Monday, October 30, 2006

சர்வதேசத்தை ஏமாற்றுவோம்.

1
யாழ்ப்பாணம் இலங்கையின் இதர பகுதிகளிலிருந்து A 9 என்ற வீதியினூடாக இணைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணளவாக 4 லட்சம் மக்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர்.

இலங்கை அரச இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்தை இணைக்கும் A 9 வீதியானது புலிகளின் பகுதிகளினூடாகவே செல்கிறது.

யாழ்ப்பாணத்திற்கான ஒரேயொரு தரைவழிப்பாதையான இந்த வீதியை 2002 ம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி மக்கள் பாவனைக்கும், உணவுப்பொருட்கள் எடுத்துச் செல்வதற்குமாக, திறந்து விடுவதென புலிகள் தரப்பிலும் இலங்கை அரச தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது.

1995 புலிகள், யாழ்ப்பாணத்தை விட்டு வெளியெறிய பின்னர் 2002 வரை யாழ்ப்பாணம் தரைவழித் தொடர்பேதுமற்ற, இலங்கையின் இதர பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையாக இருந்தது.

இக்கால கட்டத்தில் உணவுப்பொருட்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவியது. கப்பலினூடாகவே உணவுப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. யாழ்ப்பாணத்திலிருந்து இதர பகுதிகளுக்கு விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் பயணிப்பதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டியும், பாதுகாப்பு அனுமதியை இராணுவத்திடமிருந்து பெறவேண்டியும் இருந்தது.

2002 புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் A 9 வீதி திறக்கப்பட, அது மக்களின் போக்குவரத்துக்கும், அவர்களின் உணவுத்தேவைக்கும் மிகுந்த வசதியாக அமைந்தது.

2
பாதையை மூடிவிடுவதானது ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலாகும்.

இவ்வருட நடுப்பகுதியில், இலங்கை இராணுவம் இந்தப் பாதையினை மூடியது. மீண்டும் யாழ்ப்பாணம் ஒரு சிறைச்சாலையானது. உணவுப் பொருட்களுக்கு அங்கு பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக பாதை மூடப்பட்டதாக இலங்கை இராணுவம் சொல்லியிருக்கிறது.

அதென்ன பாதுகாப்புக் காரணம்..?

இந்த வீதியின் முன்னரங்க புலிகளின் நிலைகள் மீது தொடர்ச்சியாக இராணுவம் எறிகணைத்தாக்குதல்களையும் அவ்வப்போது முன்னேற்ற முயற்சிகளையும் மேற்கொள்கிறது. (யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி இராணுவ முன்னகர்வுகளும் இடங்களைக் கைப்பற்றுதலும் ஒப்பந்த மீறலாகும்.)

இன்னொரு காரணம் மக்கள் மீது பட்டினியை ஏவி விட்டு உளவியல் ரீதியாக அவர்களை மழுங்கடித்தல்.

3
சுவிற்சர்லாந்துக்குப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். மனிதாபிமான பிரச்சனைகள் பற்றி, மக்களின் பட்டினி பற்றி தாம் பேசப்போவதாய் புலிகள் அறிவிக்க..

மக்களின் பட்டினி பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்காமல் இறுதித் தீர்வு பற்றி பேசப்போவதாக இலங்கை சொன்னது.

சர்வதேசமோ ஏதாவதென்றாலும் பேசுங்கள்.. ஆனால் பேசுங்கள் என்ற நிலையைத்தவிர வேறெதனையும் எடுத்ததாய் தெரியவில்லை.

பேச்சுவார்த்தையின் போது அரசு இறுதித் தீர்வு பற்றிப் பேசுவதே பொருத்தம் என சொல்ல, அப்படியானால் உங்களிடம் என்ன இறுதித் தீர்வு உள்ளது என புலிகள் தரப்பில் கேட்கப்பட்டதாம். அதற்கு அரசின் பதில் -

இப்போதுதான் இலங்கையில் இரு கட்சிகளும் ஒன்றாய்ச் சேர்ந்திருக்கின்றன. இனித்தான் இறுதி தீர்வு பற்றி நாம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்றார்களாம்.ஆக அவர்கள் என்ன பேசுவது என்ற தெளிவே இல்லாமல்த்தான் பேச்சுக்கு வந்துள்ளார்கள் போல..

--நோர்வேக்கு ஒரு கோரிக்கை: இனி புலிகளை சுவிசுக்கு அழைத்து வராமல் ரணில் கட்சியையும் மகிந்த கட்சியையும் ஒரு தரப்பாகவும் எதிர்த்தரப்பில் JVP கட்சியையும் அழைத்து வந்து இறுதி தீர்வு குறித்து பேச விட்டு வேடிக்கை பாருங்கள். அவர்களுக்குள் ஒரு இணக்கம் வருகிறதா என..--

இரு பிரதான கட்சிகளும் ஒன்றாய் இணைந்திருக்கின்றன என்பது உண்மைதான். இனி அவர்களுக்குள் பிக்கல்கள், பிடுங்கல்கள், முரண்கள் உண்டாகி அது தீர்ந்து, அப்படியே ஒரு தீர்வை உண்டாக்கினாலும், இருக்கவே இருக்கிறது நீதிமன்றம்.. அது தீர்வை முடக்க.. பிறகு முதலிடத்திலிருந்து பேச ஆரம்பிக்க..

அதுவரை மக்களின் பட்டினிக்கு என்ன தீர்வு?

நாள்தோறும் சாகும் பத்துக்கு மேற்பட்ட உயிர்களுக்கு என்ன தீர்வு..?

4
சுவிசில் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே இலங்கையில் இராணுவம் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்தது. இராணுவ முன்னகர்வுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தன.

ஒப்பந்தத்தின் படி இராணுவ முன்னகர்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என சர்வதேசத்தினால் இலங்கை அரசை அழுத்த முடியவில்லையா?

சர்வதேசத்தின் அழுத்தங்களை மீறித்தான் இலங்கை அரசு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனவா..?

வரும் நாட்களில் வடக்கில் இன்னொரு பாரிய இராணுவ நடவடிக்கையொன்றினை மேற்கொள்ள இராணுவம் தயாராவதாக சொல்லப்படுகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நகர்வுகளுக்கும் படுகொலைகளுக்கும் சர்வதேசத்திடம் ஏதாவது பதில் உள்ளதா..?

5
இது ஒரு சந்தேகம்

புலிகள் இராணுவ வலிமை பெற்றிருக்கும் வரை மட்டுமே சர்வதேசம் விழுந்தடித்து புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. உண்மையில் புலிகள் ஒரு பலமிழந்த அமைப்பாக இலங்கை அரசால் இலகுவாக வெற்றி கொள்ள முடிகிற ஒரு அமைப்பாக இருப்பின் இவ்வளவு ஈடுபாடு காட்டுவார்களா..?

அல்லது இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என சொல்லி விட்டு இருந்திருப்பார்களா..?

இனியும், ஒருவேளை இராணுவம் புலிகள் அமைப்பைத் தோற்கடித்து விட்டால், புலிகளைச் சர்வதேசம் பேச்சுக்கு அழைத்து வருமா? வராது..

6
புலிகள் தாம் தயாரித்து விட்ட நிகழச்சி நிரலில் தேவையான மாற்றங்களோடு பயணிக்கப் போகின்றார்கள். அவ்வப்போது சர்வதேசம் அழைத்தால் பேச்சுக்கு போவது உட்பட இலங்கை அரசின் பொருளாதார இராணுவ மையங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கி விட்டார்கள். சர்வதேசம் பற்றிய தெளிவான முகம் தெரிந்த பிறகு அதனை ஏமாற்றினால் தவறென்ன..? அவர்கள் ஏமாற்றவில்லையா..

6 comments:

ஈழபாரதி said...

நல்ல கட்டுரை, இதை தவிர வேறு வழியில்லை, போரிட்டுக்கொண்டு கதைத்தல். தேவைப்படும் போது ஜெனிவா வந்து உன்மைகளை சர்வதேசத்துக்கு கூறுதல். பிரச்சாரத்துக்கு ஜெனிவா போல ஒரு நல்ல இடம் கிடைக்காது. எமது பக்க நியாயத்தை சொல்லும் வரை சிங்கள அரசு அமைதியாக கேட்கவேண்டும். இலங்கையில் இது நடவாது. ஏன் சர்வதேசமும் கேட்கவேண்டும்.

Anonymous said...

புலிகள் மீண்டும் பேச்சுக்கு வருவார்கள்- பாதை திறந்தாலும் திறக்கா விட்டாலும்.

Anonymous said...

இப்ப வெளிநாடுகளிடம் தானே பந்து.

Anonymous said...

நல்ல கட்டுரை

Anonymous said...

என்னவோப்பா சனம் சாகாட்டி சரிதான்.

கொழுவி said...

கருருத்துக்கள் இட்ட அனைவருக்கும் நன்றி. இந்த நன்றி என்னத்துக்கெண்டு தெரியும் தானே..