Wednesday, December 28, 2005

விஜயகாந்துக்குச் செய்யப்பட்ட துரோகம்

'கப்டன்' எனச் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்துக்கு சினிமாச் செய்திகளை வெளியிடும் இணையத்தளமொன்று துரோகமி'ளை'த்துள்ளது.

சினிசெளத் என்ற இவ்விணையத் தளத்தில் நடிகர்களின் புகைப்படங்கள் இருக்கும் பகுதியில் 'கப்டனின்' பெயர் 'சாயாசிங்' என்று எழுதப்பட்டுள்ளது.
சாயாசிங் என்பவர் நடிகை என்று தெரிந்திருந்தும் 'கப்டனின்' படத்துக்கு அவர்பெயரைப் பயன்படுத்தியதில் நிச்சயம் ஏதாவது உள்நோக்கம் இருக்க வேண்டும்.

வீரமிக்க, அஞ்சாநெஞ்சன் விஜயகாந்துக்கு பெண்ணின் பெயரைப் போடுவதூடாக என்ன சொல்ல வருகிறார்கள்?
இதன்பின் ஆழமான அரசியற்சதியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
இதையெதிர்த்து கடும் போராட்டம் நடத்த எண்ணியுள்ளோம்.
விரைவில் அதற்கான அறிவித்தல்கள் வரும்.

இதேவேளை, இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு எதுவுமே செய்யாமல் 'ஜல்லி'யடித்துக்கொண்டிருக்கும் "மதுரைத் தருமி"யையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்காமல் 'தருமி'யென்ற பெயரென்னத்துக்கு?
'சிறை சென்ற செம்மல்' தருமியா இப்படி?

'மதுரைத் தமிழ'னின் மானம் காக்க
மீண்டுமொரு போருக்கு தருமியை அழைக்கிறோம்.

Sunday, December 04, 2005

இலங்கை நிலைமை மோசமடைகிறது.

அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்குக் கிழக்கில் நடைபெற்றுவரும் அசம்பாவிதங்கள் அதிகரித்துவருகிறது.

இவ்வளவுநாளும் கிழக்குப் பகுதிதான் சிக்கல் நிறைந்ததாய் இருந்துவந்தது. இருதரப்பிலும் மாறிமாறி கொலைகள் நிகழ்ந்துவந்தன. இப்போது அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது.

கைக்குண்டுத் தாக்குதல்களாக இருந்துவந்தவை இன்று கண்ணிவெடித்தாக்குதலாக மாறியுள்ளதுடன் இராணுவத்தினர் கொல்லப்பட்டுமுள்ளனர். 3 தினங்களுக்கு முன் இரு இளைஞர்கள் (இராணுவப் புலனாய்வுத் துறையால் என்று மக்கள் சொல்கிறார்கள்) சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நிலைமை கடுமையானது. மக்கள் வீதிகளை அடைத்துப் போராட்டம் நடத்தினர். தென்மராட்சியில் இராணுவ வாகனத் தொடரணி மறித்து திருப்பி அனுப்பப்பட்டது.

பின் கடந்த 3 நாட்களில் தென்மராட்சி, வடமராட்சியில் சில கைக்குண்டுத்தாக்குதல்கள் நடந்துள்ளன. சில இராணுவத்தினர் காயமடைந்திருந்தனர். இன்று கோண்டாவிலில் உழவுஇயந்திரத்தில் சென்ற இராணுவத்தினர் கண்ணிவெடியில் சிக்கியுள்ளனர். இதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் குறைந்தது 3 பேர் காயமடைந்துள்ளனர்.
நிற்க, திருகோணமலையில் தமிழர் - முஸ்லீம் தரப்பில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான அச்சம் நிலவுவதாக அறியப்படுகிறது.

நிலைமை வரவர மோசமடைகிறதென்றே படுகிறது. இதுபற்றி போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவிக்கையில்,
"There is a real danger that these disturbances and hostilities can spread and result in an irreparable deterioration of security

சீச்சீ. இந்தப் பழம் புளிக்கும்.

சிறிலங்காவின் பிரதமர் பதவி பயனற்றது அது எனக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க கூறியுள்ளார்.

இது தொடர்பாக அனுரா பண்டாரநாயக்க கூறியுள்ளதாவது:
சிறிலங்கா பிரதமர் பதவியை எனக்கு மகிந்த ராஜபக்ச அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் நடைமுறையை உணர்ந்தவன். முட்டாள் அல்ல.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எனது பெயர்தான் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறிலங்காவின் வரலாற்றிலேயே முதல் முறையாக கட்சியின் மத்தியக் குழு பரிந்துரைத்த நபர் அல்லாத வேறு நபருக்கு பிரதமர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மீண்டும் மத்தியக் குழுவில்தான் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை.

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக நியமித்ததில் எனக்கு வருத்தம் இல்லை. யாராக இருந்தாலும் பிரதமர் என்பவர் பயனற்றவர். வாகன வசதிகளோடு ஆடம்பரமாகச் சென்று திறப்பு விழாக்களுக்கும் ஆலயங்களுக்கும் செல்லத்தான் அந்தப் பதவி பயன்படும். அந்த வகையான பதவியை நான் விரும்பவில்லை. அதிகாரத்துடன் இயங்கக் கூடிய பதவிதான் நான் விரும்புவது.




எனக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நான் செயற்படவில்லை. கம்பஹாவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த வெற்றி பெறுவார் என்று அவரிடம் உறுதியளித்திருந்தேன். அதுதான் நடந்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி.யின் பொருளாதாரக் கொள்கைகளும் சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுக்களும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதுதான் மகிந்தவின் தேர்தல் பிரச்சாரத்தில் என்னை முழுமையாக ஈடுபட விடாமல் தடுத்தது.

ஒருகாலத்தில் ஜே.வி.பி.யை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைத்தது நான் தான். ஆனால் அவர்கள் எப்போதே ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலக முடிவெடுத்தார்களோ அப்போதே தனக்கும் ஜே.வி.பிக்குமான உறவு முறிந்துபோய்விட்டது.

சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு சந்திரிகா மீண்டும் வருவாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அது தொடர்பில் முன்பு என்னோடு கதைத்திருக்கிறார். பின்னர் அது குறித்து கதைப்பதில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் வரைதான அவருடன் தொடர்பில் இருந்தேன். அதன் பின்னர் அவரை தொடர்புகொள்ளவில்லை. சாதாரணமாக தொலைபேசியில் பேசுவதை சந்திரிகா தவிர்ப்பார். அது பாதுகாப்பற்றது என்றும் கருதுபவர் அவர். அதனால் அவரை நேரில்தான் சந்திக்க வேண்டும். அவரைச் சந்திப்பதற்கு காத்திருக்க வேண்டும்.

தென்னிலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை இனப்பிரச்சனை தொடர்பாக பெறுவதை விட அரசாங்கம் முதலில் தனது கொள்கையை வெளிப்படுத்த வேண்டும். அதனடிப்படையில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். தென்னிலங்கையின் லங்கா சம சமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இனப்பிரச்சனை தொடர்பான கொள்கைகள் நல்ல முற்போக்கானவை என்றார் அனுரா பண்டாரநாயக்க.

---------------------------------------

பிரதமர் பதிவி கிடைத்திருந்தால் கடைசிப்பத்தியல்
சொல்லப்பட்டவை எப்படியிருந்திருக்குமென்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
---------------------------------------
நன்றி:- புதினம்.

Saturday, November 19, 2005

வாழ்த்துக்கள் மகிந்த.. வாருங்கோ..

வாங்கோ மகிந்த.. வந்திட்டியள்.. வாழ்த்துக்கள்..

வாய் விட்டு சொல்லாட்டியும்.. நீங்கள் வாறது தான் எனக்கு விருப்பம்.

ஏன் என்று உங்களுக்கு தெரியும் தானே.. யுத்த நிறுத்தம் ஆராயப்படும் எண்டு சொல்லுறியள், தமிழருக்கு ஆழிப்பேரலை நிதி கிடைக்க வழி செய்கிற பொதுக்கட்டமைப்பை தடுக்கப் போவதாகவும் சமஷ்டி முறையில் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது எனவும் சொல்லியிருக்கிறியள்.

நல்லது. முதலில அதுகளை செய்யுங்கோ.. பார்த்துக் கொண்டிருக்கிறன்.

Monday, November 14, 2005

வசனம் தேவையில்லை!!!!!!

Image hosted by Photobucket.com
பி.கு 'கட்டுடல் தலைவனின் மேற்கண்ட படத்துக்கு வசனம் தேவையில்லை.

Thursday, November 10, 2005

யாழ் மருத்துவமனைப் படுகொலை.-4

யாழ் மருத்துவமனைப் படுகொலை.-3
யாழ் மருத்துவமனைப் படுகொலை.-2
யாழ் மருத்துவமனைப் படுகொலை.-1

அக்டோபர் 22 ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை இக்குழுவினர் தங்களின் மனவிசாரங்கள் அனைத்தோடும் தன்னந்தனியாக இரவுபகலாய் காயமுற்றோருக்குத் தேவையான சிகிச்சைகளைத் தைரியமாய் அளித்துவந்தனர். ஓர் அறுவைச்சிகிச்சை நிபுணர் கூறியதுபோல்,
"என்னுடைய மனைவிக்கும் எனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் என்ன நடந்தது என்றுகூட எனக்குத் தெரியாது. அவர்களை அகதி முகாமில் விட்டுவிட்டு வந்திருந்தேன். முதல் இரண்டு நாட்களுக்குப்பிறகு நாங்கள் குரூரமாகக் கொலை செய்யப்படப்போவதில்லை என்பது எங்களுக்குத் தெரிந்தது. அதுதான் பெரிய ஆறுதல். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில்... கத்தியின் மீது நடந்துகொண்டிருந்தோம் என்பது எங்களுக்குத் தெரிந்தது. எறிகணைகள் விழுந்து நோயாளிகள் தாக்குண்டபோது நான் முற்றாய் பொறுமை இழந்துபோனேன். ஆத்திரம் எனக்குள் பொங்கி வெடித்தது. நிலக்கண்ணி வெடிகளால் காயமடைந்த இந்திய இராணுவ வீரர்ரகளும் எங்கள் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப்பட்டார்கள் பூரணமாய்ச் சிதைந்துபோன நிலையில். அவர்களுக்குச் சிகிச்சையளிக்குமாறு எங்களைக் கேட்டனர். மருத்துவர்களாகிய எங்களுக்கு அவர்கள் ஆஸ்பத்திரிக்குள் வந்த கணத்திலிருந்து அவர்கள் நோயாளர்கள் மட்டுமே. அவர்கள் சிகிச்சையை நாடி நிற்கின்றனர். எங்களது கடமையோ அளவிறந்த முக்கியம் கொண்டன."

தன் துயரக்கதையைக் கொட்டி அவருக்கேயுரிய நகைச்சுவையுணர்வு விரவ அவர் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டபோது யுத்தத்தால் சிதையுண்டதுபோய்க்கிடக்கும் யாழ்நகரின் இந்த மருத்துவமனையில் மருத்துவ அக்கறை குறித்து உத்வேகம் வியாபித்து நிற்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.

இலங்கை அரசபடைகள் எம்மைச் சூழ்ந்திருந்த வேளையில் யுத்தகாலங்களில் கூட ஒரு மருத்துவமனை எவ்வாறு இராணுவத்தால் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியெல்லாம் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் முன்னர் விடுத்திருந்த பிரகடனங்களின் பின்னணியில் வைத்து நோக்கும்போது யாழ் மருத்துவமனைக்கு நேர்ந்த இந்த விஷப்பரீட்சை, இதற்குமுன் வேறு எங்குமே இப்படி நேர்ந்திராத ஒன்றாகும். பல கேள்விகள் விடைகளின்றி அந்தரத்தில் ஆடிக்கொண்டிருக்கின்றன. நோயாளிகளையும் மருத்துவர்களையும் ஊழியர்களையும் எச்சரிக்கை செய்வதற்கோ, அவ்விடத்தை விட்டு அகற்றுவதற்கோ, தனியே ஒதுக்கிவிடவோ எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படாதது ஏன்?
மருத்துவமனையைச் சுற்றிலும் ஏன் வளைத்து முற்றுகையிடவில்லை?
நோயாளர்களும் நோயாளர்களைக் கவனித்துக்கொண்டிருந்தவர்களும் கொல்லப்படுவதற்காகப் பின்தங்கி நின்றதுபோலிக்க, த்பி வெளியேறிக் கொள்ளக்கூடியவர்கள் ஆஸ்பத்திரியின் பின்வாயிலால் வெளியே சென்றுவிட வசதியாய் வெளிவாசல் திறந்துகிடக்க, இந்திய இராணுவம் முன்வாசல் வழியாக மட்டுமே நுழைந்தது ஏன்?

விடுதலைப் புலிகள் முன்பு அந்த மருத்துவமனையில் இருந்தார்கள் என்பது உண்மைதான். அவ்வாறே இருந்துவிட்டுப்போனாலும், ஒரு மகத்தான் தேசத்தின் தொழில் நுண்முறை மிகுந்த இராணுவம் சர்வதேச விதிமுறைகளைப் பற்றியோ, ஒருநாளுமே துல்லியமாக மதிப்பிட்டுக் கூறமுடியாத மனிதஉயிர்களின் பெறுமதியைப் பற்றியோ ஒருதுளிகூட அக்கறை காட்டாமல், எதிர்ப்புகள் எதுவுமே இல்லாத நிலையில் பொதுமக்களைக்கொண்ட ஒரு மருத்துவமனையைத் தாக்கிச் சிதறடித்தது ஏன்? இச்சம்பவம் குறித்து எந்தப் பொதுவிசாரணையும் இருக்க முடியாதென இந்திய அதிகாரிகள் தீர்மானித்துவிட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

இச்சம்பவத்தின்போது இந்திய இராணுவம் செயற்பட்ட விதம் பற்றி நிதானமாகவே சொல்வதானாற்கூட, அது தன்னுடைய கடந்தகாலப் பிரகடனங்களிலெல்லாம் வகுத்துக்கொண்டதாகச் கூறப்படும் நெறிமுறைகளுக்கு மிக இழிவாக நடந்துகொண்டது என்று நிச்சயமாகக் கூறலாம். யாழ் மருத்துவமனைக்குள் கொலைகள் நடந்தேறிக் கொண்டிருந்த சமயங்களிலெல்லாம் இந்தத் தாக்குதல் நடவடிக்கையைப் பொறுப்பேற்று நடத்திய இந்திய இராணுவத்தின் உயரதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு எதிரேயிருந்த கட்டங்களில்தான் முகாமிட்டிருந்தனர் என்று நேரிற்பார்த்த சாட்சியங்கள் கூறுகின்றனர்.

இந்திய இராணுவத்தினரின் அத்துமீறிய பிழையான நடவடிக்கைகள் பற்றி வரும் புகார்களை எல்லாம் இதற்கு முந்திய சமயங்களிலெல்லாம் முரட்டுத்தனமாக உதறித்தள்ளிவிடும் ஓர் உயர்மட்ட இராணுவ அதிகாரி சில மாதங்களுக்கு முன் (மருத்துவமனைப் படுகொலை நடந்தபின்) அபூர்வமாக ஒன்றை ஒப்புக்கொண்டார். அந்த மருத்துவமனைத் தாக்குதல் தொடங்கப்பட்ட சமயம் இராணுவம் பலவீரர்களை இழந்துவிட்டிருந்ததென்றும், அவர்கள் மிகப்பயந்து போயிருந்தனரென்றும் அவர் தெரிவித்தார். "மாலை ஆகிக்கொண்டே வரவர வேகமாக இருள்சூழ ஆரம்பித்தது. வானத்தில் கருமுகில்கள் திரண்டு வந்துகொண்டிருந்தன. யாழ்நகர் இருண்ட விநோதமான தோற்றம் கொண்டிருந்தது" என்றார்.
அச்சங்கொண்டிருந்த - சரியான முறையில் அறிவுறுத்தப்படாத - பொறுப்பான யாருடைய வழிநடத்தலும் இல்லாத - தமிழோ ஆங்கிலமோ இந்த நபர்கள், ஆஸ்பத்திரிக்குள் உயிர்ப்பிச்சை கேட்டுநிற்கும் குரல்கள், வேதனை முனகல்கள், சத்தங்கள் அனைத்தையுமே தங்களுக்கு எப்படியெப்படி எல்லாம் சரியென்று அர்த்தப்படுத்த முடியுமோ அந்த மாதிரியெல்லாம் விளங்கிக்கொண்டு நினைத்தபடி நடந்துகொள்ளத் தக்கதாக தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இராணுவவீரர்களுக்கு அவர்களின் உள்ளுணர்ச்சிகள் இருக்கத்தானே செய்யும் என்று எடுத்துக்கொண்டாலும், அவர்களைவிட அதிகம் பயந்து, அனாதரவான அப்பாவி மக்களின் மனநிலையை - உணர்ச்சிளைச் சிந்தித்துப்பார்க்க அவர்களுக்கு யாருமே கற்றுக்கொடுக்கவில்லை போலிருக்கிறது. பயம் என்பது உயிர்வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒன்று என்பதால், பெருந்தேசங்களின் நெறிசமைக்கும் தளபதிகளெல்லாம் பலநேரங்களில் பயந்துபோன தனிநபர்களே என்பதை ஒத்துக்கொள்வது இந்தியாவிற்கோ அல்லது வேறெந்த வலிமைவாய்ந்த நாட்டிற்கோ தலைகுனிவைத் தரும் ஒன்றாக நினைத்துக்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.

பலமாதங்கள் கழித்து சமயச்சடங்குகள் சகிதம் தாகூரின் வந்தே மாதரம் என்ற பாடலைப்பாடி இராணுவம் தங்கள் முகாம்களைக் கலைத்துக் கொண்டிருந்த சமயம் கப்டன் டாக்டர் சித்தத் டே விடைபெற்றுச் செல்லும் முகமாகத் தனக்குப் பரிச்சயமான ஒரு பழைய நண்பரைப் பார்க்க வந்திருந்தார். பார்ப்பதற்கு இளைய, நிதானமான, மென்மையாகப் பேசும் சுபாவத்தினராக அவர் காணப்பட்டார். இராணுவ மருத்துவரான இவர் மருத்துவமனை நிகழ்ச்சியில் இவர் வகித்த பங்குபற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அவரைப் பொறுத்தவரை அவர் ஆற்றிய பங்கு நிந்திப்பதற்குரியதல்ல.

நண்பரொருவரைப் பார்க்க வந்தநேரம் அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக தானியங்கி இயந்திரத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். "உங்களுடைய மருத்துவப் பணிக்கான கருவிகளில் ஒன்று அல்ல இது என நான் நம்புகிறேன்" என்று அவரின் நண்பர் தமாஷாகக் குறிப்பிட்டார். வெட்கத்தோடு மிகவும் தர்மசங்கடப்பட்டுப்போன அவர், "இல்லையில்லை. என்னுடைய சொந்தப் பாதுகாப்புக்காகத்தான் இதை வைத்திருக்கிறேன். என்னுடைய தொழில் சார்ந்த கருவிகளெல்லாம் பேக்கில் வைத்திருக்கிறேன்" என்று சீரியசாகப் பதிலளித்தார். அவரோடு உரையாடிக்கொண்டிருந்தவர், தான் வேடிக்கையாக ஏன் அப்படிச் சொல்லப்போனோம் என்று மனம் வருந்தினார். இதை யாருக்காவது சொல்லியிருந்தால் அவர் மனம் புண்பட்டுப்போயிருப்பார். நெஞ்சை வருத்தும் யுத்தத்தின் கரும்புகையினூடே மற்றவர்களின் மத்தியில் மனிதாபிமானத்தைத் தரிசிப்பதென்பது ஒரு வினோதமான அனுபவம்தான்.



--------------------------------------
நன்றி:- "முறிந்த பனை"
--------------------------------------
நேரமில்லாத காரணத்தால் இறுதிப்பகுதி தக்க காலத்தில் போடப்படவில்லை. நினைவு நாளின் காலம் கடந்துவிட்டாலும் தொடங்கப்பட்ட கட்டுரையை முடிக்க வேண்டுமென்ற காரணத்தால் போடப்படுகிறது.

இவை முறிந்தபனைப் புத்தகத்தின் 323 ஆம் பக்கத்திலிருந்து 333 ஆம் பக்கம் வைரயுமான பகுயிலிருந்து எடுக்கப்பட்டவை.

Wednesday, October 26, 2005

ஐரோப்பிய ஒன்றியத் தடை இல்லை.

விடுதலைப் புலிகள் ஐரோப்பாவுக்கு வர ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கவில்லை - சட்டவல்லுனர் உருத்திரகுமார்

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் ஜரோப்பாவிற்கு வருவதற்கு எந்த விதமான தடைகளும் ஜரோப்பிய யூனியன் போடவில்லையென்றும் சிங்கள அரச ஊடகங்களும் அவர்களுடன் தொடர்புள்ள ஊடகங்களும் போலியான பிரச்சாரத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ்சில் இயக்கிக் கொண்டிருக்கும் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே பிர பல சட்டவல்லுனர் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 நாள் பெல்ஜியத்தில் நடைபெற்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு ஐரோப்பிய ஒன்றிய பிதிநிதிகளிடம் மனுக் கையளித்து விட்டு திரும்புகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் சுமார் 2.30 மணி நேரம் இந்த பேச்சுக்கள் இடம்பெற்றன. தமிழர் தரப்பில் 10 பிரதிநிதிகள் கலந்து தமிழர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினர்.

விடுதலைப் புலிகளுக்கு ஜரோப்பிய நாடுகளும் ஜரோப்பிய ஒன்றியமும் பயணத்தடை விதிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உத்தியோக பூர்வ சந்திப்புக்களை மட்டும் மறு அறிவித்தல் வரை தவிர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்களே தவிர அவர்கள் எந்த ஒரு பயணத்தடையும் விதிக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை சமாதான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இலங்கை சமாதான முயற்சிகளில் தாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர் என்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்புக்களை ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்ப்பதானது சமாதானப் பேச்சுகளில் ஈடுபடும் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளின் சமனிலைத் தன்மையினைப் பாதிக்கும் என்றும் சமாதானப் பேச்சுக்களைப் பாதிக்கும் அரச இனவாதிகளுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் எதிர்காலத்தில் இத்தகைய நகர்வுகள் இருக்கக்கூடாது என்பதனையும் தமிழர் தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி பதிவு இணையம்
www.pathivu.com

Saturday, October 22, 2005

யாழ் மருத்துவமனைப் படுகொலை-3.

யாழ் மருத்துவமனைப் படுகொலை 1
யாழ் மருத்துவமனைப் படுகொலை 2

பகுதி 3
ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த இன்னொரு மருத்துவர் தொடர்ந்து கூறினார்.

"கதிரியக்கப் பகுதியிலிருக்கும் ஓய்வறையை விட்டு விலகிச்செல்லும் நடைபாதையில் நான் கிடந்தேன். என் கால்கள் வெளியே நீண்டு கிடந்தன. அவற்றின்மீது திறந்திருந்த ஜன்னலொன்றின் வழியே வந்துகொண்டிருந்த மாலைச் சூரியஒளி பட்டுக்கொண்டிருந்தது. பயத்தில் உறைந்துபோயிருந்த நான் என்னிடம் எந்தவித அசைவும் தெரிந்துவிடக்கூடாதே என்பதற்காக மரக்கட்டைபோலப் படுத்துக்கிடந்தேன். உண்மையில் நான் உயிர்தப்பியது பெரிய அதிஸ்டம்தான். அந்த இராணுவவீரர்கள் ஒரு கிரனைற்றை வீசி எறிந்திருந்தார்கள். அக்குண்டு வெடித்ததில் எனக்கு முன்னால் படுத்துக்கிடந்தவர்கள் எல்லாம் இறந்துவிட்டதைக் காலையில்தான் பார்த்தேன். குண்டுகள் வெடிப்பதைப்போல கிறனைற்றுக்கள் வெடித்துச் சிதறும்போது பயங்கரச் சத்தத்தை எழுப்பியது. பின் கட்டிடச் சிதறல்களும் பெருஞ்சத்தத்துடன் எங்கள் மீது படிந்தன. இறந்தவர்களிடமிருந்தும் காயமுற்றவர்களிடமிருந்தும் பெருகிவழியும் இரத்தத்தில் தோய்ந்து கட்டியாகும்.

"அந்த இரவுமுழுவதும் விழித்துக்கொண்டே படுத்துக்கிடந்த நான் பல்வேறு சத்தங்கள், குரலோசைகள், அவ்வப்போது எங்கள் தலைக்கு மேலால் சீறிப்பாயும் வேட்டுக்கள் அல்லது கிரனைற் எறியப்படும் சத்தம் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தேன். அம்மா டீ,...டீ...டீ... என்று ஒரு குழந்தை அழுவது கேட்டது. இன்னொரு குழந்தை கதறி அழுதது. ஒருவேளை அதன் தாய் இறந்திருக்கக்கூடுமென நினைத்தேன்.

"'என் கால்கள் விறைத்துப்போயிக்கிறது. நல்லாய்க் குளிர்ந்து போயிருக்கிறது. என் கால்களின் மேல் ஒரு பிணம் கிடக்கிறது. தயவு செய்து அதை யாராவது எடுத்துவிடுங்கள்' என்று ஒரு பெண்மணி கேட்டுக்கொண்டிருந்தார்.
"அப்பெண்மணியின் வலி முனகலைப்பொறுக்க முடியாமல்,
'யாராவது அவருக்குப் பக்கத்திலிருப்பவர்கள் அப்பிணத்தை எடுத்துதவினால் என்ன? உங்களுக்குக் காது செவிடா?'
என்று கத்தினேன். அந்தப் பெண்மணி தொடர்ந்து முனகிக்கொண்டிருந்தார். காலையில் அங்கு நிலவிய அமைதிக்கான காரணத்தை நான் அறியும்போது சுற்றியிருந்த எல்லோரும் அந்தப் பெண்மணி உட்பட இறந்துபோயிருந்தனர். ஒருவர் சிவபுராணத்தை வாய்விட்டுச் சொல்லிக்கொண்டிருந்தார். கூடவே ராஜீவ் வாழ்க, இந்திரா வாழ்க என்றும் கூவிக்கொண்டிருந்தார். காலையில் அவரும் கிரனைட் குண்டுக்குப் பலியாகக் கிடப்பதைக் கண்டோம். வேறுசிலர் கழிப்பறைக்குள் போய் உயிர்பிழைத்திருப்பதைக் கண்டோம். பின் எங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டோம்:
"இதையெல்லாம் கேள்விப்பட்டதும் மருத்துவமனை இயக்குநரும் மற்றவர்களும் உடனடியாக வந்து எங்களை ஆஸ்பத்திரியிலிருந்து அழைத்துச் செல்வார்கள். அவர்களெல்லாம் அகதி முகாமில் இருப்பார்கள். அநேகமாய் அவர்களெல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து முறையிட்டு சிலவேளை ஒருகுழுவாக வெள்ளைக்கொடிகள் ஏந்திக்கொண்டு வெளியே வரக்கூடும். அவர்கள் நம்மை மீட்பார்கள். நாங்கள் காலைவிடியும்வரை அவர்களுக்காகக் காத்திருப்போம்."

"எப்போது விடியுமென்று ஆவலாய்ப் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் உண்மையிலேயே நம்பிக்கையோடு இருந்தோம்.

"22 ஆம் திகதி காலை 8.00 மணி அல்லது 8.30 மணியிருக்கும். வைத்தியர் சிவபாதசுந்தரத்தின் குரலைக் கேட்டேன்.
"நாங்கள் அப்பாவி டாக்டர்கள் நர்சுகள். நாங்கள் சரணடைகிறோம். நாங்கள் சரணடைகிறோம்."
என்று உரக்கக் கத்தியவாறு அவர் வந்துகொண்டிருந்தார். அந்த ஓய்வறைக்கு அவர் திரும்பியதும், ஓய்வறையிலிருந்து செல்லும் மாடிப்படிகளின் மேல் நின்றுகொண்டிருந்த இராணுவவீரனொருவன் அவர் மீது விடாமல் தொடர்ந்து சுடுவதை நாம் பார்த்தோம். வைத்தியர் சிவபாதசுந்தரம் கொல்லப்பட்டுவிட்டார். தன்கூட வந்த தாதியரை தானே தன் இருபக்கமும் தள்ளிவிட்டதால் அத்தாதியர் காயங்களுடன் தப்பிவிட்டனர். எங்களுடைய தலைவிதி அவ்வளவுதான் என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டு அங்கு கிடந்தோம்.

"பின்னர் காலை 10.30 அல்து 11.00 மணியளவில் எங்களோடு சேர்ந்து தங்கியிருக்கும் பெண் வைத்தியரொருவர் உயிரோடிருப்பவர்களையும் காயமடைந்தவர்களையும் கைகளைத் தூக்கிக்கொண்டு எழுந்து நிற்குமாறு கூவியழைப்பதைக் கேட்டோம். எங்கள் அறையில் ஆறுபேர் மாத்திரமே உயிரோடு இருப்பதாக நான் நினைத்திருந்தேன். அனால் எங்களில் குறைந்தது பத்துப்பேராவது உயிரோடு இருக்கிறோமென்பது அப்போது புரிந்தது. நாங்களெல்லோரும் கைகளை மேலே உயர்த்தியபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்துகொண்டிருந்தோம். எங்களின் முன்னால் கிடந்த பிணங்களின் மீதெல்லாம் ஏறி நடந்தோம். அச்சடலங்கள் ஒருமைல் தூரத்துக்கு மேல் பரவிக்கிடந்தது போல் அப்போது தோன்றியது. இந்தியப் படை எங்களை நெருங்கிவர முடியாமல் அவை பெருந்தடை போலச் செயற்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் நாங்கள் தப்பிப் பிழைத்திருக்கிறோம். அப்போது எங்களில் சிலர் அழ ஆரம்பித்தார்கள். எங்கள் மத்தியில் அப்போதிருந்த ஒரு மருத்துவ நிபுணர்தான் எங்களைச் சாந்தப்படுத்தினார்.

"அழாதீர்கள். நாம் அழுதுகொண்டிருக்கும் நேரமல்ல இது. நாம் நிறைய, மிக நிறைய இழந்துவிட்டிருக்கிறோம். அனால் நாம் செய்ய வேண்டிய பணிகள், பெரும்பணிகள் நிறைய இருக்கின்றன. நாமெல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து அவற்றுக்காக உழைப்போம்." என்று அவர் கூறினார்.

"அவர் மட்டும் அந்த வார்த்தைகளை எங்களிடம் கூறியிராவிட்டால் நாங்கள் நிச்சயம் ஒரேயடியாய் இடிந்து போயிருப்போம். யாழ் மருத்துவமனையின் மருத்துவர்கள், தாதியர்கள மற்றும் ஊழியர்கள் அடங்கிய இச்சிறு அணியினரின் அபாரமான துணிச்சலும் மகத்தான அர்ப்பணிப்பும் தான் முற்றுகை, பீதி, விரக்தி ஆகியவற்றின் பிடியில் சிக்குண்ட நிலையிலும் கூட இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனைகளில் யாழ் மருத்துவமனையைத் தனித்துவத்தோடும் பெருமையோடும் நிலைநிறுத்துகிறது. இமால் முற்றுகையின் கீழ் பெய்ரூட் இருந்தபோது போர்ஜ் அல் பராஜ்னே என்ற முகாமில் இருந்த மருத்துவமனை என் நினைவுக்கு வந்தது."
தொடரும்....
----------------------------------------------
நன்றி: முறிந்தபனை.
மிகுதியை இதன் அடுத்த பகுதியிற் படிக்கவும்.


Friday, October 21, 2005

யாழ் மருத்துவமனைப் படுகொலை.-2

யாழ் மருத்துவமனைப் படுகொலைகள் பாகம் 1.

பாகம் இரண்டு. தொடர்ச்சி......

இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனத்தைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. அவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த அந்தப் பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார்.

"நாங்கள் அப்போது கதிரியக்கப் பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம். அந்த இடம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றனர். ஏழாம் இலக்க விடுதியைக் காலி செய்துவிட்டு நோயாளிகளும் அங்கிருந்தனர். சூட்டுச்சத்தம் எங்களுக்குக் கிட்டவாக வந்துகொண்டிருப்பது கேட்டது. 'இந்திய இராணுவம் உள்ளே நுளைந்தாலும் அவர்கள் எங்களைச் சோதனையிடுவார்கள், பின் அவர்களுக்கு நாங்கள் விசயங்களை விழங்கப்படுத்தலாம்' என்று நாங்கள் நிச்சயமாக நம்பிக்கொண்டிருந்தோம். எங்களோடிருந்த வைத்தியர் கணேசரட்ணம் அறையை விட்டு வெளியே சென்றார். எங்களின் சகஊழியர்கள் சிலர் இன்னமும் தங்கள் விடுதிகளில் தான் இருந்தனர். சூட்டுச் சத்தங்கள் இப்போது எங்களுக்கு மிக அருகில் வந்துவிட்டது. எங்களைச் சுற்றிலும் ஒரே சூட்டுச்சத்தம். எங்களைச் சுற்றியுள்ள அபாயத்தை எல்லோரும் அப்படியே தரையில் படுத்துவிட்டோம். சுட்டுக்கொண்டே கதிரியக்கப் பிரிவுக்குள் வந்த இராணுவம் அங்கே நெருக்கியடித்துக்கொண்டிருந்த மக்கள்கூட்டத்தின்மீது கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளியது. நோயாளிகள் இறந்துவீழ்வதைக் கண்களால் கண்டோம். விரலைக்கூட அசைக்காமல் செத்துப்போனவர்களைப்போல நாங்கள் தரையில் கிடந்தோம். இறந்துபோனவர்களின் சடலங்களை அகற்ற வரும்போது எங்களையும் அவற்றோரு போட்டு எரித்துவிடுவார்களோ அல்லது சுட்டுவிடுவார்களோ என்று முழுநேரமும் நடுங்கிக்கொண்டிருந்தோம். இரவில் மேலும் சில வெடிச்சத்தங்களைக் கேட்டோம். எங்களுடைய குவாட்டர்ஸ் அமைந்திருந்த மேல்மாடியில் அவர்கள் அங்குமிங்கும் போய்வந்துகொண்டிருக்கும் சத்தம் பெரும்பாலும் கேட்டுக்கொண்டிருந்தது. மறுநாட்காலை 11.00 மணிவரை கிட்டத்தட்ட 18 மணிநேரம் பிணங்களோடு பிணங்களாக அப்படியே கிடந்தோம்."

இந்த இடத்திலிருந்து இன்னொருவர் விவரிக்கிறார்:

"இந்திய இராணுவம் வேளிகேற் வழியாகப் புகுந்து, தாழ்வாரம் வழியாக வந்து கண்டபடி சுட ஆரம்பித்தது. மேற்பார்வையாளரின் அலுவலகத்துக்குள்ளும் வேறு அலுவலகங்களுக்குள்ளும் அவர்கள் சுட்டார்கள். என்னோடு பணிபுரிந்த பலர் இறப்பதை நேரிற்கண்டேன். இன்னொரு சகஊழியர் என்னிடம் கிசுகிசுத்தார், 'அப்பிடியே அசையாமல் படுத்துக்கிடவுங்கோ' என்று.

"எனவே நாங்கள் அன்றிரவு முழுவதும் இம்மிகூட அசையாமல் அங்குகிடந்த சடலங்களின் அடியிற் படுத்துக்கிடந்தோம். ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக இருந்தவர்களில் ஒருவருக்கு இருமல் வந்தது. அவர் இரவில் அவ்வப்போது முனகியவாறு மெதுவாக இருமிக்கொண்டிருந்தார். ஓர் இந்தியவீரன் அப்போது அவர்மீது கிரனைற்றை (கைக்குண்டு) வீசினான். அவரோடு வேறு பலரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். அம்புலன்ஸ் சாரதி அதில் இறந்தது எனக்குத் தெரியும். இன்னொரு இடத்தில் ஒருவர் தன் கைகளை மேலே உயர்த்தியபடி எழுந்து நின்று இரத்துக்கூவினார்:
"நாங்கள் அப்பாவிகள், நாங்கள் இந்திராகாந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு"
அவர்மீதும் ஒரு கிரனேற் வீசப்பட்டது. அவரும் அவரோடு கூட படுத்துக்கிடந்த சகோதரரும் கொல்லப்பட்டார்கள்".
---------------------------------------

அன்றிரவு கடந்துபோய் காலையாகிவிட்டது. நிலைமை பயங்கரமாகவே இருந்தது. காலை 8.30 மணியளவில் குழந்தை வைத்திய நிபுணர் சிவபாதசுந்தரம் அவர்கள் மூன்று தாதிகளுடன் தாழ்வாரம் வழியாக நடந்துவந்தார். தாம் யாரென்று காட்டிக்கொண்டு இராணுவத்திடம் சரணடைந்துவிடுவது உசிதமென்று அவர்களிடம் சிவபாதசுந்தரம் எடுத்துரைத்திருக்கிறார். கைகளை மேலே உயர்த்தியபடி,
'நாங்கள் சரணடைகிறோம். நாங்கள் ஒன்றுமறியாத டாக்டர்களும் நர்சுகளும்தான்.'
என்று உரத்துக்கூறியவாறு அவர்கள் நடந்து வந்தனர்.

வைத்தியர் சிவபாதசுந்தரத்தை அவர்கள் வெகுகிட்டத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். நர்சுகள் காயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் சிக்கிக்கொண்ட குழந்தைகளையும் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் காப்பாற்ற வந்த அந்த உன்னத மனிதன் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். சமாதானத்தினதும் அகிம்சையினதும் காவலன் என்று தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒரு தேசத்து இராணுவத்தின் கரங்களிலிருந்து அம்மருத்துவனுடைய தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கு வன்முறையும் மரணமுமே பதிலாகக் கிடைத்தன.

உயிர் பிழைத்தவர்கள் மறுநாட்காலை 11.00 மணிவரையும் இறந்துபோனவர்களின் பிணங்களுக்கிடையில் தாமும் இறந்துவிட்டவர்கள்போல் அப்படியே கிடந்தனர். இராணுவ அதிகாரியொருவர் அந்த ஆஸ்பத்திரி விடுதியொன்றுக்கு வந்தபோது அங்கிருந்த பெண் வைத்தியர் ஒருவர் அவரை இடைமறித்து நேர்நின்று வாதாடிய பின்புதான் தாங்கள் காப்பாற்றப்பட்டதாக அங்கிருந்தோர் அனைவரும் கூறினர். அந்த டாக்டர் அவ்வதிகாரிக்கு நிலைமையை விளக்கிக்கூறி தனது இருகைகளையும் மேலுயர்த்திவாறு அவர்கள் இராணுவத்தாரோடு இருக்கும் பகுதிக்கு வந்தார். தன்னுடன் பணிபுரிபவர்களையும் காயுமுற்றுக் கிடந்தோரையும் அவர் குரல் கொடுத்து அழைத்தார். தங்களின் சகமருத்துவர் டாக்டர் கணேசரட்ணம் ஸ்டெதஸ்கோப்புடன் கீழே இறந்துகிடப்பதைக் கண்டார். ஆஸ்பத்திரியில் தங்கியிருப்பவர்கள் மேலே தங்களின் அறைகளுக்குச் சென்று பார்த்தபோது முழுப்பகுதியும் சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டனர். தரையிற் சிந்திக்கிடந்த அவர்களின் துணிமணிகள் ரத்தம்தோய்ந்த பூட்ஸ்களின் தடங்கள் காணப்பட்டன. அவர்களின் விலைமதிப்புள்ள உடைமைகள் அனைத்தும் பறிபோய்விட்டன. அதற்குப்பின்னர் அவர்கள் தொடர்ந்து தங்கள் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அவர்களின் கதவருகில் ஒரு இராணுவவீரன் நின்றுகொண்டிருந்தான். அந்த நாட்களில் அவர்கள் பயங்கரப் பீதிக்குள்ளாகியிருந்தனர்.

நன்றி: முறிந்த பனை.

-----------------------------------------------------
அடுத்த பகுதியில் இன்னொரு மருத்துவரின் வாக்குமூலம் தொடரும்.


யாழ் மருத்துவமனைப் படுகொலை.

இன்று பாரதப் படைகளால் யாழ்மருத்துவமனையில் நடத்தப்பட்ட படுகொலையின் பதினெட்டாம் ஆண்டு நினைவுநாள். அதையொட்டி, அச்சம்பவம் பற்றி 'முறிந்த பனை'யில் எழுதப்பட்ட பத்திகளை இங்கே தருகிறோம். 'முறிந்த பனை' பற்றி அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லையென்றே நினைக்கிறேன். 'அழ வேண்டாம் சோதரி' யின்போதோ வேறு சந்தர்ப்பங்களிலோ றாஜனி திரணகம பற்றிய விவாதங்களில் தாராளமாக இந்நூல் பற்றிக் கதைக்கப்பட்டதுண்டு. இனி அந்நூல் சொல்லும் அப்படுகொலை பற்றிய பத்திகளைப் பார்ப்போம். நீளம் கருதி பகுதிகளாக இடப்படுகிறது.

யாழ் நகரைத் தன்வசப்படுத்த இந்திய இராணுவம் முயற்சி செய்யும் என்று சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஊழியர்கள் பலர் அங்கு வேலைக்குப் போகாமலேயே இருந்தனர். மற்றவர்கள் இந்திய இராணுவம் நியாயமாக நடந்துகொள்ளும் என்றெண்ணி அவசியமான பணிகளைச் செய்துகொண்டு அங்கேயே தங்கியிருந்தனர். எறிகணைத் தாக்குதலால் மிகப்பலர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் தொடர்ந்து மருத்துவனைக்கு வந்து கொண்டிருந்தனர். மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவியதால் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள வசதியில்லாமலிருந்தது. எழுபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் ஆஸ்பத்திரியின் சவக்கிடங்கில் குவிந்து போயிருந்தன. யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரமுகர்கள் அரச அதிபரின் அலுவலகத்திலிருந்து இந்தியத் தூதரகத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டதையடுத்து எறிகணைத் தாக்குதலின் தீவிரம் குறைந்துவிட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததால் பாதுகாப்புப் பற்றிய ஒரு பிழையான உணர்வு மக்கள் மத்தியில் வியாபித்திருந்தது. அவர்கள் அக்டோபர் 13 ஆம் திகதி எறிகணைத்தாக்குதலும் வான்வழிக் குண்டுவீச்சும் நடைபெறுவது குறித்துத் தொலைபேசியில் முறைப்பாடு செய்திருந்தனர். ஆனால் அப்பாவி மக்களுக்குப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய தாக்குதல்கள் பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாதென்று இந்தியத் தூதரகம் மறுத்ததாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

அக்டோபர் 21 ஆம் திகதி - தீபாவளி தினத்தன்று காலை 11.00 மணியளவில் யாழ் மருத்துவனையின் சுற்றுப் பகுதிகள் அனைத்தும் கோட்டை இராணுவ முகாமிலிருந்தும் ஹெலிகொப்டர்களிலிருந்தும் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இலக்கானது. காலை 11.30 மணியளவில் புறநோயாளர் சிகிச்சைக் கூடத்தின்மேல் ஓர் எறிகணை விழுந்தது. பிற்பகல் 1.00 மணியளவில் சாந்தி தியேட்டர் ஒழுங்கை முனையில் இந்தியத்துருப்புக்கள் காணப்பட்டதாக அங்கிருந்த மருத்துவ நிபுணருக்குத் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 1.30 க்கு 8 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் ஓர் எறிகணை விழுந்ததில 7 பேர் கொல்லப்பட்டனர். நிலவரத்தைக் கண்டறிய இன்னொரு வைத்தியருடன் வெளியில் சென்ற இம் மருத்துவ நிபுணர் 2.00 மணியளவில் ஆயுதம் தாங்கிய சில விடுதலைப்புலிகள் அங்கு நிற்பதைக் கண்டிருக்கிறார். பின் அவர் மருத்துவர் கணேசரட்ணத்தையும் அழைத்துக்கொண்டு போய் புலிகள் அங்கே நிற்பதால் ஆஸ்பத்திரிக்குள் இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைச் சுட்டிக்காட்டி அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிடுமாறு விடுதலைப்புலிகளைக் கேட்டுக்கொண்டார். அங்கிருந்த புலித்தலைவன் அதை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து குழுவினரோடு வெளியேறிவிட்டான். சற்று நேரத்தின் பின் வேறொரு புலிகளின் கோஸ்டி அவ்விடத்துக்கு வந்தது. அவர்களிடமும் நிலைமையை விளக்கிய பின் அவர்களும் அங்கிருந்து சடுதியில் காணாமற்போயினர்.

பிற்பகல் 2.00 மணிக்குப்பின் அங்கு சற்று அமைதி நிலவியது.
"ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கு என்ன ஆலோசனை சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து வெளியேறிப் போய்விடுவது பாதுகாப்பானது என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்குமானால் அவ்வாறே சொல்லியிருப்பேன். அப்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததாலும் இராணுவம் மிகக்கிட்டத்தில் இருந்ததாலும் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதிருந்தது. எனக்குச் சரியாகப் பசித்தபடியால் வீட்டுப்போகலாம் என முடிவெடுத்தேன். என்கூட வேலை செய்யும் இன்னொரு வைத்தியருடன் பிற்பகல் 2.30 க்கு ஆஸ்பத்திரி பின்வாசல் வழியாக ஒரு பிரச்சினையுமில்லாமல் வீடுபோய்ச் சேர்ந்துவிட்டேன். பிற்பகல் 4.00 மணியளவில் ஆஸ்பத்திரி வீதியில் பெற்றோல் ஷெட் பக்கத்திலிருந்து 15, 20 நிமிடங்களுக்குத் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஆஸ்பத்திரிப் பக்கமிருந்து திருப்பிச் சுடும் சத்தமேதும் கேட்கவில்லை. அந்தச் சமயத்தில் எங்கள் அறிவுக்கெட்டியவரை ஆஸ்பத்திரிக்குள் எந்தப் புலிகளும் இல்லை"
என்று அம்மருத்துவ நிபுணர் கூறினார்.

இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனத்தைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. அவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த அந்தப் பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார்.

நன்றி : முறிந்தபனை.
----------------------------------------------------------------------------
இதன்பின்தான் அந்த அதிபயங்கரக் கொடூரம் இந்தியப்படைகளால் நடத்தப்பட்டது. மருத்துவர்கள், தாதியர், நோயாளிகள் எனப் பலர் அம்மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் இறப்பை இயன்றவரை உறுதிப்படுத்தும் அத்தனை வேலைகளும் செய்யப்பட்டன. மயிர் கூச்செறியும் அந்த அனுபவம் அடுத்த பகுதியாக வருகிறது.



Wednesday, October 19, 2005

தமிழ்மணம் - ஒரு கருத்துக்கணிப்பு

இங்க நா சொல்லப்போறது எதிர்மறையான விமர்சனமோ அல்லது மத நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயமோ இல்லைங்கிற துணிவோட, (ஆமா இனி என்ன பதிவு எழுதினாலும் அங்கே ஏதாவது எதிர்மறையான விசயம் வந்திருக்காண்ணு ஒண்ணுக்கு ரண்டுவாட்டி செக் பண்ணிடணும்)

பெருசா ஒண்ணும் இல்லங்க! இங்கே காசியின் முடிவில் அதிருப்தி உள்ளவங்க இந்தப் பதிவுக்கு அதாவது என் பதிவுக்கு ஒரு - குத்தும் அதை ஆதரிக்கிறவங்க ஒரு + குத்தும் போட்டிட்டு போயிட்டே இருங்க! அம்புட்டும்தேன்...

ஆமா.. விடுதலைப்புலிகள் பயங்கர வாதிகள் என்கிறது எதிர்மறையான விமர்சனமா?

Friday, September 16, 2005

ஊரோடின் ஒத்தோடு!

எல்லாரும் அமோகமாப் படம் காட்டிக்கொண்டிருக்கிறாங்கள்.
உந்த நேரத்தில நான் பேசாமக்கிடந்தா வலைப்பதிவுகளிலயிருந்து அடிச்சுக் கலைச்சுப் போடுவாங்களோ எண்டு பயந்து போனன்.
உடன என்ர கமராவ எடுத்துக்கொண்டு ஓடினன், ஓடினன், ஓடினன்.
வாத்துக்களைக் காணுமட்டும் ஓடினன்.
கடசியல இதுகள் தான் அகப்பட்டிச்சு.













அப்பாடி ஒருமாதிரிப் பொருத்தமான படங்கள் போட்டாச்சு.
சின்னவனின்ர போட்டியில பங்குபற்றிற தகுதி இந்தப் படங்களுக்கிருந்தா இதுகளைச் சேத்துக் கொள்ளலாம்.
ஒருபடத்தில மட்டும் வேற ஆக்கள் நிக்கினம்.
அவயளக் கணக்கில எடுக்காதையுங்கோ.

அவசரத்தில எடுத்த படங்கள்.
கொஞ்சம் அப்பிடியிப்பிடித்தான் இருக்கும்.
சலிச்சுக் கொள்ளாதையுங்கோ.

Wednesday, September 14, 2005

அறிந்தும் அறியாமலும்- ஓர் அதிகாலை விடியல்



அறியாதார் செய்த நெகிழத்தில் விடிகிறது காலை.
அறியாதாரின் தாளினால் துடைத்தலுடன்
அறியாதார் கழுவிப் -பின்
அறியாதார் சுத்திகரித்த நீரின் கழுவலுடன்
விடிகிறது காலை.

அறியாதானின் கட்டுரை வாசிக்கலாம் கழியும்வரை.
அறியாதார் செய்தவைதான் எல்லாமென்றாலும்
அறியாதான் ஒருவன் போகான் எனக்காய்க் கழிவறை.
அறிந்தோ அறியாமலோ விடிகிறது காலை இப்படியே.
------------------------------------------------------------

நெகிழம்: பிளாஸ்ரிக்

Sunday, September 11, 2005

இரயாகரனுக்கு பதில்

வணக்கம். இரயாகரன்! தங்கள் பதிவில் இது பற்றி உங்கள் கருத்தென்ன எனக் கேட்டவிட்டு அங்கு பதிலிட உங்கள் team members இவர்களை மட்டும் அனுமதித்திருக்கிறீர்கள். நான் உங்கள் team member இல்லாத படியால் என்னால் அங்கு பின்னூட்டம் இட முடியவில்லை.

Comments on this blog are restricted to team members.
You're currently logged in as
கொழுவி who is not a team member of this blog.

ஆகவே இங்கு எனதில் பதிகிறேன்.

ராயகரன்! நான் அறிந்த வரை நிதர்சனத்தின் செய்தி கப்சா! முன்பே செய்தி வெளிவந்த மாதிரி நடந்த சம்பவம் தான் உண்மை. அதனை புலிகளின் ஊடகங்களை சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

நிதர்சனம் ஒரு லூசுத்தனமான இணையம். அதனை இணையம் என்று ஏற்றுக்கொள்வதே முடியாத காரியம். அதிலும் அதனை நீங்கள் புலிகளின் மைய ஊடகம் என்கிறீர்கள்.

புலிகளின் நிதர்சனம் பிரிவைச் சேர்ந்த சேரலாதன், அந்த இணையம் தவறான செய்திகளை பரப்புவதாகவும் தங்களுக்கும் அந்த இணையத்திற்கும் தொடர்பேதும் இல்லை எனவும் சில காலங்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

என்னைப் பொறுத்தவரை நிதர்சனம் ஒரு சின்னப்புள்ளை விளையாட்டுத்தளம்.

பாருங்கள், பேராசியருக்கு சப்போட் பண்ணுகிறோம் என புறப்பட்டு அந்தச் சிறுமி இதற்கு முன்பே 3 நபர்களுடன் தொடர்புற்றிருந்தாள் என எவ்வளவு வக்கிரமாக எழுதியிருக்கின்றனர்.

திரும்பவும் சொல்கின்றேன்.. நிதர்சனம் புலிகளுக்கு ஆதரவாக எழுதுகிறது என்பதற்காக அது புலிகளின் மைய ஊடகமாகி விடாது. அது ஒரு லூசுத்தளம்.

தவிரவும் உலகளாவிய ஊடகங்கள் நிதர்சனத்தில் இருந்து தான் செய்தியினை பெறுகிறன என்று எழுதியிருக்கிறிர்கள். நான் அறிந்த வரை என்னவோ நிலைமை தலைகீழாகத்தான் இருக்கிறது.

நிதர்சனத்தின் தற்போதைய செய்தி வெறும் கப்சா என்கிறார் வன்னியிலுள்ள புலிகளின் மைய ஊடகத்தை சேர்ந்த ஒருவர்.

Thursday, September 08, 2005

இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும் -3

கடந்த இரண்டு பதிவுகளுக்கும் வந்த எதிரிவினைகள் பார்த்தேன். புலிகளின் ஐனநாயக விரோத செயல்கள் படுகொலைகள் குறித்து எழுதினால், வரும் ஆபாச அருவருக்கத்தக்க பின்னூட்டங்கள் போலல்லாது(அவற்றையும் அவற்றை விட்டுவைப்பதையுமே புலி எதிர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள் என்பது வேறு விடயம். ) இந்த பதிவு குறித்து எழுதினவர்கள் பண்பாக பொறுமையுடன் எழுதியிருந்தார்கள்.

ஆயினும் கொழுவிக்கு ஒரு ஆதங்கம் இருக்கிறது. இதுவரை நாளில் புலிகள் கடந்த காலங்களில் செய்த படுகொலைகள் ஐனநாயக விரோத செயல்கள் குறித்து எத்தனை பதிவுகள் வந்திருக்கின்றன. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.

புலிகள் முஸ்லீம்களை கொலை செய்தார்கள், புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள், புலிகள் மாற்று இயக்கங்களை தடை செய்தார்கள்.. என இப்படி எத்தனை பதிவுகள்...

அப்போதெல்லாம் யாருமே எதற்காக நடந்த முடிந்தவற்றை மீண்டும் கிளறுகிறீர்கள்? இதனால் என்ன நேர்ந்து விடப் போகிறது? என கேட்கவில்லை.

இந்திய ராணுவத்தினரின் படுகொலைகள் குறித்த இந்த பதிவினை நிறுத்தச் சொன்னவர்களின் நேர்மை எங்கே வெளிப்பட்டிருக்குமென்றால், புலிகளின் நடந்து முடிந்த விரோத செயல்கள் குறித்த பதிவுகளையும் நிறுத்த சொல்லுமாறு கேட்டிருக்கும் போது மட்டுமே!

தவிரவும் பின்னூட்டம் ஒன்றில் இந்தியா எல்லாவற்றையும் மறந்து முன்னேற்றப் பாதையில் செல்கிறது என ஒருவர் சொல்லியிருந்தார். இன்றைக்கும் இந்திய றோ வாய்ப்புக் கிடைத்தால் பிரபாகரனை போட்டுத்தள்ள தயாராக இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அதிகார பலம் அதிகரித்தவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

இந்தப் பதிவினை இங்கே மீளவும் இட்டதன் நோக்கம் இன்னும் பல இந்திய சகோதரர்களுக்கு 'அமைதி காக்க' சென்ற எங்கள் படையினரை ஏன் ஈழத்தமிழர்கள் வெறுக்கிறார்கள்? ஏன் புலிகள் யுத்தத்திற்கு இழுத்தார்கள் என்ற கேள்வி இருக்கிறது.

ஆகக் குறைந்தது அவர்களுக்கு ஒரு Out Line ஆவது கிடைக்கும் என்ற நோக்கில் இதை வெளியிட்டேன். தவிரவும் இது ஒன்றும் இணையத்திற்கு புதிய பதிவல்ல.

எனக்கும் எங்களுக்கும் எல்லாவற்றையும் மறந்து போக விருப்பம். ஆனால் நீங்கள் மட்டும் நாங்கள் செய்த கொடூரங்களை மறந்து போங்கள். ஆனால் நாங்கள் உங்களின் கொடூரச் செயல்களை நினைவு வைத்திருப்போம் என்பது என்ன நியாயம்!

எவ்வாறெனினும் எங்கள் தலைவனை நீங்கள் கொன்றீர்கள், எங்கள் தலைவனை நீங்கள் கொன்றீர்கள் எங்கள் தலைவனை நீங்கள் கொன்றீர்கள் என விடாது தொடர்பவர்களுக்கும் எனக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும் என்பதால் இதனை இந்தப் பதிவினை நிறுத்தி விடுகிறேன்.

இனி வராது.

நண்பர்களுக்கு மீண்டும் ஒரு விடயம். இப்பதிவின் நோக்கம் இந்தியாவை மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கேட்பதல்ல!

இப்படியாக எங்களுக்கு நடந்தது. இத்தனை கொடுமைகளை நாம் அனுபவித்தோம் எங்களுக்கு உண்டாகியிருக்கக் கூடிய கோபத்தை ஆதங்கத்தை கொஞ்சமாவது புரிந்து கொள்ளுங்களேன் என்பதை வெளிக்காட்டவே!

மறக்கலாம். முதல் மனிதனாக கை நீட்டுகிறேன். பதிலுக்கு நீங்களும் பற்றிக் குலுக்குவீர்களா?


Wednesday, September 07, 2005

இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும்-2

எங்காவது இணையத்தளங்களிலிருந்து வெட்டி ஒட்டுவதும், ஒரு கட்டத்தில் ஒரு விவாதத் தளத்தினை உருவாக்கவே அவ்வாறு செய்தேன் என அறிக்கை விடுவதும், இப்பொதைய Style என்ற காரணத்தினால் கொழுவியும் வெட்டுகிறான் பின்னர் ஒட்டுகிறான். இதுவும் ஓர் திறந்த விவாத தளத்தினை உண்டாக்கவே என கூறிக் கொள்கிறான். யாராவது இதனை தக்க ஆதாரங்களுடன் மறுத்தால்( ஏதோ ஒரு பதிவை ஈழநாதன் வெட்டு ஒன்றாய் துண்டு இரண்டாய் மறுத்திருந்தாரே) அதனையும் வெளியிடுவோம். இதனை எழுதியவர் பழ.நெடுமாறன்.

இப்போதைக்கு இது தொடராக இங்கே வரும்.

இந்த நிகழ்ச்சி நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய இராணுவ பிரிகேடியர் சங்கர் பிரசாத் என்பவர் மக்கள் குழு உறுப்பினர்களைக் கூட்டிப் பின்வருமாறு கொக்கரித்தாராம்.

'இந்திய இராணுவம் மீது புலிகள் தாக்குதல் மேற்கொண்டால் உங்கள் ஊரை அடியோடு எரிப்பேன். நு}ற்றுக்கணக்கில் மக்களைச் சுட்டுத் தள்ளுவேன். இராமாயணத்தில் இலங்கை எரிக்கப்பட்டதைப் போல மீண்டும் இலங்கை எரியும். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் உலகின் 4 ஆவது பெரிய இராணுவம்"

அவர் மிரட்டியதைப் போலவே விரைவில் நடந்தது. அழகிய வல்லை நிகரம் சுடுகாடானது. அந்த சோக வரலாற்றினைக் கீழே தந்துள்ளேன்.

மினி வீடியோ சினிமா கொட்டகை ஒன்றில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த சுமார் 30 பேரை வெளியே கொண்டுவந்து நடுத்தெருவில் உச்சி வெயிலில் உட்கார வைத்தார்கள். அங்கு நின்ற ஒரு சீக்கிய சிப்பாய் திடீர் என இயந்திரத் துப்பாக்கி மூலம் படபடவென்று சுட்டான். அண்மையில் திருமணம் செய்துகொண்ட இராஜரத்தினம் என்பவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து மாண்டார்.

அவர் அருகில் இருந்த கருணாநந்தராஜா என்பவர் படுகாயத்துடன் கீழே விழுந்தார். அவர் மார்பில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அந்தப் பயங்கரங்களைக் கண்டு மற்றவர்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

மற்றொரு இந்திய இராணுவ சிப்பாய் அங்கிருந்த கடைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றித் தீயை வைத்தான். இதற்கிடையில் சடையாண்டி கோயிலுக்குள் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேரை வேறு சில சிப்பாய்கள் அடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

அவர்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது ஒரு ஜீப் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து கீழே குதித்த சிப்பாய்கள் திடீர் என்று நாலாபுறமும் தானியங்கித் துப்பாக்கிகளினால் சடசடவெனச் சுட்டார்கள். 40 வயதான சிவபாக்கியம், 60 வயதான தங்கராஜா ஆகியோர் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார்கள்.

முப்பதுக்கும் அதிகமானவர்கள் பலத்த காயத்துடன் கீழே சரிந்து விழுந்தார்கள். காயம் அடைந்தவர்கள் தண்ணீர், தண்ணீர் என்று கதறிக்கொண்டு இருந்தார்கள்.

இரத்த வெறி பிடித்த இந்தியச் சிப்பாய்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் மேலும் மேலும் தங்கள் நரவேட்டையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சிவபுர வீதி என்னும் தெருவை நான் பார்வையிட்டேன். அங்கு 10 வீடுகள் முழுவதுமாக எரிந்து நாசம் ஆகிக் கிடப்பதைக் கண்டேன். கோட்சேயின் மறுபிறவி இந்திய இராணுவ சிப்பாய்கள் வெறிக்கு இந்தியத் தலைவர்களின் படங்கள் கூடத் தப்பவில்லை.

நெடியகாடு என்னும் பகுதியில் கணபதி படிப்பகம் ஒன்று உள்ளது. அதில் ஐந்து அடி உயரமான மகாத்மா காந்தியின் உருவப்படம் தொங்க விடப்பட்டு இருந்தது. இந்திய சிப்பாய்கள் அந்தப் படிப்பகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்கள் தேசத் தந்தையின் படத்தையும் உடைத்து எரித்துவிட்டுச் சென்றார்கள். காந்தி அடிகளின் எரிந்து கிடந்த அலங்கோலமான படத்தை நானும் பார்த்தேன். காந்தியைச் சுட்ட கோட்சே மறுபிறவி எடுத்து வந்து காந்தியின் படத்தைக்கூட விட்டுவைக்கவில்லை.

அதைப் போல வர்ணகுலசிங்கம் அரசரத்தினம் என்னும் ஒரு வணிகன் பெரிய வீடு ஒன்றும் நாசப்படுத்தப்பட்டு இருந்தததை நான் பார்த்தேன். அவர் ஓர் இந்திய பக்தர். இந்தியத் து}துவராக இருந்த தீட்சித்தின் நெருங்கிய நண்பர்.

தமிழீழ மக்களின் பிரச்சினைகளை இந்தியாவினால்தான் தீர்க்க முடியும் என்று உறுதியாக நம்பியவர். 1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்தம் மனைவி பத்மலோசினி, தம் 5 பெண் குழந்தைகளுடன் தனியாக இருந்து குடும்பத்தை எப்படியோ சிரமப்பட்டு நடத்திக் கொண்டிருந்தார்.

அந்தப் பெரிய வீட்டில் வரவேற்பறையில் இந்திரா காந்தியின் ஆளுயர மூவர்ணப்படம் தொங்கவிடப்பட்டு இருந்தது. அந்த வீட்டிற்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் அதைப் பார்த்துக்கூடத் தங்கள் கொடுஞ்செயலை நிறுத்தவில்லை. வீட்டையே கொளுத்திவிட்டுச் சென்றார்கள். வித்தனை ஒழுங்கை என்னும் தெருவில் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கண்டபடி சுட்டு 8 பேரைப் படுகொலை செய்து, ஏராளமானவர்களைப் படுகாயப்படுத்தி விட்டுச் சென்றார்கள். இறந்தவர்களின் சடலங்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நடுவே மற்றவர்கள் அன்று நாள்கள்வரை அப்படியே பதுங்கி இருக்க வேண்டியிருந்தது.

வல்வெட்டித்துறை கிராமிய வங்கி முற்றிலுமாக எரிந்து சாம்பல் மேடாகிக் கிடந்தது. எந்தத் தெருவுக்கு நான் சென்றபோதிலும் அந்தந்த தெருக்களில் இந்திய இராணுவம் இழைத்த அட்டூழியங்களைப் பற்றியும், படுகொலைகளைப் பற்றியும் கண்ணீர்க் கதைகளை மக்கள் கூறினார்கள். வல்வெட்டித்துறையில் மட்டுமில்லாமல் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரணி, பொலிகண்டி ஆகிய இடங்களிலும் இந்திய இராணுவத்தினர் வன்முறை வெறியாட்டம் நடத்தினார்கள்.

ஊரணி அரசு மருத்துவமனையில் நு}ற்றுக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். இந்திய இராணுவம் அந்த மருத்துவமனையைச் சுற்றி வளைத்துக்கொண்டு யாரையும் வெளியே செல்லவிடவில்லை. அதே நேரத்தில் வீடுகளில் இருந்தும் கோயில்களில் இருந்தும் பலர் இராணுவத்தினரால் இழுத்து வரப்பட்டு மருத்துவமனைக்கு முன்னால் உள்ள தார்ச் சாலையில் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். மருத்துவமனைக்கு உள்ளே இருந்தவர்கள் வெளியில் உட்கார வைக்கப்பட்டவர்களின் கதி என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இருந்தார்கள்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைவரும் முகாமுக்குக் கொண்டு போகப்பட்டனர். வல்வெட்டித்துறை சந்தையில் இருந்து 100 மீட்டர் தெற்கே தெணிய அம்பை என்ற இடத்தில் பல வீடுகள் எரிக்கப்பட்டு அந்தத் தீ மேலும் பரவிக்கொண்டே இருந்தது.

(இன்னும் வரும்)

Tuesday, September 06, 2005

இந்தியா எப்பொழுது மன்னிப்பு கேட்கும்?-1

எங்காவது இணையத்தளங்களிலிருந்து வெட்டி ஒட்டுவதும், ஒரு கட்டத்தில் ஒரு விவாதத் தளத்தினை உருவாக்கவே அவ்வாறு செய்தேன் என அறிக்கை விடுவதும், இப்பொதைய Style என்ற காரணத்தினால் கொழுவியும் வெட்டுகிறான் பின்னர் ஒட்டுகிறான். இதுவும் ஓர் திறந்த விவாத தளத்தினை உண்டாக்கவே என கூறிக் கொள்கிறான். யாராவது இதனை தக்க ஆதாரங்களுடன் மறுத்தால்( ஏதோ ஒரு பதிவை ஈழநாதன் வெட்டு ஒன்றாய் துண்டு இரண்டாய் மறுத்திருந்தாரே) அதனையும் வெளியிடுவோம்.

இதனை எழுதியவர் பழ.நெடுமாறன். இப்போதைக்கு இது தொடராக இங்கே வரும்.

1975 ஆம் ஆண்டு நிடத்தப்பட்ட அவசரகாலக் கொடுமைகளுக்கு 1980ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா மன்னிப்புக் கேட்டார்.

1984 ஆம் ஆண்டு நிடைபெற்ற சீக்கியர்கள் படுகொலை நிகழ்ச்சிக்கு 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் மன்னிப்புக் கேட்டார்.

1989ஆம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்கு யார் எப்போது மன்னிப்பு கேட்பது?

1989 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 2-4 வரையுள்ள ன்று நாள்களிலும் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகள் வரலாறு காணாத துயர நகழ்ச்சி ஆகும்.

தம்பி பிரபாகரன் அவர்களையும் மற்றும் பல புலிகளையும் பெற்றெடுத்த ஊர் என்பதனாலும், இவ்வுூர் மக்கள் அனைவருமே புலிகளுக்கு முழுமையாக ஆதரவு தந்தவர்கள் என்பதனாலும் வல்வெட்டித்துறை மீது இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு மிகுந்த கோபம் இருந்தது.

அந்தக் கோபத்தை அவர்கள் தீர்த்துக் கொண்ட விதம் மிகக் கொடூரமானது. 1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 ஆம் நாள் இந்தியாவில் அமிர்தசரஸ் நகரத்தில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. மைதானத்தில் கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்களைப் பிரித்தானிய இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்தது. அந்தப் படுகொலையைத் தலைமை தாங்கி நடத்திய பிரித்தானிய ஜெனரல் டையர் 'சுட்டேன், சுட்டேன், குண்டுகள் தீரும்வரை சுட்டேன்" என்று கொக்கரித்தான்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய மக்களை அன்று கொதித்தெழ வைத்தது. ஆனால், இன்று அதே இந்திய நாட்டைச் சேர்ந்த இராணுவம் வல்வெட்டித்துறையில் மற்றொரு ஜாலியன் வாலாபாக்கை நடத்திக் காட்டியது.

ஜனதாதள தலைவர்களுள் ஒருவரும் என்னுடைய நண்பருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தப் படுகொலையை வியட்நாமில் நிடைபெற்ற 'மயிலாய்" படுகொலைக்கு ஒப்பிட்டார்.

வியட்நாமில் மயிலாய் என்ற இடத்தில் அமெரிக்க இராணுவம் நடத்திய காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் பற்றி அறிய நேர்ந்த போது உலகெங்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அமெரிக்காவிலேயே பத்திரிகையாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு இந்தக் கொடூரமான கொலைகளைப் பகிரங்கமாகக் கண்டித்தனர்.

ஆனால், வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகளை இந்திய அரசு திட்டமிட்டு மறைத்தது. இந்தியப் பத்திரிகைகளுள் பெரும்பகுதி இச்செய்தியை மறைப்பதில் ஒத்துழைப்புக் கொடுத்தன.

ஆனால், வல்வெட்டித்துறையில் இச்சம்பவம் நடந்த 13 நாட்களுக்குப் பிறகு அங்கு சென்ற இலண்டன் 'பைனான்ஸியல் டைம்ஸ்" பத்திரிகையின் டெல்லி நிருபர் டேவிட் ஹவுஸ்கோ இச்சம்பவத்தைப் பற்றிய விவரங்களை முதன் முதலாக ஆகஸ்ட் 17 ஆம் நாளன்று அவரது பத்திரிகையின் வாயிலாக அம்பலப்படுத்தினார்.

அதையடுத்து இலண்டன், 'டெலிகிராப்" பத்திரிகையின் டெல்லி நிருபர் ஜெரமி கங்ரான் என்பவரும் இச்செய்தியை வெளியிட்டார். இந்தியப் பத்திரிகைகள் இச்செய்தியை அடியோடு மூடி மறைத்தன.

வெளிநாட்டுப் பத்திரிகைகளில் இச்செய்தி பரபரப்பாக வெளிவந்த பிறகு செப்டம்பர் 3 ஆம் நாள் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்" சிறிய அளவில் இச்செய்தியை வெளியிட்டது.

இந்த முறை வல்வெட்டித்துறைக்கு நான் சென்றபோது இந்தப் படுகொலைகள் பற்றிய முழு விவரத்தையும் அறிந்துகொள்ள முயற்சி செய்தேன். வல்லை மக்கள் குழுவின் தலைவர் எஸ்.செல்வேந்திரா, செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் நடனசிகாமணி உட்பட பலரை நான் சந்தித்துப் பேசினேன். இப்படுகொலைகள் நடைபெற்று ஏறத்தாழ ஆறு மாதங்களுக்குப் பிறகு கூட அந்த அதிர்ச்சியில் இருந்து வல்லை மக்கள் மீளாததை நான் பார்த்தேன்.

1989 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 2 ஆம் நாள் வல்வெட்டித்துறை சந்தைச் சதுக்கத்தில் காலை 11 மணிக்கு யாரும் எதிர்பாராத விதமாக விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதில் 6 இந்தியப் படை வீரர்கள் இறந்ததுடன் 11 பேர் காயம் அடைந்தனர். இந்நகழ்ச்சியைத் தொடர்ந்து வல்வெட்டித்துறையைச் சுற்றி இருந்த அன்று இராணுவ முகாம்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் வெறியுடன் புறப்பட்டு வந்து வல்வெட்டித்துறையைச் சுற்றி வளைத்தனர்.

உடனடியாக ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினர். தொடர்ச்சியாக அன்று நாள்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டது. வீடுகளை விட்டு வெளியே வராமல் அச்சத்துடன் பதுங்கியிருந்த மக்களை வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பதறப் பதறச் சுட்டுக் கொன்றார்கள்.

மொத்தம் 63 பேர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டனர். நுற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கு முன்வந்த பிரான்சு மருத்துவக் குழுவினரை ஊருக்குள் நுழையவே இந்திய இராணுவம் அனுமதிக்கவில்லை.

தொடர்ந்து அன்று நாள்களாக இராணுவத்தினர் ஊரைச் சுற்றி முற்றுகையிட்டு இருந்ததால் இறந்து போனவர்களின் பிணங்களைக்கூட அப்புறப்படுத்த முடியவில்லை. பிணங்கள் அழுகிப்போன நிலையில் அந்தந்த வீடுகளுக்குள்ளேயே வைத்து உறவினர்களால் எரிக்கப்பட்டன.

கணவர் உடலை மனைவியும், மனைவியின் உடலைக் கணவரும், பெற்றோரின் உடலைப் பிள்ளைகளும், பிள்ளைகளின் உடலைப் பெற்றோரும் எரிக்க வேண்டிய அவலத்திற்கு ஆளாயினர். மொத்தம் 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் முழுமையாக எரிக்கப்பட்டுச் சாம்பலாயின. 12 மீன்பிடி படகுகள் நாசம் செய்யப்பட்டன. 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்பட்டன. பல வீடுகளில் தங்க நிகைகள், பணம், மின்னணுப் பொருள்கள் இந்திய இராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டன. ஏராளமான பெண்கள் மிக மோசமான முறையில் கற்பழிக்கப்பட்டார்கள்.

---- இன்னும் வரும்---


Saturday, September 03, 2005

காணாமற் போனோர் பட்டியல்

தமிழ்வலைப்பதிவுக் கூட்டத்தில் அண்மைக்காலத்திற் காணாமற்போனோரின் பட்டியலொன்றை இங்கே வெளியிடுகிறேன்.
இவர்களைக் கண்டுபிடிப்பவர்கள் எனக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சன்மானம் பேசித் தீர்க்கப்படும்.

சிப்பிக்குள் முத்து. (முத்தெடுக்கப் போயிருப்பாரோ?)
அல்வாசிட்டி விஜய் (அல்வா குடுத்திட்டாரோ?)
மரம் (யாராவது தறித்துவிட்டார்களோ?)
பெடியன்கள்(உள்ளே போட்டுவிட்டார்களோ?)

இவர்களைத் திரும்பி வரச்சொல்லி ஆராவது கண்ணீர்க் கவிதைகள் எழுதியனுப்பலாம்.
எனக்குக் கவித வராதுங்கோ.

இவர்களைவிட இன்னும் பலர் காணாமற்போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
கூட்டாகத் தேடுவோம்.

Thursday, September 01, 2005

கிளின்ரன் அடித்த வங்கிக் கொள்ளை.

உங்களுக்குக் கிளின்ரனைத் தெரிந்திருக்கும். அவர் செய்த வங்கிக் கொள்ளையொன்று அண்மையில் வெளிப்பட்டுள்ளது. ஜோர் காலிம் என்பவன் கிளின்ரனோடு முன்பு ஒன்றாக வேலை செய்தவன். அதைவிட ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அந்த நட்பு அவர்கள் வளர்ந்தபின்னும் இருந்தது. கிளின்ரன் அரச நிர்வாகத்தைச் செய்தபோதும் சாதாரண பிரஜை என்ற உறவும், ஜோர் செய்யும் தொழில் நிமித்தமான உறவும் அவர்களுக்குள் இருந்தது.

ஒருநாள் கிளின்ரனின் அந்தக் கொள்ளை அம்பலமானது. அவரின் நண்பனான ஜோர் காலிம் வங்கியொன்றை ஆயுதமுனையில் பலவந்தமாகக் கொள்ளையடித்தான். பின் பிடிபட்டுவிட்டான். இதில் ஏன் கிளின்ரன் சம்பந்தப்படுத்தப்பட்டார் என்று கேட்கிறீர்களா? பின்னே? அவருடைய நண்பர்(தொழில்முறை நண்பர்) செய்த பலவந்தக் கொள்ளைக்கு அவர் காரணமில்லாமற் போகமுடியுமா? இது என்ன லாஜிக் என்று கேட்டால், அது அப்படித்தான். அப்படித்தான் சொல்கிறார்கள். இந்தக் கொள்ளையை வைத்தே கிளின்ரன் கொள்ளையிட்டார் என்று தலையங்கம் தீட்டி ஊடகங்கள் கட்டுரைகள் எழுதின.

இந்த வாதத்தை இன்னும் வலுவாக்க அந்த ஊடகங்கள் (அதாவது நாங்கள்) என்ன செய்தன தெரியுமா? கிளின்ரனே பல கொள்ளைகளை நேரடியாக நடத்தினார் என்ற ஒரு கதையை அவிழ்த்துவிடுவது. கிளின்ரனை அறிந்த யாருமே இதைப் பார்த்துச் சிரிப்பார்கள் என்ற கவலை எங்களுக்கில்லை.(எங்கள் பெயரோடு ஒரு முனைவர் பட்டத்தையும் போட்டால் சிலர் எங்களைப் புத்திசாலிகள் என்று நினைக்கக்கூடும் என்பதற்காக அதையும் செய்தோம்) எங்களுக்குத் தேவை கிளின்ரனை எப்படியாவது மட்டந்தட்ட வேண்டும். அவ்வளவுதான்.

ஆக, கள்ளனைப் பற்றியோ, களவைப் பற்றியோ கட்டுரை எழுதாமல், நாம் யாரைத் தீர்த்துக்கட்ட நினைக்கிறோமோ அவனோடு இவன்(கள்ளன்) ஒருநாள் தேத்தண்ணி குடித்தான் என்று ஒரு கதை உருவாக்கி(அது உண்மையாகவுமிருக்கலாம்) நாம் நினைத்தவனைத் தாக்கிக் கட்டுரை வரையலாம். இதுவொரு ஊடக தர்மம். கிளின்ரன் விசயத்தில் அதுதான் நடந்தது.

குறிப்பு: கிளின்ரன் (சிலர் கள்ளன் என்றும் வாசிக்கலாம்)பற்றிப் பத்து வசனம் எழுதச் சொல்லிக் கேட்டதுக்கிணங்க, எழுதப்பட்டது இப்பதிவு.

பாத்திரங்கள் கற்பனையானவை.

Sunday, August 28, 2005

இசையும் அரைமணிக் கதையும்

ஈழநாதன் சிலநாட்களின் முன் இசை பற்றிய ஒரு பதிவை இட்டிருந்தார். அதில் நான், என்னால் அரைமணித்தியாலம் ‘தகரமடிப்பதை’ப் பற்றி பேச முடியுமென்று பின்னூட்டம் இட்டுவிட்டேன். அதைக்கண்ட சயந்தன், அப்படி அரைமணித்தியாலம் கதைப்பதென்பது அபூர்வமான விசயம் போலச் சொல்லி அதைப் பதிவாக இடும்படிக் கேட்டுக்கொண்டார். அதனால் இந்தப் பதிவு.
(அரை மணித்தியாலம் கதைக்கக் கூடிய விசயத்தையெல்லாம் பதிவாகப் போடலாமா என்பதில் எனக்கு ஐயமுண்டு. இன்று காலை நான் சாப்பிட்ட இடியப்பமும் சொதியும் பற்றிக்கூட என்னால் அரைமணித்தியாலம் கதைக்க முடியும்.)

சரி, விளையாட்டுப் போட்டிகளுக்கு வெறுமனே ஒரு பார்வையாளனாக மட்டும் போகாமல் குறிப்பிட்ட அணியொன்றின் விசிறியாகப் போயிருந்தீர்களென்றால் உங்களுக்கு இப்பதிவு புரியும். குறிப்பாக உதைபந்தாட்டப் போட்டிகளுக்குச் சென்றிருந்தால்.

எனது பாடசாலையணி விளையாடியபோது உற்சாகமூட்டுவதற்காக நாங்கள் சிலர் நிறைய வேலைகள் செய்வோம். அதிலொன்று விளையாட்டின்போது (அதற்குப்பின்னும்கூட) தகரம் தட்டி, கோசம் போடுதல்.

முதலில் நல்ல கறள் பிடிச்ச ஒரு மண்ணெண்ணெய் உருளையை எடுத்துக்கொள்ள வேணும். பெரும்பாலும் ஒவ்வொரு விளையாட்டு மைதானத்திலும் ஒரு மூலையில் குறைந்த பட்சம் இரண்டு அரை உருளைகளாவது இருக்கும் (அணிக்கு ஒரு உருளையாக). அதில் நல்லதை எடுப்பதற்குப் போட்டிகளுமுண்டு. அதிஸ்டமுள்ளது அதிஸ்டம் கெட்டது எண்டுகூட இந்தத் தெரிவில பாக்கிறதுண்டு. ஒரு மணித்தியாலத்துக்கு முதலேபோய் நல்ல தகரத்தை எடுத்துவச்சு, அதிகமான நேரம் நிழல் விழக்கூடிய இடமாப் பாத்து, சகல ஆயத்தங்களோடயும் இருப்பம்.

நல்ல தடிகள் 4 தேவை. பொதுவாகப் பூவரசம் தடிகள்தான் பாவிப்பம். ஆனா சவுக்கந்தடி கிடைச்ச நல்லம். அதின்ர ‘நாதம்’ அந்த மாதிரியிருக்கும். தடிகளை முறச்சு எடுக்கக்கூடாது. முறிச்ச தடியின்ர நுனி தும்பு போல இருக்கிறதால சரியான ‘நாதம்’ வராது. ஜங், ஜங் எண்ட ஒரு ஒலிதான் வரும். அதால நுனிய மட்டமா வெட்டி வச்சுக்கொள்ள வேணும்.


விளையாட்டு வீரர்கள் மைதானத்துக்குள்ள போகேக்க தகரத்தைத் தட்டத் துவங்க வேணும். முதல் ஒருத்தர் தான் தட்டவேணும். சூடுபிடிக்கப் பிடிக்க இன்னொராள் சேரலாம்.
பந்து எங்கட ஆக்களின்ர காலுக்குள்ள நிக்கேக்க, அதுவும் எதிர்ப்பக்கத்தின் கோல்போஸ்டுக்குக் கிட்டவா நிக்கேக்க தட்டலாம். தனிய தகரம் மட்டும் தட்டுறது காணாது. அதோட பக்கத்தில ஒரு கோஸ்டி நிண்டு கத்த வேணும். அதுவும் இசைநயத்தோட கத்த வேணும். இதுக்கெல்லாம் நிரந்தரமா சில ‘ராகங்கள்’ இருக்கு. நான் பாக்கத்தக்கதா பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் ஒரே மெட்டைத்தான் இப்படிக் கத்துறதுக்கு பாவிக்கிறவை. "ஏழு ஸ்வரங்களுக்குள்ள தானே முழு இசையும் இருக்கு?"


ஒரு கோல் எமது அணியால் போடப்பட்டுவிட்டால் தகரமடி உச்சஸ்தாயியில இருக்க வேணும். கூடவே கத்துற வரிகளும்.


அதில வாற ஒரு வரி,

இந்த அடி போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?’

இந்த வரிகளையும் மெட்டையும் அப்படியே ‘களவெடுத்து’ கில்லி படத்தில பாவிச்சிட்டாங்கள். (பாட்டுவரியில மட்டும் சின்ன மாற்றம் செய்திருக்கிறாங்கள். ‘இந்த அடி’ எண்டு திரிசாவும் விஜயும் பாடினா அர்த்தம் பிசகிப்போடும் எண்டாக்கும்)

மேலும், பொதுவான நேரங்களில்,
கொலிஜ் கொலிஜ் எண்டு ஒருத்தர் கத்த, மற்றவர்அந்தப் பள்ளிக்கூடத்தின்ர பேரச் சொல்லுவார்.எப்பிடிக் கத்தினாலும் நாகரிகம் குறையாமல் இருக்கும்.

தள்ளுங்கராஜா
உள்ளுக்க போடா
எட்டு கோல்
எண்ணியடி

எண்டும் வரிகள் வரும்.

உந்த 'தள்ளுங்கராஜா' எண்டது ஆரெண்டு எனக்குத் தெரியாது. ஆனா எங்கட பள்ளிக்கூடத்துக்கான கோசத்திலதான் இந்தப்பேர் வரும். மற்றப் பள்ளிக்கூடத்துக்கானதில வேறயொரு பேர் வரும். ஆக அது அந்தந்தப் பள்ளிக்கூடத்துக்கான ஒரு வீரனின்ர பேர நிரப்பிற இடம். ஆனா எங்கட பள்ளிக்கூடத்தில அப்பிடியொருத்தன் விளையாடினதா எனக்குத் தெரியேல. விசாரிச்சுப்பாத்ததில ஒரு வாத்தி சொன்னார், 15 வருசத்துக்கு முந்தி, தான் படிக்கேக்கயும் இந்தப்பேரத்தான் கத்திறனாங்களெண்டு. அப்ப இது ஆரோ ஒரு மூத்த விளையாட்டுவீரனின்ர பேராத்தான் இருக்கோணும். எவ்வளவு பேரும் புகழும் பாத்தியளோ அந்த வீரருக்கு?

எதிரணி பந்து கொண்டந்து கோலடிக்க முடியாமல் போனாலும் தகரமடிக்க வேணும். இதில தகரமடிக்கிறவனுக்கு இருக்கிற கஸ்டம் என்னெண்டா விளையாட்ட சரியா ரசிக்க முடியாது. ஆனா மற்றவங்கள் அவ்வளவு நல்லா அடிக்கவும் மாட்டாங்கள். சரியான ‘ராகதாளத்தோட’ அடிக்கிற கலை சிலருக்குத்தான் வரும். ஆனா அந்தக் கலைஞனுக்கு ஏகப்பட்ட மரியாதை கிடைக்கும். ஒரு சிறந்த விளையாட்டு வீரனுக்கு நிகரான மரியாதை கிடைக்கும். முக்கியமான போட்டியில வெண்ட பிறகு எங்கயாவது ஒரு சாப்பாட்டுக்கடைக்கு அந்த அணியக் கூட்டிக்கொண்டு போவினம். அப்ப விளையாடின வீரர்கள், பயிற்சியாளர் தவிர உள்ள போற ஒரேஆள் இந்த தகரமடிக்கிறவன் தானெண்டா அதுக்கு இருக்கிற மரியாதையைப் பாருங்கோவன். பின்னேரம் போட்டி எண்டா, கடைசி ரெண்டு பாடத்துக்கு இருக்கத் தேவையில்லாமல் விளையாட்டு வீரர்கள வெள்ளன வீட்டை விடுவினம். அதோட இந்த தகரமடிக்கிறதெண்டு 3 பேரையும் வெள்ளன பள்ளிக்கூடத்தியிருந்து போக அனுமதிப்பினம்.

ஒருக்கா ஒரு பள்ளிக்கூடத்தில நடந்த மாவட்ட மட்ட உதைபந்தாட்டப் போட்டியில எங்கட பள்ளிக்கூடம் வெண்டிட்டுது. சந்தோசம் தாங்க முடியேல. அப்ப ஒரு வாகனம் பிடிச்சுத்தான் திரும்பவும் எங்கட இடத்துக்கு வாறம். அப்ப வாறவழயில சும்மா வரலாமோ? அதுக்காக அந்தப் பள்ளிக்கூட மைதானத்திலயிருந்த தகரத்தையும் தூக்கி வாகனத்தில ஏத்திக்கொண்டு வெளிக்கிட்டாச்சு.

பள்ளிக்கூடத்தைவிட்டு வாகனம் தாண்டின உடன ஒரே கும்மாளம்தான். தகரம் தட்டி கோசம் போடுப்படுது. நிறையச் சனம் பாதையில போய்வந்ததால வாகனம் நல்ல மெதுவாத்தான் வந்துது. ஒரு அரை மைல் வந்திருப்பம், பின்னால சைக்கிளில கலைச்சுக்கொண்டு வந்த பொடிப்பிள்ளையள் மறிச்சுப்போட்டாங்கள். என்ன பிரச்சினையெண்டா அந்த மைதானத்துக்குரிய தகரத்தைத் தூக்கிக்கொண்டு வந்திட்டமெண்டதுதான் பிரச்சினை. அவங்கள் விடுறமாதிரித் தெரியேல. கடசியா தகரத்தைத் தாரை வாத்திட்டு வந்தது தான்.

ம்… இந்தக் காலத்தில அந்தக் கலைஞர்களை எங்க மதிக்கப் போயினம்?




Saturday, August 13, 2005

பேசாதிருப்போம்.

பேசிப் பேசி என்னத்தைக் கண்டோம்?
பேசாமலிருப்பது கடினமில்லை.
இயலாதது யாதெனில்,
நாம் பேசாமலிருக்கும் போது
பேசிப் பேசியே கொல்வதைக்
கேட்டுக் கொண்டிருப்பது.

பேசிப் பேசியே
பேசாமலிருப்பவனைப் பேச வைப்பதில்
கில்லாடிகள் அவர்கள்.

பேச்சும் மூச்சும் ஒன்றுதான்.
எதுகை எவ்வளவு அழகாக வருகிறது.
பேசும்போது இயல்பாகவே மூச்சு விடுகிறோம்
எனவே பேசாமல் இருந்தாலும்
மூச்சுவிட மறக்காதீர்கள்
பின்னர்,
பேச்சு மூச்சற்றுப் போய் வீடுவீர்கள்.

நீ பேசுவதைக் களவெடுத்து
இன்னொருவன் பேசுவானென்று
கவலை கொள்ளாதே.
நீ விடும் மூச்சைக் கூட
இன்னொருவன் எடுத்துச் சுவாசிக்கிறான்,
உன்னைப் போலவே.
ஆக
இன்னொருவனின் மூச்சை
எடுத்துவிடுவதைப் போல
பேச்சையும் எடுத்துவிடுவதில்
என்ன தப்பு?
இரண்டுமே உயிர்வாழத்
தேவை தானே?

ஆகவே,
பேசு பேசு பேசு.
நீ
பேசவில்லையென்றாலும்
பேசும் கலையை மறக்கவில்லையென்றாவது
பிறருக்குத் தெரிய(ப்) பேசு.

;-) ;-) ;-) ;-) ;-) ;-)

Wednesday, July 20, 2005

உருமறைக்கப்பட்ட விமானமும் இன்னும்..

இரவுப்பார்வை கருவியினால் எடுக்கப்பட்டதல்ல!
Image hosted by Photobucket.com

Sunday, July 17, 2005

என் விருப்பப் பாடல் இன்குலாப் எழுதி...

"கவிப்பேரரசு" வைரமுத்து காசி ஆனந்தனையும் இன்குலாப்பையும் அழைத்துக் கெளரவித்துள்ளதாகச் செய்தி. அக்கெளரவத்தை ஏற்றிருக்கக் கூடாது என்று ரவி அவர்கள் எழுதியுள்ளார்.

இன்குலாப்பை ஒரு கவிஞராய் எனக்குப் பிடிக்கும். அவரின் தனிப்பட்ட எளிமையான வாழ்வும் பிடிக்கும். அவரின் ஒரு கவிதைத் தொகுப்பைப் படித்துள்ளேன். சினிமாப் பாடல்கள் எழுதாத அவர் ஒரு பாடல் மூலம் என்னை மேலும் ஆகர்சித்துக்கொண்டார்.

என் சிறுவயதுப் பராயத்தில் ஒரு பாடல் மிகப்பிரபல்யமாயிருந்தது. அதன் இசையமைப்பு மற்றும் வரிகள் எம்மைக் கட்டிப்போட்டிருந்தன. தொன்னூறின் தொடக்கத்தில் எங்கும் அந்தப் பாட்டைக் கேட்கலாம். அப்போது அதை எழுதியவரோ பாடியவரோ எமக்குத் தெரியாது. பாடல் மட்டும் நிரந்தரமாக மனசில் கதிரைபோட்டு இருந்துகொண்டது.

பின்னர் அப்பாடலை எழுதியவர் தமிழகத்தைச் சேர்ந்த இன்குலாப் என்றும் பாடியவர் மனோ என்றும் (அப்போது தான் எங்கு பார்த்தாலும் சின்னத்தம்பிப் பாடல்கள்) அறிந்த போது ஆச்சரியம். இப்போது இன்குலாப்பின் கதை வந்தபோது அவர் எழுதிய மூன்று பாடல்களுள் எனக்கு மிகப்பிடித்த பாடலை இங்கே பதிகிறேன்.

கேட்டு, படித்து கருத்தைச் சொல்லுங்கள்.

பாடல் கேட்க இங்கே.

இனி பாடல் வரிகள்.

**********************************************
ஒப்புக்குப் போர்த்திய அமைதித் திரையின்
ஓரங்கள் பற்றியெரிகின்றன...
ஒடுக்க முடியாத உண்மையின் குரல்கள்
உலகின் முற்றத்தில் ஒலிக்கின்றன.

ஏழுகடல்களும் பாடட்டும் -இனி
எட்டாத வானமும் கேட்கட்டும் (2)
ஈழவிடுதலைப் புலிகளின் குருதியில்
எழுதப்படுகின்ற மானுட கானத்தை
ஏழுகடல்களும் பாடட்டும்.......

ஆயிரம் பறவைகள் எங்கள் கானக
மரங்களில் கூடுகட்டலாம்
அவைகள் உலகசமத்துவம் பாடி
எங்கள் தரைகளில் முட்டலாம்

போர்விமானம் எம் தலைக்கு மேலெனில்
புகையும் எங்கள் துப்பாக்கி
போர்க்கப்பல் எம் அலைக்கு மேலெனில்
கடலே எதிரிக்குச் சமாதி -இதை
ஏழுகடல்களும் பாடட்டும்......
**********************************************

பாடல் தந்த தளத்துக்கு நன்றி.

Sunday, July 10, 2005

மலேசியா வாசுதேவனின் குரலில் என் விருப்பப் பாடல்

சிலர் பாட்டுக்கள தளத்தில போட்டுப் பதிவு எழுதிக்கொண்டிருந்தீச்சினம். அதுக்கு நல்ல வரவேற்பும் கிடைச்சுது.

கொழுவியால சும்மா இருக்க ஏலுமோ?நானும் வெளிக்கிட்டுட்டன்.
அந்த வரிசையில மலேசியா வாசுதேவன் பாடின பாட்டொண்டை இப்ப உங்களுக்காகத் தரப்போறன்.
*********************************************
தமிழகத்துப் பாடகர்களுக்குள்ளே என்னை மிகக்கவர்ந்த பாடகர்களுள் மலேசியா வாசுதேவன் ஒருவர்.
டி.எம். சௌந்தர்ராஜன் அவர்களுக்கு அடுத்தபடியாக தமிழ் உச்சரிப்புக்காக நான் விரும்புபவர் இவர்தான். கம்பீரமான அந்தக் குரல் ஒரு காலகட்டத்தில் தமிழ்த்திரையுலகில் தனக்கென ஓரிடத்தை நிலையாக வைத்திருந்தது. எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.ஜே. யேசுதாஸ் ஆகியோரின் சமகாலத்திலேயே தன் தனித்தன்மையையும் புகழையும் தக்க வைத்துக்கொண்டவர்.

தமிழத் திரையுலகைக் கடந்து அவர் பாடிய ஒரு பாடலை இங்கே பதிகிறேன்.
பலருக்கு உவப்பற்றதாக இருக்கலாம் என்று தெரிந்தாலும் இப்பாடலை இங்கே இடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
**********************************************

இஞ்ச கிளிக்கிக் கேட்டுப்பாருங்கோ.

எப்பிடியிருக்கெண்டு பின்னூட்டமும் குடுத்திட்டுப்போங்கோ.
**********************************************

நடடாராசா மயிலைக்காளை
நல்லநேரம் வருகுது
நடடாராசா சிவலைக்காளை
நாளைவிடியப் போகுது
பொழுதுசாயும் நேரம்-இது
புலிகள்வாழும் தேசம்

ஈழக்கடலில் மோதுமலைகள் என்னசொல்லிப் பாடும்
இந்தநாட்டில் வீசும்காற்று என்னசொல்லிப் பேசும்
நீலமேகம் எங்கள்நாட்டில் நின்றுபார்த்துப் போகும்
நீங்கள்வெற்றி சூடவேண்டும் என்றுவாழ்த்துக் கூறும்
வென்றுவாழ வாழ்த்தும்

ஊரிலெங்கும் புலியைத்தேடி ஊர்வலங்கள் வாரும்
கூரையெங்கும் ஏறிநின்று குண்டுபோட்டுப் பாரும்
போரிலெங்கள் புலிகள்செய்த புதுமைகேட்டுப் பாரும்
புலரும்காலை தலைவன்மீது பரணியொன்று பாடும்
தரணியெங்கும் கேட்கும்

காடுமேடு வீதியெங்கும் கண்விழித்துக் கொள்வார்
காட்டிற்கூட எங்கள்வீரர் கண்ணிவெடிகள் வைப்பார்
போற்றிபோற்றி பிள்ளையாரே புலிகள்வாழ வேண்டும்
பேய்கள்ஓடிப் போகவேண்டும் புலிகள்ஆழ வேண்டும்
நாங்கள்வாழ வேண்டும்.


பாடல்- புதுவை இரத்தினதுரை.
இசையமைப்பு- எல்.வைத்தியநாதன் (என்று நினைக்கிறேன்)
இணைப்பு வேறொரு தளத்திலயிருந்து எடுக்கப்பட்டது.


Saturday, July 09, 2005

காட்டிற் புலி

யோசிக்கும் புலி


வேட்டைக்குத் தயாராகும் புலி

Wednesday, July 06, 2005

“இந்தோ”வின் ஆயுத வளர்ச்சியும் அசட்டுத்தனங்களும்

(இக்கட்டுரையை எங்கேயும் பிரசுரிக்க வேண்டுமானால் $1000(US) தந்து பதிப்புரிமையைப் பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில் உலகின் தலைசிறந்த இராணுவ அரசியல் ஆய்வாளரால் எழுதப்பட்டது.)

அண்மைக்காலங்களில் “இந்தியோ நேசியா” தன் ஆயுத, இராணுவக் கட்டமைப்பைப் பெருக்கி வருகிறது. புதிது புதிதாக ஏவுகணைகளைப் பரீட்சித்துப் பார்க்கிறது. விமானங்களைக் கொள்வனவு செய்கிறது. அயல் நாடுகளுடன் புதிதாக இராணுவ ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறது. அண்மையிற்கூட பிரிட்டனிடமிருந்து சில கடற்கலங்களை வாங்கும் முயற்சியில் உள்ளது.

இவையெல்லாம் மிக அருகிலிருக்கும் “ஈழத்தோ”வருக்கு மிக ஆபத்தானதாகும். அவர்களை நம்ப முடியாது. என்றாவது குண்டுகளைத் தலையில் போட்டுவிட்டு sorry சொல்வார்கள். இது அமேதி ஏற்படுத்தத் தான் என்றும் சொல்லிவிடுவார்கள். யாரோ ஒரு அவில்தார் தான் அவற்றைக் கொட்டினான் என்றும் சொல்லிவிடுவார்கள். ஆகவே இந்நேரத்தில் “ஈழத்தோ”வர்கள் கவனமாயிருக்க வேண்டும். அயல் நாட்டின் இந்த ஆயுதப் பெருக்கம் (என்று ஊடகங்களால் சொல்லப்படுவது) எப்போதும் “ஈழத்தோ”வருக்கு ஆபத்தானதே. (தாங்களே ஒன்றைப் பத்தாக்கி ஊதிப்பெருக்கிவிட்டு அதை வைத்தே புலம்பி மக்களைக் குழப்புபவர்கள் என்று எம்மை யாரும் சொல்லாதீர்கள்)

இருபது நிமிடப் பறப்புத் தூரம் தான் “இந்தியோ” நேசியாவிலிருந்து “ஈழத்தோ”வரின் வாழ்விடங்களுக்கான தூரம். சும்மா ஜாலியாகப் பறந்து போய் வரும் தூரம். அதுவும், “ஈழத்தோ”வரின் கள்ளுக்கொட்டில்களும், அகதி முகாம்களும், உப்பளமும், கிடுகு உற்பத்தித் தொழிற்சாலைகளும் அவர்களின் முக்கிய இலக்காக இருக்கக் கூடும். இப்போது அவர்கள் வைத்திருக்கும் “ஜோதிகா” ஏவுகணை கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடியதென்றாலும் “ஈழத்தோ”வரை நோக்கித்தான் திருப்பி வைத்துள்ளார்கள். மேலும் “பொம்பிளத் தூக்கி” (இது ஒரு ராசாவின் பெயர்) ஏவுகணையும், “நெருப்பு” ஏவுகணையும் எந்த நேரமும் ஆயத்த நிலையிலேயே இருப்பதாகக் கேள்வி.



இப்போது தானே ஒன்று இரண்டாகச் சோதிக்கிறார்கள் என்று யாரும் கேட்கலாம். இப்படித்தான் தொடங்குவார்கள். பிறகு ஒன்று பத்தாகி பத்து நூறாகி வந்து விடும். நாளைக்கு “ஈழத்தோ”வர்கள் தங்கள் கள்ளுக்கொட்டில்களையும் கக்கூசுகளையும் அகதி முகாம்களையும் உப்பளத்தையும் பணயப் பொருட்களாய் அவர்களிடம் கொடுத்துவிட்டு முளுசக் கூடாது. அதற்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்.



"Twin மடு" சர்வதேச விமான நிலையத்தில் (அதில் இப்போது தண்ணீர் நிரம்பியிருக்குமென்று நினைக்கிறேன்) நிறுத்தி வைத்திருக்கும் தம் "அதியுயர் வேகப் போர் விமானங்ளை" அனுப்பி அந்த ஏவுகணை நிலையங்களை அழிக்க வேண்டும். ஒரு “இத்தினி” நாடாக இருந்து கொண்டு ஒரு பிராந்திய வல்லரசான “ஈழத்தோ”வரையே எதிர்க்கும் எண்ணத்தோடு (தம் பரம எதிரியை விட்டுவிட்டு) காய்களை நகர்த்தி வரும் அந்தச் ‘சுண்டெலி’க்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்.



செப்ரெம்பர் 11 தாக்குதலின் பின் மாற்றப்பட்ட உலக ஒழுங்கில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதே மாதிரியான ஒரு தாக்குதல் கூட நடத்தப்படலாம். “ஈழத்தோ”வரின் கள்ளுக்கொட்டில்கள் அழிக்கப்பட்டால் இனி அந்த நாட்டால் எழுந்து நிற்பதை நினைத்தும் பார்க்க முடியாது. புத்திசாலித்தனமாக "ஈழத்தோ"வர்கள் பெரிய கட்டடங்களோ வசதியான வீடுகளோ இல்லாமல் ஓலைக் கொட்டில்களையே வசிப்பிடமாக வைத்திருந்தாலும் தொழிற்சாலைகள் அழிக்கப்படுதலைத் தவிர்க்க வேண்டும். முன்பாகவே மின்சாரமோ இணையமோ இல்லாமல் வாழ்ந்து வருபவர்களென்றாலும் எதிரியின் இந்த அழிப்பு நடவடிக்கையையிட்டுக் கவனமாகவிருக்க வேண்டும். இதற்கிடையில் அமெரிக்கா முதல் ஏனைய வல்லரசுகளும் இந்தத் திட்டத்துக்கு அனுசரணையாளராய் இருக்கின்றனர். அவர்கள் ஒரு தரப்பை வலுப்படுத்துவதன் மூலம் மறுதரப்பையும் தம்மிடம் வந்து ஆயுதங்கள் வாங்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.



இதைவிட வெளியிலிருக்கும் “இந்தியோ” நேசிய மக்கள் பெருவாரியான பணத்தைக் கொடுக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி பதினான்கு கோடியே எழுபத்து மூன்று லட்சத்து முன்னூற்றுப் பதினொரு ரூபாய் எழுபது காசு வருடந்தோறும் அவர்களுக்கு வெளிநாட்டில் வாழும் “இந்தியோ” நேசிய மக்களால் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் “ஈழத்தோ” மக்களும் அரசும் என்ன செய்யப்போகின்றனர்?
ஓடியொழியப் போகின்றனரா?
எங்கே போவீர்கள்? காடுகளுக்குள் ஒழிவீர்களா?
அல்லது உங்கள் விமானப்பலம், கடற்பலம் எல்லாவற்றையும் கொண்டு எதிரியை அழிப்பீர்களா?
எழுமின் எழுமின்,
இல்லையென்றால்
விழுமின் வழுமின்.

*****
இந்த இராணுவ ஆய்வுக் கட்டுரையை வாசிக்கையில் சிரிப்போ கோபமோ வருகிறதா? அப்படியாயின் இங்கேயும் ஒருமுறை சென்று சிரித்து அல்லது கோபித்துச் செல்லுங்களேன்.
*****

உசாத்துணை நூல்கள்:
"இந்தியோ" நேசியா இன்று.
பேராசிரியர் ரத்தினத்தின் குணச்சித்திரங்கள்
செப்ரெம்பர் 11-உள்ளதும் உசாவலும்.

இப்படிக்கு,
"இராணுவ, அரசியல் ஆய்வாளர்"
மண்டூர் மஸ்ட் டூ.

Monday, July 04, 2005

இந்தியாவுக்கெதிரான பிரபாகரனின் உண்ணாவிரதம்

1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழகத்திலிருந்தபோது அவரது தொலைத்தொடர்பு சாதனங்களைப் பறித்ததோடு அவரை வீட்டுக்காவலிலும் வைத்தது இந்திய அரசு. இதை எதிர்த்து, தமது தொலைத்தொடர்பு சாதனங்கள் தமக்கு மீளக் கையளிக்கப்பட வேண்டுமென்று கேட்டு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்தார் பிரபாகரன். உணவோ எந்த நீராகாரமோ அருந்தாத போராட்டம் அது.

இதற்கு ஆதரவு தெரிவித்துத் தமிழீழ மக்களால் நடத்தப்பட்ட போராட்டமொன்றின் படப்பதிவை இங்கே காணலாம்.


இந்திய அரசு தொலைத்தொடர்பு சாதனங்களை மீளக் கையளித்ததோடும் வீட்டுக்காவலைத் தளர்த்தியதோடும் அவ் உண்ணாவிரதம் இருநாட்களின் பின் வெற்றிகரமாக நிறைவடைந்தது. (இதன் பின்னணியில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது.)

வீரமணி அவர்கள்தான் மென்பானம் கொடுத்து அவ்வுண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். நிறைவு செய்தபின் பிரபாகரனோடு வீரமணி அவர்கள் அளவளாவும் காட்சி.


உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து ஆதரவாளர்களோடு கதைக்கும் பிரபாகரன்.





Wednesday, June 29, 2005

பரிசோதனைப் பதிவு.

அன்பர்களே வணக்கம்.
இது பரிசோதனைப் பதிவு.
$கொழுவி.

Wednesday, June 22, 2005

பேடுகளின் கொக்கரிப்பு.

பெடியன்கள்' எண்டு சொல்லி ஒரு வலைப்பக்கம் வந்திருக்கு.
போய்ப்பாத்தாப் பயமாத்தானிருக்கு. மண்டையோட்டுக்குறியோட கறுப்புப் பின்னணியும் பயங்கரமாயிருக்கெண்டா, அவயள் போட்டிருக்கிற தலைப்புக்களும் அப்பிடி. தாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதியளாம். போடுற பதிவுகளும் சும்மா வெளுத்து வாங்குது.

எடுத்த உடனயே வலைப்பதிவாளருக்கு எச்சரிக்கை விடுகினம். தளங்களை முடக்குகினமாம். பிறகு புலிகளின் வால்பிடியெண்டு கொஞ்சப்பேரச் சொல்லி அவளயவிட மற்றாக்கள வால்பிடிக்க வேண்டாமெண்டு எச்சரிக்கினமாம். நாலு கவிதை, சங்கர் ராஜி பற்றி ஒரு பதிவு, சு.ப. வின் படமொன்று என்று ஒரு சாம்பாறுத் தளம். பத்தாததற்கு, தோழர்களின் பின்னூட்டங்கள் வேறு அவர்களைக் குசிப்படுத்தியிருக்கக் கூடும். நல்ல வியாபாரத்தந்திரமுள்ள, விவரமான தீவிரவாதிகள் தான் அவர்கள். இல்லாவிட்டால் இவ்வளவு பேரை முட்டாளாக்கும் வல்லமை எப்படி வந்தது? இரண்டு நாள் கூட முடியவில்லை, அவர்களின் தளத்துக்கான பார்வையாளர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துவிட்டது. (நான் முதன் முதல் பார்க்கும்போது 31.)

அவர்களின் பெயர்களைப்பாருங்கள். கோமாளிகளின் பெயர்கள். உண்மையில் கோமாளிகள் தான் அவர்கள். தாங்கள் ஏதோ பயங்கமானவர்கள், ஏதோ ஒரு கொள்கையுடையவர்கள், (மற்றவர்களை முட்டாளாக்குவது தான் அது) தீவிரவாதிகள் என்று தோற்றம் தரத்தக்கவகையில் அவர்களின் தள அமைப்பும் பதிவுகளும் இருக்கிறது. இந்நேரத்தில் இயக்குனர் சூர்யா இயக்கி நடித்த ‘நியூ’ என்ற படம் தான் ஞாபகம் வருகிறது. அதில் வில்லன் ஒருவன் நடித்திருப்பான் கவனித்திருப்பீர்கள். கட்டுமஸ்தான பலர் புடைசூட நடுவில் வெளிச்சம் போட்டு ஒருவனின் மேல் கால்போட்டு இருக்கும் அந்தவில்லன் கடைசியில் ஒருவனா ஒருத்தியா எனத் தெரியாதவாறு வெறும் கோமாளியாக மாறும் காட்சி, ஞாபகமிருக்கா? அப்படித்தான் இந்தத் தீவிரவாதிகளும். அத்தனையும் கோமாளிக்கூத்து.

இதற்குள் கவலை கொள்ளத்தக்க விடயமென்னவென்றால், அவர்கள் ஒரு பதிவு போட்டார்கள், சில வலைத்தளங்களை முடக்கியிருப்பதாக.
உண்மையில் அது எவ்வளவு பேத்தலான கதை என்பது ஒருபுறமிருக்க எங்கள் வலைப்பதிவாளர்கள் அடித்த லூட்டிதான் தாங்க முடியாது. அதிலும் சுந்தரவடிவேல் அண்ணனும், ஸ்ரீரங்கன் அண்ணனும் அடித்த பின்னூட்டங்கள்தான் உச்சக்கட்டம்.
தளங்களை முடக்குதல் அராஜகப்போக்காம், இதனால்தான் ஈழப்போராட்டம் பின்தள்ளப்பட்டதாம். அது பாசிசமாம். ஜனநாயக ரீதியில் கருத்துக்களை முன்வைக்கட்டாம். தளங்களை முடக்க வேண்டாமாம். இப்படிப் போகிறது அவர்களின் வேண்டுகோளும் பின்னூட்டங்களும். (என்ன இது? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு)

சத்தியமா என்னால அடக்க ஏலாமப்போட்டுது சிரிப்பை. ஏதோ தொழில் நுட்பக் காரணங்களால் இயங்காமற்போன பதிவுகளை தாம்தான் முடக்கினோம் என்று அவர்கள் புரட்ட, இவர்கள் அறிவுரை சொல்ல, நல்ல நகைச்சுவைக்காட்சிதான் போங்கள். சுந்தரவடிவேலரையும் ஸ்ரீரங்கத்தாரையும் நினைக்கப் பாவமாத்தானிருக்கு. கூடவே தோழர்களையும். என்னத்தச் செய்ய? தலையிட அடிச்சுக்கொள்ளுறதத் தவிர.

சிரிப்புச் சிரிப்பா வருது
இவங்களை நினைக்கச்
சிரிப்புச் சிரிப்பா வருது.
வயிறு நோகச் சிரிப்பன்,
வயிறு வெடிக்கச் சிரிப்பன்.

Monday, June 20, 2005

வயிறு நோகச் சிரிப்பேன்.

ஆங்காங்கு அடிபட்டார்கள்;
நான் அவனில்லையென்றும்
நீ அவன்தானென்றும்.

இவங்களையும் இவள்களையும் நினைக்கச்
சிரிப்புச் சிரிப்பாய் வருது.
உரத்துச் சிரிக்கிறேன்.

நீதான் அவனென்றும்,
நான் அவனில்லையென்றும் சண்டைகள்.
ஐ.பி. பிடித்ததாய்ச் சொல்லி
பி.பி. ஏற சண்டை.
பிறகு வழக்குப் போட மிரட்டல்,
வழக்கம் போல பதுங்கல்.

எல்லாத்தையும் பாத்து
விழுந்து விழுந்து சிரிக்கிறேன்.

என்னை அவனெண்டாங்கள்,
இவனெண்டாங்கள்.
ஆரோ 'ந்தன்' எண்டாங்கள்.
பிறகு 'ந்தன்கள்' எண்டாங்கள்.
எந்தச் சுவரில் போய் முட்ட?

முட்டி முட்டி இடிப்பேன்,
சுவர் உடையுமட்டும் இடிப்பேன்
ஏனெண்டா என்ர தலையில்லத் தானே.

இவங்களையும் இவள்களையும் நினைக்கச்
சிரிப்புச் சிரிப்பாய் வருது.
விழுந்து விழுந்து சிரிப்பன்,
வயிறு நோக சிரிப்பன்,
வயிறு வெடிக்கச் சிரிப்பன்,
ஏனெண்டா அது என்ர வயிறில்லத் தானே.

Sunday, June 19, 2005

மறக்க முடியா நாட்கள்

Image hosted by Photobucket.com

நரிகளின் போர்க்குணம்

நரிகளுக்கு நேருக்கு நேர் நின்று சண்டை செய்கின்ற போராட்ட குணமோ அல்லது அதற்கான மூர்க்க குணமோ இல்லையாயினும் தந்திரத்தரத்தால் எதனையும் சாதிக்க கூடியது.

தன் தேவைக்கேற்ப அரவணைத்தும் தேவை முடிந்ததும் ஏறி மிதித்தும் தானும் ஒரு சர்வ வல்லமையுள்ள மிருகம் என்பதனை அது பல தடவைகளில் நிரூபிக்கிறது என ஒரு மிருக வள ஆராய்ச்சி நிலையம் முடிவு செய்கிறது.

நரிகள் தொடர்பாக பல சுவையான புராண கதைகள் உள்ளன.

ஒரு முறை ஒரு நரி தனது அயலில் உள்ள சிங்கத்தின் குகையும் குகை சார்ந்த பிரதேசங்களையும் தளம்பல் நிலையிலேயே தொடர்ந்து பேண வேண்டும் என்ற நோக்கில் புலிகளை அரவணைக்க முடிவு செய்தது.

புலிகளை மட்டுமல்லாது மான், மரை, பன்றி, கழுதை என எல்லா மிருகங்களையும் அது தன் வசம் இழுத்தது.

ஆயினும் காலப்போக்கில் புலிகள் தவிர்ந்த மற்ற எல்லா மிருகங்களும் நரியின் கூடாரத்தில் குடிபோதையில் மயங்கி கிடக்க புலிகள் மிகத்துல்லியமாக நரியின் கபடத்தனத்தை புரிந்து கொண்டன.

அக்காலத்தில் காட்டில் சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடந்தது. அந்த காட்டினில் கால் வைக்க காத்திருந்த நரிகளுக்கு இது வாய்ப்பாகி போனது.

ஏற்கனவே புலிகள் நரிகளின் குள்ளத்தனத்தை உணர்ந்து நரிகளோடு முரண்பட்டு நின்றதனால் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலிகள் இனத்தையே அது ஒழித்துக்கட்ட முடிவு செய்தது.

புலிகளை மட்டுமல்லாது அங்கு காட்டில் வசித்த அப்பாவி மிருகங்களையும் நரி சித்திரவதை செய்து கொன்றது. அணில்கள் மீன்கள் கொக்குகள் முதலான பல விலங்குகள் நரிகளால் கொல்லப்பட்டன.

இப்படி நரிகளுக்கும் புலிகளுக்குமான பல தொடர்புகளை சொல்லுகின்ற புராண கதைகள் இருக்கின்றன.

இப்போது நரிகளின் சில இயல்புகளை பார்க்கலாம்.

பக்கத்தில் யார் உருப்பட்டாலும் அதற்கு பிடிக்காது.

சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் சலசலக்கும்.

ஒரு விடயத்தை ஊதிப் பெருப்பிப்பதில் நரிக்கு நிகர் நரியே தான்.

புலிகள் மீது தீராத பகையும் வன்மமும் உள்ள போதும் நேரடியாக தீண்ட பயம்.

பனங்காட்டு நரிகள் தவிர்ந்த மற்றய நரிகளுக்கு பக்கத்தில் சிறு சலசலப்பு கேட்டாலும் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

நரிகள் சந்தேக பிராணிகள் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

குள்ளத் தந்திர புத்தி மட்டும் இல்லாவிட்டால் அதனால் எதுவும் செய்ய முடியாது.

காட்டில் எவராயிருந்தாலும் தன்னிடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும்.

நேர்மையாக ஒரு போதும் சண்டையிட்டதில்லை. முதுகில் குத்தும் ஒரு விலங்கு.

Monday, June 13, 2005

இந்தியாவின் இராணுவ உதவியும் தேவையும்!

இலங்கையோடு பாதுகாப்பு ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்திடபட மாட்டாது என வைகோ விடம் உறுதியளித்த இந்திய அரசு தற்போது இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தினை மேற்கொள்ள முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

இப்பாதுகாப்பு ஒப்பந்தத்தினை பயன்படுத்தி இலங்கைக்கான ஆயுத மற்றும் இராணுவ உதவிகளை இந்தியா வழங்கும் என அறிய முடிகிறது.

இந்தியா தனது இறையாண்மையை பாதுகாக்கவும் ஏற்கனவே இருக்கின்ற தலைவலிகள் போதாதென்று இன்னுமொரு மூட்டுவலி வந்து விட கூடாது என்பதற்காகவும் இத்தகைய ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

அது இலங்கையில் வாழும் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ள போதும், அவர்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்வு கிடைக்க வேண்டும் என விரும்புகின்ற போதும் தனது இறையாண்மையை கருத்திற் கொண்டு இத்தகய ஒரு முடிவினை எடுத்திருக்கிறது.

வைகோ போன்றவர்களை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடோ இலங்கையில் ராணுவ உதவி என்ற பெயரில் உள்ளே நுழைவதோ அல்லது இலங்கை ஏதோ ஒரு நாட்டிலிருந்து மிக நவீன அன்னிய தயாரிப்பு ராணுவ தளவாடங்களை வாங்குவதோ இந்தியாவின் இறையாண்மைக்கு நல்லதா என்பதை வைகோ போன்றவர்கள் சிந்திக்க வேண்டும். மற்றும் படி அதனால் அப்பாவி தமிழ் மக்களின் உயிரிழப்புக்கள் குறித்து அவர் சிந்தித்தால் அவரை மாவீரன் என்று யாரும் சொல்ல போவது இல்லை.

விடுதலைப்புலிகள் என்பவர்கள் தரைப்படை, கடற்படை, விமானப்படை, காவல்துறை போன்ற கட்டமைப்புகளை கொண்ட ஒரு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள். அதுவும் அண்மையில் ஏற்பட்ட சுனாமி நெருக்கடியில் வெகு விரைவாக அரச இயந்திரம் செயற்படுவதற்கு முன்னரே அலையோய்ந்த வெறும் பதினைந்து நிமிட நேரத்திற்குள் துரித கதியில் மீட்பு பணியில் இறங்கி செயலாற்றியதன் மூலம் உலக நாடுகள் பலவற்றாலும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டவர்கள்.

தவிரவும் கள்ள ஓட்டுக்கள் பல இட்டு மோசடிகள் செய்து, வாக்குறுதிகளை அள்ளி வழங்கி பின்னர் காற்றில் அவற்றை பறக்கவிட்டு இவ்வாறான ஜனநாயக செயற்பாடுகளினூடு ஆட்சியை பிடிக்காதவர்கள்.

அவர்களை அழித்தல் என்ற பெயரில் ஒட்டு மொத்த இலங்கைத் தமிழினம் மீது இலங்கை அரசு காலத்துக்கு காலம் மேற்கொள்கின்ற இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது தார்மீக ஆதரவினை வழங்குவதே இந்தியாவின் இறையாண்மையை பேணுகின்ற ஒரு செயல் ஆகும்.

நிற்க,

புலிகளை பொறுத்த வரை அவர்கள் தமது ஆயுத பலத்தில் பெரும்பாலானவற்றை இலங்கை அரச படைகளின் ஊடாகவே பெற்றிருக்கின்றனர். முதற் சண்டையில் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் பெறும் ஆயுதங்கள் அடுத்த சண்டையில் இலங்கை இராணுவத்திற்கெதிராக பயன்படுத்தப் படுவதே வரலாறு.

ஆயுதங்கள் என்ன செய்யும். அவை யார் சுட்டாலும் சுடும்.

உலக ஆயத சந்தையில் புலிகளுக்கும் சேர்த்தே இலங்கை அரசு ஆயுதம் கொள்முதல் செய்கிறது என்பது யாவரும் அறிந்ததே.

அவ்வாறாக இந்தியாவும் தற்போது புலிகளுக்கு ஆயுதம் வழங்க தீர்மானிக்கிறது. ஒரு காலத்தில் நேரடியாக ஆயுதங்களை வழங்கிய அது தற்போது இலங்கை இராணுவம் ஊடாக சுற்றி வளைத்து கொடுக்கிறது என்பது தான் வித்தியாசம்.

ஈழப்போராட்டத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் ஈழ விடுதலையை விரைபு படுத்துவதற்கும் தேவையான இராணுவ தளபாடங்கள் குறித்து புலிகளின் இராணுவ வெளியீடுகள் சில வெளியிட்ட பட்டியல் விபரங்கள் இவை.

இலங்கைக்கு ஆயுத உதவி வழங்கும் போது இந்த பட்டியலில் இருக்கின்ற ஆயுதங்களை இலங்கை இராணுவத்திற்கு இந்தியா வழங்கினால் அவை நல்ல படியாக புலிகளின் கைகளில் சென்று சேரும்.

இப்போது பட்டியல் விபரத்துக்கு வரலாம்.


120 மி.மீ. எறிகணை செலுத்திகள் - 25 அவற்றிற்கான எறிகணைகள் 200 000
130 மி.மீ ஆட்லறி - 10 அவற்றிற்கான எறிகணைகள் 100 000
152 மி.மீ. ஆட்லறி - 10 அவற்றிற்கான எறிகணைகள் 100 000
81 மி.மீ மோட்டர் எறிகணைகள் 100 000 (செலுத்திகள் தேவையில்லை)
37 மி.மீ இயந்திரத் துப்பாக்கி - 10 அதற்கான ரவைகள் 100000
23 மி.மீ இயந்திரத் துப்பாக்கி 25, ரவைகள் 500000 (கடற்சண்டைகளில் அதிகம் தேவைப்படுகிறது. இதனை தாராளமாக இலங்கை இராணுவத்திற்கு கொடுக்கவும்.)
ராங்கிகள் எவ்வகையைச் சேர்ந்தனவாயினும் மற்றும் அவற்றிற்கான எறிகணைகள் 25 000
சிறுரக ஆயுதங்கள் தேவையில்லை. தாராளமாக இருக்கின்றன.

விமானங்களின் தேவை அதிகமேயாயினும் இலங்கை இராணுவத்தினரிடம் சேரும் விமானங்கள் வெறும் இரும்புக் குவியலாகவே புலிகளிடம் வரும் என்பதால் அவை தேவையற்றவை.
காங்கேசன்துறை கிடைத்தபின் கடற்கலன்களுக்கான கோரலை அனுப்பி வைக்கிறோம்.

கொழுவியின் குறிப்பு: இலங்கை இராணுவத்தினரின் பலாலி விமான ஓடுபாதை புனரமைப்பை வெகு விரைவில் இந்தியா முடித்து கொடுத்தால் அது புலிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அத்துடன் திருகோணமலை எண்ணைக் குதங்களின் திருத்த வேலைகளையும் முடித்தால் மெத்த பெரிய உபகாரமாய் இருக்கும்.

மீண்டும் கொழுவி சீரியசாகிறது. இந்த படங்கள் பழைய நினைவுகளை மீட்டுகின்றன. ஆட்டோகிராப் மாதிரி!

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

அரசியலில் நமது வலைப்பதிவுகளின் செல்வாக்கு.

நாமும் ஏதோ பொழுதுபோக்காகக் கிறுக்குகிறோம், விவாதிக்கிறோம், சண்டை பிடிக்கிறோம் என்ற அளவிலேதான் வலைப்பதிவுகளை எடை போட்டு வந்தோம். நமது தமிழ்மணத்தில் அங்கத்துவமாயிருக்கும் வலைப்பதிவுகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லையென்றே நானும் நினைத்திருந்தேன். ஆனால் அரசியலில் இவை பெரும் தாக்கத்தைக் கொண்டுள்ளன என்பதை இப்போதுதான் அறிகிறேன். இந்த இனிமையான செய்தியை உங்களுடன் பகிர்வதே இப்பதிவின் நோக்கம்.

அண்மையில் வலைப்பதிவுகளில் மற்றவரை வெருட்டுவதும், காலக்கெடு போடுவதும், வழக்குத்தொடுப்பதாகச் சொல்வதும் நடந்து வருகின்றது. (இதற்குள் என் பெயரும் சம்பந்தப்பட்டது சுவாரசியமானது). இதைப்பார்த்த அரசியல்வாதிகளும் தங்கள் பங்குக்குக் கொளுத்த ஆரம்பித்துவிட்டார்கள். எதைச் சொல்கிறேன் என்று புரிகிறதா?

ஜே.வி.பி. சந்திரிகாவுக்குக் காலக்கெடு விதித்துள்ளது.
"வருகிற 15 ஆம் திகதிக்குள் பொதுக்கட்டமைப்பு கைச்சாத்திடும் எண்ணத்தைக் கைவிட வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும். சந்திரிக்காவுக்கான காலக்கெடு பதினைந்தாம் திகதி இரவு பன்னிரண்டு மணிவரை. இப்போதிருந்து அவருக்கான காலக்கெடு ஆரம்பிக்கிறது."
என்று சந்திரிக்காவை வெருட்டியுள்ளது. கூடவே இறையாண்மை, நல்லபெயருக்குக் களங்கம், தனித்தன்மை பற்றியெல்லாம் கதைத்துள்ளது. என்ன ஒற்றுமை பாருங்கள்.

ஏதோ ஒரு வழியில் நமது வலைப்பதிவுகள் கவனிக்கப்படுவது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இப்படியான ஒரு செயலுக்கு நம்மை முன்னோடியாக்கிவிட்டார்களே என்று நினைத்து மறுபுறம் வேதனையாயும் இருக்கிறது. யார் கண்டது? வலைப்பதிவாளர் ஒருவரே ஜே.வி.பி. முகவராயும் இருக்கக் கூடும்.

உங்களுக்கு எப்படி இருக்கிறது அன்பர்களே?

Friday, June 10, 2005

சோதினையுடன் விடைபெறுகிறேன்.

பிள்ளைகளுக்கு summer சோதினை நடக்கிறது. சோதினை முடிந்தவுடன் எங்காவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு செல்லலாம் என்று எண்ணம். இனி விசா கூட தேவையில்லையாம் பக்கத்து நாடுகளுக்கு போவதற்கு. (எப்ப அது நடைமுறைக்கு வருதோ தெரியவில்லை)

ஆகவே அடுத்த வாரத்திலிருந்து நான் சோதினையுடன் விடைபெறுகிறேன்.

இது தற்காலிக விடைபெறுதல் தான். மற்றம் படி.. தற்போது இணையத்தில் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த.. என்னைச் சிலரோடு இணைக்க நடக்கும் முயற்சிகளுக்கு அஞ்சி வேதனையுடன் விடைபெறவில்லை.

உண்மையில் அது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அது எனது பிரச்சனையும் இல்லை.
நன்றி

Wednesday, June 08, 2005

புஸ்தக வெளயாட்டுக்கு நானும் வர்றேன்

இந்த புத்தக வெளயாட்டுக்கு நம்மை யாருமே கூப்பிடல. திறந்த வூட்டுக்குள்ளார நாய் (அட என்னை நானே நாய்ங்கிறேன்) புகுந்த மாதிரி நானே புகுந்துக்ககிறேன். ப்ளீஸ் என்னையும் ஆட்டத்தில சேர்த்துக்குங்கப்பா..

ஆமா இன்னி வரைக்கும் எழுதினவங்க யாராச்சும் சொல்லி அப்புறமாத்தானே எழுதினாங்க. ஆனா பாருங்க சொல்லிச் செய்வர் சிறியர் என்கிற மாதிரி சொல்லாமல் செய்வர் பெரியர்ங்க..

நாம எப்பவுமே பெரியவங்க தான் அதுக்காக சின்ன வயசில படிச்ச பிடிச்ச புத்தகங்களை மறந்திட முடியுமா என்ன?

சரி ஆட்டத்துக்கு போகலாமா? என்கிட்ட உள்ள புத்தகங்க ஒரு 100 ஐ தாண்டுமுங்க. பட்டியல் போட்டுரலாமா?

அம்புலிமாமாவில ஒரு அம்பது போடுங்க.. சரி போட்டாச்சா? இப்போ பால மித்ரால ஒரு முப்பது போடுங்க.. எவ்வளவுங்க ஆச்சு? எண்பதா? சரி லயன் காமிக்ஸ் அப்புறம் ராணிக் காமிக்ஸ் வகையறாக்கள்ள ஒரு அம்பது போடுங்க.. என்னா.. 100 தாண்டிச்சா..

இப்போ பிடிச்ச புத்தகங்களுக்கு வரலாமுங்க.

புத்தகம் நம்பர் ஒண்ணு: முரட்டுக்காளை கார்த் தோன்றும் இயந்திர உலகு

புத்தகம் நம்பர் இரண்டு: ஜேம்ஸ் பாண்டு தோன்றும் ஆபத்தான அழகி

புத்தகம் நம்பர் மூணு : லேடி ஜேம்ஸ்பாண்டு மாடஸ்தி தோன்றும் சுறா மீன்

புத்தகம் நம்பர் நான்கு: மாயாவி தோன்றும் லண்டனில் மாயாவி

காமிக்ஸ்சில நெறைய புக்குங்க இருந்தாலும் நமக்கு இந்த நாலும் புடிச்சதுக்கு காரணம் அதுங்க கதையமைப்பு தானுங்க..

நீங்க யாராச்சும் ஜெர்மன் இலக்கியங்கள் படிச்சிருக்கீங்களா? நம்ம டோண்டு சார் (அவரை நான் ஆசையா மாமான்னு கூப்பிடுவேன். அவரே சொன்னாரு அப்டி கூப்பிடுன்னு) அப்புறம் ஜெர்மனில இருக்ற முத்து. அப்புறம் இன்னொருவங்க.. அவுக பேரு என்னான்னா.. மறந்திடுச்சே.. ஆ.. சந்திரவதனா.. இவுங்க எல்லாம் ஜெர்மன் இலக்கியங்க படிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறன்.

சும்மா இல்லீங்க.. அட்டகாசமான நல்ல புஸ்தகம் எல்லாம் ஜெர்மனில இருக்கு.

Die Gute Masse அப்டீன்னு ஒரு புக்கு.. நம்ம மதி அக்....!!!! இல்லயில்ல மதி சொன்னாங்களே The Good Earth அதனோட ஜெர்மன் பதிப்பு. அதப் படிச்சிட்டு மறக்கவே முடியலைங்க. மனசுக்குள்ளை நின்னாடுது.

அப்புறம்.. Who says Elephants can't dance இந்த புக்கு பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா.. நம்ம ராம்கி அண்ணாச்சி(முன்னால ரஜினிங்கிற வார்த்தையை சேர்த்துக்கோங்க) சொன்னாரே தனக்கு படிச்ச ஆங்கில புஸ்தகம்னு. அதே தான். அதனோடை ஜெர்மன் பதிப்பு Wer sagt, können Elefanten nicht tanzen.அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சது. எனக்கு புரியுது எதுக்காக அவருக்கு அந்த புக்கு பிடிச்சிருக்குன்னு. (எதுக்காகன்னா.. அவருக்கு எதுக்காக புடிச்சிருக்கோ அதுக்காக தான்).
இன்னும் நிறைய ஜெர்மன் புக்குங்க இருக்கு.. ஆனாலும் இனி தமிழ் புக்குங்களுக்கு வருவோம்..
நான் படிச்சு முடிச்ச சில புக்குங்க,

அப்பமா இடியாப்பமா: அப்பம், இடியாப்பம் பத்தி நல்ல தெரியாத செய்திகளை இந்த புக்கு சொல்லுது. இதை எழுதினவரு அப்பம் இடியப்பாம் சாப்பிடுறதில ரொம்ப பிரபல்யம். அவர் பேரை சொன்னாலே அவருக்கும் அப்பத்துக்கும் இடையில இருக்கிற தொடர்பை புரிஞ்சுக்கலாம். ஆனாலும் புஸ்தகத்தில தன்னோட அரைவாசி பெயரை தான் பயன்படுத்தியிருக்காரு!

யூதப்போராட்டத்தில் எனது சாட்சியம்: இதை எழுதினவரு யூதப்போராட்டத்தில ஆரம்ப காலங்களில் பங்கு பத்தினவராம். அப்புறம் போராட்டம் போரடிக்க எங்கேயோ போயிட்டாரு. எங்கேன்னே தெரியல்ல. பிறகு ரொம்ப நாளுக்கப்புறம் மெடிக்கலுக்காக பிரான்ஸ் வந்தவரை அவரது மனைவி சும்மா இருக்கீங்க ஏதாச்சும் எழுதுங்கன்னு சொன்னதுக்காக இந்த புக்கை எழுதினாராம். அப்புறம் யூதப் போராட்டம் முடிஞ்சாப்புறம் யூதப்போராட்டம் முடிந்து விட்டதுன்னு கூட ஒரு புக் எழுதினாராம். (அது நான் இன்னும் படிக்கல.) இதெல்லாம் இந்த புக்கோட முன்னுரையில இவர் சொல்லியிருக்கார்.

அப்புறம் ஓம் ன்னு ஒரு புத்தகம். இத எழுதினவரு கொரில்லா குரங்குக என்றும் ஒரு புக்கு போட்டிருக்கிறாரு. நான் இன்னும் படிக்கல்ல அத.

இன்னும் கொஞ்ச லிஸ்டு இருக்கு

சூ..சூ.. சில கொறிப்புக்கள்

பதினாலாவது சந்திரன்

ரூபாத் தேசம்

ஆ.. இன்னொன்னு சொல்ல மறந்திட்டேன். சீனா சிங்கள வாணன்னு ஒருவர் போடுவார் பாருங்க புக்குக. அடடே..
பல் துலக்குவது எப்படி?

கண்ணாடி போடுவது எப்படி?

பவுடர் பூசுவது எப்படி..?

இந்த புக்குங்க எனக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணிச்சு.

சரிங்க.. ஆமா என்னை யாரும் அழைக்கலை.. அதுக்காக நான் அப்பிடி விட முடியுமா என்ன,
இவங்க தான் நான் கூப்பிடுறவங்க!
மாடர்ன் கேர்ள்..
முகமூடி
இணைய குசும்பன்
வரட்டுங்களா..

Monday, June 06, 2005

எழுத்துப் பொறுக்கி குருவிகள்

தீராநதி, உயிர்மை, காலச்சுவடு, கணையாழி இதழ்களில் வருகின்ற கவிதைகளை படித்து படித்து போர் அடித்து விட்டது. வித்தியாசமான புதிய முயற்சிகளை உள்ளடக்கிய கவிதைகள் தேடி கொழுவிகள் அலைந்தனர்.

அகப்பட்டது யாழ் இணையத்திலிருந்து சில பல நல்ல இதுநாள் வரை எங்கேனும் வாசித்தறியாத நல்ல கவிதைகள்.

மாந்தோப்பு என்ற இடத்திலிருக்கின்ற குருவிகள் என்னும் அதி உன்னத கவிஞன் எழுதிய கவிதைகளை படித்த மாத்திரத்திலேயே கொழுவிக்கும் குழப்பிக்கும் பிடித்து விட்டது.

மரபுக்கவிதை புதுக்கவிதை என கவிதைகளை பலவகையாக பிரிக்கலாம். ஆனால் குருவிகளின் கவிதைகளை மொத்தம் 30 வகையான பிரிவுகளில் வேறுபடுத்தலாம். இதுவே அவரது கவிதைகளின் சிறப்பும் ஆகிறது.

அவையாவன

ஆனாக் கவிதைகள், ஆவன்னா கவிதைகள் முதலான உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாம்.

ஆனாக்கவிதைகளிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவிதையாக தரவேண்டும் என கொழுவியும் குழப்பியும் விரும்பினாலும் நல்ல இலக்கியங்களை படிக்க காத்திருக்கும் வலை மேய்பவர்களின் ஆவல் கருதி முழுவதையும் தர எண்ணுகிறோம்.

முதலில் ஒரு வானாக் கவிதை படியுங்கள்.

வாழ்வெனும் வீதியில் பயணம்
வழக்கங்கள் மாறா விதிகள்
வழமையானால் இல்லை அவதிகள்
வழமைக்கு மாறாய் விதிகள்
வடிவமைத்து வடிவாய் வாழினும்
வரும் வாழ்வும் இனிதே பயணிக்கும்..!
வழமை நாம் விரும்பினும்
வழமைகள் மாற்றி
வரும் வாகனங்கள் வீதியில் சகஜம்
வந்தவை தரும் விபத்துக்கள்
வந்த பின் வருத்தம் தான் மிஞ்சும்
வருமுன் காப்போம் விதிகள்...!

வந்த விதி வழி அப்பாவியாய்
வடிவாய் வீதி வழி நீயும் வந்ததால்
வாழ்க்கைப் பாதையில் சந்தித்தாய்
வகை வகையாய் விபத்துக்கள்
வந்தவை எதுவும் புதிதல்ல
வருந்தவும் அங்கு இடமில்லை
வருந்த உன்னில் எதுவுமில்லை
வருந்தித் தொலைக்காதே உன் வசந்தம்
வாடா உன் முகம் என்றும் வேண்டும்
வரமது தந்திடு அரு மலரே...!

வசந்தம் வந்த வேளையில்
வந்தாய் என் வாழ்வின் ஒரே வசந்தமாய்
வடிவாய் உன்னை அழைத்துச் செல்வேன்
வருங்கால வீதி தன்னில் கரம் பிடித்தே
வருந்தாமல் வை ஒரு நம்பிக்கை
வரும் என் கை உன்னை நாடியே..!
வரும் மரணம் கூட
வழி மறிக்கா
வகையான அன்பு வழி
வரும் எங்கள் வாழ்வில் கடைசிவரை
வருத்தமின்றி வா
வகையாய் குதூகலிப்போம்
வான வீதியில் வாழ்ந்திடும்
வண்ணச் சிட்டுக்களாய்....!


வானாக்கவிதையின்
வனப்பிலே
வழிந்தோடிய
வளர் தமிழை (அடச் சே.. கொழுவிக்கும் குழப்பிக்கும் குருவிகளின் தாக்கம் இருக்கிறது) பருகிய நீங்கள் இனி குருவி எழுதிய ஒரு ஊனாக் கவிதை படியுங்கள்.

உதிர்ந்த வார்த்தையொன்று
உள்ளத்தைக் கிழித்தது
உண்மை அன்பு தேடி
உன்னை உண்மையாய் நாடி
உலகமே நீ என்று கண்டதற்கு
உன் காணிக்கை இதுதானா....??!
உண்மையாய் இக்கணம்
உலகமே வெறுக்கிறது
உன் நினைவு வாட்டுகிறது
உறக்கம் தொலைகிறது
உண்மை என்ன...?!
உன்னில் என்ன அவநம்பிக்கை
உன்னை ஊரே ஏய்க்குதோ
உன் கண்களை மறைக்குதோ..??!
உயிரே...
உனக்கொரு வேண்டுகோள்
உள்ளத்தில் நீயே முதலாய்
உன் வார்த்தைகளால்
உன் நிலை தாழ்த்தாதே...!
உண்மை அன்புக்கு
உலகில் இடமில்லை
உண்மை என்று உணர்ந்து
உலகை வெறுத்தவன்
உன் வார்த்தைகளால்
உண்மையில் உறுதியாகிறான்...!
உண்மைக்காய்
உறங்கி விழித்தவன் - இவன்
உளறுவதாய் என்னாதே - இன்னும்
உலகை உணர்கிறான்
உள்ளங்கள் உணர்கிறான்...!
உண்மையில் அன்பு
உன்னிடத்தில் உண்டா...??!
உலகில் உண்டா....??!
உண்டு
உன்னால் அதை
உள்ளம் கொண்டு தெளிக்கக் கூட முடியவில்லை
உண்மைக் காரணம்....
உண்மைகள் என்று
உலகம் உன்னை ஏய்ப்பதால்
உன்னை நீயே உணர மறுப்பதால்
உண்மைத் தேடல் இன்றி
உறுதி இழந்ததால்....!
உண்மையில் இவன்
உறுதியின் உறைவிடம் - இருந்தும்
உண்மை அன்புக்கு
உள்ளது அடைக்கலம்
உனக்கு மட்டுமே என்றும் அது...!

இனி நாங்கள் தரவிருப்பது குரவி எழுதிய ஒரு ஈனாக் கவிதை(ஈனக்கவிதை அல்ல).. ஈஈதோ..

இயற்கையை ரசித்தவன்
இன்பத்தை ருசித்தவன்
இருப்பவைக்காய் ஆசை வளர்த்தவன்
இழப்பதையே வெறுத்தவன்
இருளுக்குள் ஒளி தேடியவன்
இனிய விடியலுகாய் ஏங்கியவன்
இருப்பவர் எல்லாம் இன்பமாய் வாழ
இலட்சியம் வளர்த்தவன்
இனிய உலகுக்காய்
இனிய கனவு ரசித்தவன்
இனியவளே மலரே உன்
இதயத்தை அளந்ததும்
இயல்பை இழந்துவிட்டான்
இரவும் பகலும் உன் நினைவுகளால்
இந்து சமுத்திரமானான்
இயற்கை எங்கனும் உன்னுருவம்
இயல்பாய் வரையும் ஓவியனானான்
"இன்பத்துக்கு வழியெது
இனியவளின் வார்த்தையது"
இப்படியொரு தத்துவனானான்
இருப்பு இவனுக்கு வெறுப்பு
இன்று அதுவே கடமையாக்கினான்
இனிப்பாய் ஒரு வரி
இயல்பாய் அறியாதவன்
இன்று வரிகளில் தேன் சொரிகிறான்.....
இப்படி இப்படி எத்தனை மாற்றங்கள்
இவை எப்படி இவனுக்குள்
இன்னும் காரணம் அறிந்ததில்லை
இதன் மாயமும் புரியவில்லை
இருப்பவை எல்லாம் இன்பமாய்
இனியவளே உன் ரசிகனாய்
இவன் காண்பதெல்லாம் சொர்க்கமாய்
இவை பிரமையும் அல்ல
இன்றைய நிஜங்களாய்
இனிய நாளைய நினைவுகளாய்
இவன் இள மனதோடு பதிவாகுது
இவையே நாளை
இவன் வரலாறாகும்...!

நமது குருவிகள் லேசுப்பட்ட ஆள் இல்லை. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் தொடத் தயங்கும் விடயங்களையும் எழுத்துக்களையும் தொடுவார். பின்னே.. பாருங்கள் அவர் ஒரு பேயன்னா (பேயன் அல்ல) கவிதையும் எழுதியுள்ளார்.

பேசா மலரே
பேசினாய் முதல் வார்த்தை
பேச்சிற்கு நாலு வார்த்தை
பேதைக் குருவியிவன்
போதை தீர....!
போ... மலரே
போன காலம் மெளனத்தால்
போனதே வீணா...
பேரன்பு உனை மலரவைக்க
போனதோ வீராப்பு
போனதை எண்ணி வருந்தி
பேசினாயோ அன்பு வார்த்தை..!
பேசியது தேனினும் இனிப்பாய்
பேசாச் செவிகூடச் சுவை அறிந்து
போதை கொண்டு
பேச்சுக்கு அடிமையாகிறது....!
பேசாமல் தொடர்வாயோ
பேச்செனும் அமுதம் தினமும் ஊட்டாயோ..??!
போதை எனித் தீராது
பேசியதும் இங்கினி
போகாது வீணே...!
பேதையெனினும் போதையெனினும்
போகும் அவை
பேதையிவன் மூச்சில் கலந்து...!
பேச்சின் மொழியும்
பேதையே உன் ஞாபகம் தந்து
போகும் இவன் இறுதி மூச்சுவரை...!
பேசியதை இங்கு பேசியதற்காய்
பேசாமல் பேசிடு என்ன
பேச்சதில் நீயும் மலர்வாய்
பேதையிவன் நெஞ்சில்
பேரழகு மலராய்...!

என்ன.. குருவிகளின் ஆனா ஆவன்னா கவிதைகளில் குளித்தீர்களா..? நல்ல இலக்கியங்களை படித்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம். தெரிந்து கொண்டீர்களா?

மீண்டும் சந்திப்போம்.
பிற்குறிப்பு கவிதைகளின் முழு உரிமையுமும் குருவிகளுக்கே சொந்தம். ஆனாவை ஆவன்னா என்றோ ஊனாவை ஊவன்னா என்றோ மாற்ற யாருக்கும் அனுமதியில்லை.

Sunday, June 05, 2005

காட்சியும் கானமும் ஒலிப்பதிவு

இன்றைய கவிதை தவறணையில் மலரும் புதிய கள் தியாகமாம்! காட்சியும் கானமும். ஒலிப்பதிவில் மலர்கிறது.

எமது முன்னைய கவிதைக்கு அளித்த அதே ஆதரவினை இதற்கும் அளிக்கவும்.

சிறார்கள் நாம் விடும் தவறுகளை மன்னித்தருளவும்.

இந்த காட்சியும் கானமும் பழையவனின் எழுத்தருவில் மலர்கிறது. நன்றி.


Sunday, May 29, 2005

கவிதைத் தவறணை

இன்றைய கவிதைத் தவறணையில் புதிதாக வடிகட்டி வந்திருக்கும் கவிதைக் கள்ளு புதியவனுடையது. மிக அருமையாக கவி வடிக்கும் அவரது எழுத்துக்கள்

அற்புதமானவை.

ஆச்சரியமானவை.

இயல்பானவை..

ஈ...ஈ...ஈ... (ஈயன்னாவில ஒரு சொல்லும் மாட்டுப்படேல்ல எண்ட படியாலை..)

உயர்வானவை..

ஊக்கம் தருபவை..

எழுச்சி கொள்ள செய்பவை..

ஏக்கம் தருவன..

இப்படி அவரது கவிதைகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவர் தமது கவிதைகளை அனுப்பி இன்று முதல் எமது கவிதைத் தவறணையில் இணைந்து கொள்கிறார். வாருங்கள் அவரது கவிதைக் கள்ளைக் குடிச்சு மயங்கி கிறங்கி போவோம்.

இதோ அவரது காதல் ரசம் சொட்டும் கவிதை. தொடர்ந்தும் அவரை எமது கவிதைத் தவறணைக்கு வரவேற்போம்.

(இந்த கவிதையை மன்னவனின் குரலில் ஒலிப்பதிவு செய்ய முயற்சித்தும் முடியவில்லை)

மீண்டும் சாவேன்

Image hosted by Photobucket.com

நீ இல்லையென்றால்..
நான் செத்து விடுவேன்..

நான் செத்துவிட்டால்
நீ அனாதையாகி விடுவாய்..
நீ அனாதையாகினால்..
நான் மீண்டும்
செத்து விடுவேன்.

(இக் கவிதைத் தவறணையில் கள்ளுக்குடித்தவர்கள் கீழே நட்சத்திரக்குறி இருக்கிறது. அதில சக என்பதை அமத்தி செல்லவும்.)

Thursday, May 26, 2005

என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி

அன்பு வலைப்பதிவு நண்பர்களே,

இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன.

அந்த பின்னூட்டங்களை நான்தான் இட்டேன் என்பதையும் எனது பெயரை பாவித்து எவரும் அவற்றை இடவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, May 22, 2005

தரகு முதலாளித்துவமும் மனைவியும்.

அப்பப்பா என்ன வெயில்?
இதோ, இதிலிருக்கும் பொருட்களை எடுத்து வைப்பீராக.

என்னப்பா? சந்தைக்கெண்டு போய் எங்க சுத்திப்போட்டு வாறியள்?

நாம் எவ்விடமும் சுத்தவில்லை. நேரே சந்தைக்கு மட்டுமே போய் வருகிறோம். மனிதர்கள் நாங்கள் படும் வேதனை உங்களுக்கெங்கே தெரியப் போகிறது? சந்தைக்குச் செல்வதிலுள்ள இடர்பாடுகளும், குட்டி முதலாளிகளுடன் பேரம்பேசிப் பொருட்கள் வாங்க நாங்கள் படும்பாடுகளும் சொல்லுந்தரமன்றென்று நாம் அடிக்கடி இயம்புவது உங்கள் செவிட்டுக்காதுகளுக்கு ஒருபோதும் விளங்காதென்பது எமக்குத்தெரியாததல்லவென்பது நன்றாகத் தெரிந்தும் வேண்டுமென்றே சீண்டவும் கோபமேற்றவும் இயம்பப்படும் வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் பொருளென்னவென்பது தெரியாமல் வினவுவதாகச் சொல்லிக்கொள்ளும் உங்கள் வஞ்சகப்புத்திகளிற்றாம் நாம் தெளிவுறுகிறோமென்பதைச் சொல்….

போதுமப்பா. நான் என்ன கேக்க நீங்கள் என்ன சொல்லிறியள்?

நீங்கள் கேட்பதன் பொருளை முற்றிலுமாகப்புரிந்துதாம் நாம் பதிலிறுக்கிறோம்.

நிப்பாட்டுமப்பா.. என்ன நாம் தாம் தூம் எண்டு குதிக்கிறியள். அதுசரி நீங்கள் தனியத்தானே சந்தைக்குப் போனனியள்? இல்லாட்டி வேற ஆரோடயும்…?

ஆம். நாம் தனியேதாம் போய் வந்தோம். ஒரு மனிதனின் துன்பத்தைப் புரியாமல் அவன்மீது சந்தேகப்பட்டு துரோகிப்பட்டம் கட்டப்பார்க்கும் உம்போன்றவர்களினாற்றாம் நாம் பேச்சுச் சுதந்திரத்தையே இழந்துள்ளோமென்பதோடல்லாமல் தரகுமுதலாளிகளையும் குட்டி பூர்சுவா வர்க்கத்தையும் எதிர்க்கத்திராணியற்று…

போதும். போதும்…
அதுசரி, என்ன காய்கறியெல்லாம் இப்பிடி வாடிக்கிடக்கு?

இதுதாம் தொழிலாள வர்க்கத்தின் சாபக்கேடு. உழைக்கும் தொழிலாளிகளின்மேற்சவாரி செய்யும் தரகுமுதலாளிகளின் இயந்திரமான அடக்குமுறைகளினாற் கட்டுண்டுபோன வாழ்க்கையை வாழும் இருப்பிழந்த-உளமிழந்த-நிம்மதியிழந்த நிலையாகிப்போன வாழ்க்கையின் கொடிய பக்கங்களில் வாழ்ந்துவரும் தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை முடக்கும் தரகுமுதலாளிகளின் பினாமிகளான குட்டிப்பூர்சுவாக்களனினையெதிர்த்துச் செய்ய வேண்டிய போராட்டத்தின் ஓர் அங்கமாக புதிய ஜனநாயகப் புரட்சியைக் கைக்கொள்ளப்போகும் இவ்வர்க்கம் தொடர்ந்தும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் அவலநிலையின் வெளிப்பாடே இந்தச் சோகங்கள்.

எனக்கொண்டும் விளங்கேலயப்பா. சந்தையில ஏதும் பிரச்சினையே?


பிரச்சினைகள் எங்குதானில்லை? மனித இனம் தோன்றினதிலிருந்தே தொடங்கிவிட்ட உற்பத்திகளின்மீதான சொந்தம் கொண்டாடும் சண்டைகளின் தொடர்ச்சியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் உற்பத்திகளின் மீதான வன்முறையின் தொடர்ச்சியே தாம் இத்தகைய பிரச்சினைகள் என்று நாம் சொல்லும்போது, இப்பிரச்சனையின் வேர்களையும் அறிந்தாற்றான் நிவர்த்திகளும் செய்யமுடியுமென்பதைத் தெளிவாகப்புரிந்துகொண்டு புதிய ஜனநாயகப்புரட்சிக்குப் புத்தொளிபாய்ச்சி அப்போராட்டத்தை தரகுமுதலாளிகளை நோக்கிப் பாய்ச்ச வேண்டிய தேவையையும் எம் தோழர்களுக்கு நாம்தாம் தெளிவாகச் சொல்ல வேண்டும். பொருள்முதல்வாதக்கொள்கைளைச் சரியாகப்புரியாமற்றான் இன்று தரகுமுதலாளிகளுக்கெதிரான போராட்டத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட முடியாமற்றுன்பப்படுகிறோம். மூலதனமுடக்கலென்பதுத் திட்டமிட்டு பாட்டாளிகள்மேற் செலுத்தப்படும் வன்முறையென்பது தெரிந்தும் எம் தோழர்கள் காக்கும் மௌனம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதென்றாலும் இது பாசிசத்தின் விளைவானவொன்றென்பது தெரிந்தாலும் மானுடத்துக்கெதிரானவொருவுத்தியென்பதுப் புரிந்தாலும் தொழிற்றுறைக்கும் மானுடத்துக்குமெதிரான நிலையென்பதறிந்தாலும் பொருளாதாரப்பொறிமுறையின் மீதான அடக்குமுறைக்கெதிரானதென்பதுணர்ந்தாலும் கனிவளச்சுரண்டலையும் இத்தோடிணைத்துப்பார்க்க வேண்டிய தேவையிருப்பதாலும் ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டிய தேவையுண்டு.

நீங்கள் கதைச்சு முடியிறதுக்குள்ள நான் கறி வைச்சு முடிச்சிடுவன்.
நாம், தாம் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிறியள். ஆரப்பா உங்களோட சேந்த மற்றாக்கள்?

நாமென்பது நயமுள்ள வார்த்தை. அது இப்போது என்னையே குறிக்கும்.
நானென்பதை எப்போதொழிக்கிறோமோ அப்போதே மானுட விடுதலை பிறக்குமென…

ஆராவது சொல்லியிருப்பினம்.
எனக்கெதுக்கு அதெல்லாம்.
நீங்கள் ஏதாவது தமிழ்ப்பேச்சாளராய் இருந்திருக்கலாம்.
சொல்லிப்போட்டன், இனி என்னோட இப்பிடி நாம் தாம் தூம் எண்டு குதிச்சுக்கொண்டு நிண்டியளெண்டா இனி சாப்பாடு கிடைக்காது.

அம். இதுதாம் தரகுமுதலாளிகளினதும் பூர்சுவாக்களினதும் பொறிமுறை. உழைக்கும் மக்களுக்கு உணவை மறுத்து அவர்களை அடிப்பணிய வைத்து அவர்களின் சிந்தனையை முடக்கும் பொறிமுறை, மனித விழுமியங்களைப் பொசுக்கும் பாசிசம், அடக்குமுறை, ஏகாதிபத்தியம். இதைத் தீர்த்துக்கட்டத்தான் அறிவுஜீவிகள் எல்லாரும் சேர்ந்து உளமொப்பிய புதிய ஜனநாயகப்புரட்சி தொடங்கு.. க்கே…க்கே…க்கே...

என்னப்பா விக்குதோ? இந்தாங்கோ. சோடாவக்குடியுங்கோ.

இல்லை. இது ஏகாதிபத்தியங்களின் திட்டமிட்ட க்கே.... திட்டமிட்ட சந்தைப்படுத்தற்பொறி க்கே.. பொறிமுறைப்பண்டம். ஏழைகளின் க்கே.. மேலேவப்படும் அராஜகம்.. க்கே.. பச்சைத்தண்ணியிருந்தாத் க்கே.. தாரும்.


------------------------------------------------
கொள்கைகள் 'மறுவாசிப்பு'ச் செய்யப்படவில்லை, மொழிப்பாவனை மட்டுமே.
------------------------------------------------