி நிருபர் ஜெரமி கங்ரான் என்பவரும் இச்செய்தியை வெளியிட்டார். இந்தியப் பத்திரிகைகள் இச்செய்தியை அடியோடு மூடி மறைத்தன.

வெளிநாட்டுப் பத்திரிகைகளில் இச்செய்தி பரபரப்பாக வெளிவந்த பிறகு செப்டம்பர் 3 ஆம் நாள் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்" சிறிய அளவில் இச்செய்தியை வெளியிட்டது.

இந்த முறை வல்வெட்டித்துறைக்கு நான் சென்றபோது இந்தப் படுகொலைகள் பற்றிய முழு விவரத்தையும் அறிந்துகொள்ள முயற்சி செய்தேன். வல்லை மக்கள் குழுவின் தலைவர் எஸ்.செல்வேந்திரா, செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் நடனசிகாமணி உட்பட பலரை நான் சந்தித்துப் பேசினேன். இப்படுகொலைகள் நடைபெற்று ஏறத்தாழ ஆறு மாதங்களுக்குப் பிறகு கூட அந்த அதிர்ச்சியில் இருந்து வல்லை மக்கள் மீளாததை நான் பார்த்தேன்.

1989 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 2 ஆம் நாள் வல்வெட்டித்துறை சந்தைச் சதுக்கத்தில் காலை 11 மணிக்கு யாரும் எதிர்பாராத விதமாக விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதில் 6 இந்தியப் படை வீரர்கள் இறந்ததுடன் 11 பேர் காயம் அடைந்தனர். இந்நகழ்ச்சியைத் தொடர்ந்து வல்வெட்டித்துறையைச் சுற்றி இருந்த அன்று இராணுவ முகாம்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் வெறியுடன் புறப்பட்டு வந்து வல்வெட்டித்துறையைச் சுற்றி வளைத்தனர்.

உடனடியாக ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினர். தொடர்ச்சியாக அன்று நாள்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டது. வீடுகளை விட்டு வெளியே வராமல் அச்சத்துடன் பதுங்கியிருந்த மக்களை வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பதறப் பதறச் சுட்டுக் கொன்றார்கள்.

மொத்தம் 63 பேர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டனர். நுற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கு முன்வந்த பிரான்சு மருத்துவக் குழுவினரை ஊருக்குள் நுழையவே இந்திய இராணுவம் அனுமதிக்கவில்லை.

தொடர்ந்து அன்று நாள்களாக இராணுவத்தினர் ஊரைச் சுற்றி முற்றுகையிட்டு இருந்ததால் இறந்து போனவர்களின் பிணங்களைக்கூட அப்புறப்படுத்த முடியவில்லை. பிணங்கள் அழுகிப்போன நிலையில் அந்தந்த வீடுகளுக்குள்ளேயே வைத்து உறவினர்களால் எரிக்கப்பட்டன.

கணவர் உடலை மனைவியும், மனைவியின் உடலைக் கணவரும், பெற்றோரின் உடலைப் பிள்ளைகளும், பிள்ளைகளின் உடலைப் பெற்றோரும் எரிக்க வேண்டிய அவலத்திற்கு ஆளாயினர். மொத்தம் 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் முழுமையாக எரிக்கப்பட்டுச் சாம்பலாயின. 12 மீன்பிடி படகுகள் நாசம் செய்யப்பட்டன. 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்பட்டன. பல வீடுகளில் தங்க நிகைகள், பணம், மின்னணுப் பொருள்கள் இந்திய இராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டன. ஏராளமான பெண்கள் மிக மோசமான முறையில் கற்பழிக்கப்பட்டார்கள்.

---- இன்னும் வரும்---


Saturday, September 03, 2005

காணாமற் போனோர் பட்டியல்

தமிழ்வலைப்பதிவுக் கூட்டத்தில் அண்மைக்காலத்திற் காணாமற்போனோரின் பட்டியலொன்றை இங்கே வெளியிடுகிறேன்.
இவர்களைக் கண்டுபிடிப்பவர்கள் எனக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சன்மானம் பேசித் தீர்க்கப்படும்.

சிப்பிக்குள் முத்து. (முத்தெடுக்கப் போயிருப்பாரோ?)
அல்வாசிட்டி விஜய் (அல்வா குடுத்திட்டாரோ?)
மரம் (யாராவது தறித்துவிட்டார்களோ?)
பெடியன்கள்(உள்ளே போட்டுவிட்டார்களோ?)

இவர்களைத் திரும்பி வரச்சொல்லி ஆராவது கண்ணீர்க் கவிதைகள் எழுதியனுப்பலாம்.
எனக்குக் கவித வராதுங்கோ.

இவர்களைவிட இன்னும் பலர் காணாமற்போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
கூட்டாகத் தேடுவோம்.

Thursday, September 01, 2005

கிளின்ரன் அடித்த வங்கிக் கொள்ளை.

உங்களுக்குக் கிளின்ரனைத் தெரிந்திருக்கும். அவர் செய்த வங்கிக் கொள்ளையொன்று அண்மையில் வெளிப்பட்டுள்ளது. ஜோர் காலிம் என்பவன் கிளின்ரனோடு முன்பு ஒன்றாக வேலை செய்தவன். அதைவிட ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அந்த நட்பு அவர்கள் வளர்ந்தபின்னும் இருந்தது. கிளின்ரன் அரச நிர்வாகத்தைச் செய்தபோதும் சாதாரண பிரஜை என்ற உறவும், ஜோர் செய்யும் தொழில் நிமித்தமான உறவும் அவர்களுக்குள் இருந்தது.

ஒருநாள் கிளின்ரனின் அந்தக் கொள்ளை அம்பலமானது. அவரின் நண்பனான ஜோர் காலிம் வங்கியொன்றை ஆயுதமுனையில் பலவந்தமாகக் கொள்ளையடித்தான். பின் பிடிபட்டுவிட்டான். இதில் ஏன் கிளின்ரன் சம்பந்தப்படுத்தப்பட்டார் என்று கேட்கிறீர்களா? பின்னே? அவருடைய நண்பர்(தொழில்முறை நண்பர்) செய்த பலவந்தக் கொள்ளைக்கு அவர் காரணமில்லாமற் போகமுடியுமா? இது என்ன லாஜிக் என்று கேட்டால், அது அப்படித்தான். அப்படித்தான் சொல்கிறார்கள். இந்தக் கொள்ளையை வைத்தே கிளின்ரன் கொள்ளையிட்டார் என்று தலையங்கம் தீட்டி ஊடகங்கள் கட்டுரைகள் எழுதின.

இந்த வாதத்தை இன்னும் வலுவாக்க அந்த ஊடகங்கள் (அதாவது நாங்கள்) என்ன செய்தன தெரியுமா? கிளின்ரனே பல கொள்ளைகளை நேரடியாக நடத்தினார் என்ற ஒரு கதையை அவிழ்த்துவிடுவது. கிளின்ரனை அறிந்த யாருமே இதைப் பார்த்துச் சிரிப்பார்கள் என்ற கவலை எங்களுக்கில்லை.(எங்கள் பெயரோடு ஒரு முனைவர் பட்டத்தையும் போட்டால் சிலர் எங்களைப் புத்திசாலிகள் என்று நினைக்கக்கூடும் என்பதற்காக அதையும் செய்தோம்) எங்களுக்குத் தேவை கிளின்ரனை எப்படியாவது மட்டந்தட்ட வேண்டும். அவ்வளவுதான்.

ஆக, கள்ளனைப் பற்றியோ, களவைப் பற்றியோ கட்டுரை எழுதாமல், நாம் யாரைத் தீர்த்துக்கட்ட நினைக்கிறோமோ அவனோடு இவன்(கள்ளன்) ஒருநாள் தேத்தண்ணி குடித்தான் என்று ஒரு கதை உருவாக்கி(அது உண்மையாகவுமிருக்கலாம்) நாம் நினைத்தவனைத் தாக்கிக் கட்டுரை வரையலாம். இதுவொரு ஊடக தர்மம். கிளின்ரன் விசயத்தில் அதுதான் நடந்தது.

குறிப்பு: கிளின்ரன் (சிலர் கள்ளன் என்றும் வாசிக்கலாம்)பற்றிப் பத்து வசனம் எழுதச் சொல்லிக் கேட்டதுக்கிணங்க, எழுதப்பட்டது இப்பதிவு.

பாத்திரங்கள் கற்பனையானவை.