Wednesday, December 24, 2008

யேசுவே நீர் இங்கு பிறக்க வேண்டாம்.

நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
தீபச்செல்வன்


வாழ்வுக்கு தவிக்கிற குழந்தைகள்
மறைந்திருக்கிற தரையில்
சிலுவைகள் புதைக்கப்பட்டிருக்க
யேசுவே நீர் இங்கு பிறக்க வேண்டாம்.

உமக்கான மாட்டுத்தொலுவங்கள்
எம்மிடம் இல்லை.
வைக்கோல் பட்டறைகளும் இல்லை;.

நீர் அறிந்திருக்காத சிலுவைகளை
நாம் சுமக்கிறோம்.

மழைக்காலத்தில் ஏணைகள்
இல்லாமல் தடிகளில் உறங்குகிற
குழந்தைகளை
வெட்டிப்போட கத்திகளுடன் திரிகின்றன
ஏரோது மன்னின் படைகள்.

குதிரைகள் அலருகிற இரவில்
குழந்தைகளை நாம் கட்டுக்குள்
கொண்டு வைத்திருக்கிறோம்.

படுக்கைகளில் குருதி வழிந்தோடுகிறது
தூக்கத்தில் பறி எடுத்த
குழந்தையை விமானம் தின்று
வீசிவிட்டுப் போகிறது.

நீர் மீண்டும் ஒரு சிலுவையை
இங்கு விட்டுச் செல்ல வேண்டாம்.

உம்மால் தாங்கிக் கொள்ள முடியாத
வலிகளான தொலுவங்களில்
போரிடம் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன
நமது தேசத்தின் குழந்தைகள்.

நீர் இந்த தேசத்தில்
இப்போது பிறக்க வேண்டாம்.

கத்திகள் அலைகிற காடுகளில்
நம்முடன் எங்கு வரப் போகிறீர்?
வெட்டுப்பட்ட சொற்களுடன்
நாம் ஒரு பாடலை தேடுகிற போரில்
நீர் சுமந்திராத
சிலுவைகளை சுமக்கிறோம்.

ஏராது மன்னன் பெரும் பசியுடன் வாளுக்கு
இரை தேடுகிற நாட்களில்
இங்கு எண்ணிக்கையற்ற மரியாள்கள்
தமது குழந்தைகளை கொண்டு ஒளிகின்றனர்.

No comments: