Wednesday, May 24, 2006

சர்வதேச சமூகமெண்டால் நாங்கள் தான் மச்சான்

சர்வதேச சமூகம் எண்டால் நாங்கள் தான் மச்சான்

குசினிக்குள்ளை இண்டைக்கு நிறையக் கோப்பைகள் வந்துகொண்டே இருந்தன. சுந்தர மூர்த்தி சரியா களைச்சுப் போட்டான். இந்த வசனத்தில இருந்து அவனை நான் சுந்து எண்டு தான் கூப்பிடுவன். ஏனெண்டால் அவன் அந்தப் பெயரினூடாகவே எல்லாருக்கும் அறிமுகம். சுந்து பக்கத்தில நிண்ட குமரேசன் தனக்கு கோப்பயளைக் கழுவியடுக்க உதவுவான் எண்டு எதிர்பாத்துக்கொண்டு நின்றான். ஆனால் குமரேசு நாளைக்காரோ காது குத்துப் பார்டிக்கு இண்டைக்கே போய் கொத்துரொட்டி போட வேணும் எண்டு போட்டு போயிட்டான். அவன் கொத்து ரொட்டி போடுறதில பெரிய விண்ணன். இங்கை ஆருக்கு கல்யாண வீடெண்டாலும் பிறந்த நாள் விழா எண்டாலும் ஏன் வெடிங் அனிவெர்சிறி எண்டாலும் அவனைத்தான் கொத்து ரொட்டி போட கூப்பிடுறது. அது அவனுக்கு ஒரு சைட் வருமானமும் கூட. ஆனால் இயக்கக்காரரின்ர ஏதாவது எழுச்சி ஊர்வலங்களுக்கும் நிகழ்ச்சியளுக்கும் கொத்துரொட்டி போடேக்கை அவன் ஒரு சல்லிக் காசும் வாங்கிறதில்லை.

சுந்து இப்பவும் கோப்பையளை தேய்ச்சுக்கொண்டிருந்தான். எண்டைக்கோ ஒரு நாளைக்கு குமரேசு அம்பிடுவர் தானே.. அப்ப வைக்கிறன் அரிவாளை எண்டு அவன் மனசுக்கள்ளை நினைச்சான்.

ஒரு பன்னிரண்டு வருசமா இதைத்தான் சுந்து செய்யிறான். வந்த புதுசில உது மாதிரி கன வேலையளை அவன் செய்திருக்கிறான். வேலைக்கு கொண்டு போய்ச் சேத்து விடுங்கோடா எண்டு முன்னுக்கும் பின்னுக்கும் திரிஞ்சால் அப்ப அவனைக் கொண்டு போய் உப்பிடியான வேலையளில தான் சேத்து விட்டாங்கள்.

சரியா கவலைப்பட்டுப்போனான். நான் படிச்ச படிப்புக்கு எண்டு அவன் ஒருக்காலும் நினைக்கேல்லையெண்டாலும் இந்த வேலையள் அவனை சரியா பாதிச்சிட்டுது. பிறகு பழகப் பழக அதுவே பழகி.. செய்யிறது என்ன வேலையெண்டாலும் அதை நிறைவாச் செய்யதால் போதும் எண்ட மனப்பக்குவம் அவனுக்கு வந்திட்டுது.

எண்டாலும் ஊர்ப்பக்கம் கடைசியா போகேக்கை.. சிலர் நக்கலா என்ன வேலை செய்யிறியள் எண்டும் கேட்டவை. அவனுக்கு தெரியும் அப்படி கேட்டவையின்ர ஆரோ ஒரு உறவு எங்கேயோ இப்பிடி ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும் எண்டு.

சுந்துவுக்கு சரியா நாரி நொந்தது. வீட்டை வரவும் நேரம் செண்டு போட்டுது. எண்டாலும் சம்மர் தானே.. இன்னும் பகல் மிச்சமிருந்தது. றூமுக்கு வந்து கட்டிலில விழுந்தான். கட்டிலும் றுமும் அலங்கோலமாக் கிடந்திச்சு. ஊத்தை உடுப்பக்கள் நிறைஞ்சு மணத்தால் சென்ற் அடிச்சுப்போட்டுப் படுப்பான். இல்லாட்டி தனக்கு தண்ணியடிச்சுப்போட்டுப் படுப்பான்.

எல்லாம் கொஞ்ச நாளுக்குத்தானே. பிறகு அவ வந்த பிறகு வீட்டை ஒரு கட்டுக்குள்ளை வைச்சிருப்பா தானே.. அவ வந்த கையோடை தமிழச்சனம் இல்லாத ஒரு வீட்டைப்பாத்து குடியேற வேணும் எண்டு சுந்து நினைக்க.. நீங்கள் சுந்துவுக்கு இன்னும் கல்யாணம் ஆகேல்லையோ எண்டு நினைப்பியள்.

ஓம்.. சுந்துவுக்கு இன்னும் கல்யாணம் ஆகேல்லை.. ஆனா ஆகப்போவுது. அது பெரிய கதை.. கொஞ்சம் பொறுங்கோ ஆற அமர இருந்து முதலேயிருந்து தொடங்கிறன்..

1 comment:

Anonymous said...

Aha.. Kilampiddankaiya